பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடா? தமிழ்நாடு அரசு கூட்டிய சட்டமன்றக் கட்சிக் கூட்ட முடிவை வரவேற்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடா? தமிழ்நாடு அரசு கூட்டிய சட்டமன்றக் கட்சிக் கூட்ட முடிவை வரவேற்கிறோம்!

நீதிமன்றம் செயல்பாடு ஒருபக்கம் - வீதிமன்றத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பொதுக்கூட்டம்- பேரணிகளை மிகப்பெரிய அளவில் நடத்துவோம்!

முதற்கட்டமாக சென்னையில் பெருந்திரள் பொதுக்கூட்டம்

திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள் - சமூக அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை, நவ.15 இந்திய அரசமைப்பின் அடிக்கட்டு மானத்தையே தகர்க்கும் பொருளாதாரத்தில் நலி வடைந்த உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக் கீட்டை (EWS) எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்திட தமிழ்நாடு தழுவிய அளவில் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (15.11.2022) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

1. ‘‘முன்னேறிய ஜாதியில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அர சமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத் துக்கு முரணானது என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும்,  நலிந்த பிரிவினரில் ஜாதிப் பிரிவினையைக் கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், அதனை நாங்கள்  நிராகரிக் கிறோம். இது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்பதான தீர்மானம் 12.11.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று,  நமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. பொருளாதார அளவுகோலைக் கொண்டு இட ஒதுக்கீடு தர முடியாது என இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் [15(4)] கொண்டு வந்தபோது, பொரு ளாதாரத்தில் பின் தங்கியோர் என்ற வாசகமும் இடம் பெற வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்திய போது, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்பது மட்டும்தான் வரலாற்று ரீதியாக சரியானது; பொருளாதார அளவுகோல் நிரந்தரமற்ற ஒன்று என்ப தாலும், அதனை நிராகரித்தனர். வாக்கெடுப்பில் 243 உறுப்பினர்கள் ‘சமூக ரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப் பட்டோர்’ என்பதற்கு ஆதரவாகவும், அய்ந்து உறுப்பினர்கள் பொருளாதார அளவுகோல் வேண்டும் என்றும் வாக்களித்தனர். 

தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த ரூ.9,000 ஆண்டு வருமான வரம்பு, கடும் போராட்டத்தின் காரணமாக, அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. 

ஆகவே, இந்த நிலையில், 103 ஆவது திருத்தச் சட் டத்தில் ‘பொருளாதார ரீதியாக மட்டுமே’ இட ஒதுக்கீடு அனுமதிக்கப்படுகிறது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகநீதிக்கும், இந்திரா சகானி வழக்கின் தீர்ப்புக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது;

103 ஆவது திருத்த சட்டம் செல்லும் என அய்ந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் மட்டுமே தீர்ப்பளித் துள்ளனர். ஏனைய இரண்டு நீதிபதிகள் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளனர்.

மூத்த நீதிபதி ரவீந்திர பட், இரண்டு முக்கிய காரணங்களை - அதாவது, பொருளாதார அளவுகோலை குறிப்பிட்ட முன்னேறிய ஜாதியினருக்கு மட்டுமே தர முடியாது. அனைத்துப் பிரிவு - ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையும் உள்ளடக்கித் தர வேண்டும். மற்றும் போதிய பிரதி நிதித்துவமின்மை என்கிற அளவு கோல், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கும்போது, உயர்ஜாதி நலிந்த பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் பற்றிய எந்த வாசகமும் இல்லாதது, சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. ஆகவே இச்சட்டம் செல்லாது என தீர்ப் பளித்துள்ளார். இதற்கு தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் ஆதரவு அளித்துள்ளார்.

நாட்டின் மிக முக்கியமான சமூகநீதிக் கொள்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பல பாதகங்களை ஏற்படுத்தும் என்கிற வகையில், இத்தீர்ப்புக்கு எதிராக மனுதாரர்கள் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

3. உயர்ஜாதி நலிந்த பிரிவினரில் ஏறத்தாழ 79 ஜாதிகள் பயனடைவார்கள் என்ற ‘மாயையை’ தற்போது தோற்றுவிக்க சிலர் முயல்கிறார்கள். இது பிற்படுத்தப் பட்டோரை, ஒடுக்கப்பட்டோரை பிரித்தாளும் ஏமாற்று தந்திரம் ஆகும். சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்த மாநிலம் தமிழ்நாடு. 1928 ஆம் ஆண்டு முதல் வகுப்பு வாரி உரிமை என்ற அடிப்படையில் நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அனைத்துப் பிரிவினருக்கும், முன்னேறிய பிரிவின ருக்கும், பார்ப்பனர்கள் உள்ளிட்டோருக்கும் அளித்த மாநிலம் தமிழ்நாடு. இதனை எதிர்த்து, தகுதிக்கும், திறமைக்கும் எதிரானது என்று கூறி, நீதிமன்றங்கள் சென்ற பார்ப்பனர்களின் செயலால், அதுவரை இட ஒதுக்கீடு பெற்று வந்த பார்ப்பனர்கள் தவிர்த்த ஏனைய முன்னேறிய சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை இழந்தனர் என்பது வரலாறு. ஆனால், இன்று பிற ஜாதிகளில் உள்ள  நலிந்த பிரிவினர் குறித்து ‘முதலைக் கண்ணீர்’ வடிக் கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

4. ஜாதிவாரியாக அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டால், மக்கள் தொகைக் கணக்கீடு அடிப்படையில் வகுப்புவாரி விகிதாச்சார முறை (Proportional Representation)  அளிப்பதுதான் சரியாக இருக்குமே தவிர, அதில் குறிப்பிட்ட முன்னேறிய ஜாதியினருக்கு மட்டும், ‘நலிந்த பிரிவினர்’ என அளிப்பது, முன்னேறிய ஜாதியில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வாய்ப்பை அளிக்கும் என்பது உறுதி.

5. இப்பிரச்சினை குறித்து நீதிமன்ற முறையீடு என்பதோடு நில்லாமல், மக்கள் மன்றத்திலும் தெளிவுபடுத்திட, பல்வேறு பகுதிகளிலும், நகரங்களிலும் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்திடவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து முதல் கட்டமாக அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்குகொள்ளும் பெருந்திரள் பொதுக்கூட்டத்தை விரைவில் சென்னை மாநகரில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

6. ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க முன்வருமாறு ஒன்றிய  அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பங்கேற்றோர்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் 

டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் 

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன்

மனிதநேய மக்கள் கட்சி ப.அப்துல்சமது

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் து.வெ.வேணுகோபால்

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் பெரு.தலித்ராஜா

ஆதித்தமிழர் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்மாறன்

விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார்

இணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் எஸ்.ஜெகதீசன்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி

டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.அண்ணாமலை

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன்

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி,

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்,

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்


No comments:

Post a Comment