அகில இந்திய தேசிய காங்கிரசின் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட இருவரில் - ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, பல்வேறு சோதனைகளை தமது வாழ்வில் சந்தித்த கருநாடக மாநிலத்தவரான பெருமகனார்தான் இப்போது பெருவாரியான வாக் காளரது முடிவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லி கார்ஜுன கார்கே அவர்கள்.
சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர், தாம் ஏற்ற எந்தப் பொறுப்பையும் திறம்படச் செய்து முத்திரை பதித்து வரலாறு படைத்தவர் திரு.மல்லிகார்ஜுன கார்கே அவர்களாவார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து அதன் நீண்ட வரலாற்றில் குறிப்பாக இவர் மூன்றாவதாக வந்துள்ளார். நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒருவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளவரும் இவரே என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
காங்கிரஸ் பேரியக்கம் எத்தனையோ தோல்வி களையும், சோதனைகளையும் கண்டிருந்தாலும், மீண்டும் சிலிர்த்து எழக் கூடிய வலிமை பெற்ற கட்சி அது; அதன் முக்கிய உழைப்பாளியாக ராகுல் காந்தி போன்ற நடுத்தர வயது செயல்வீரர்களும் இவரது தலைமைக்குக் கிடைத்துள்ளதும் அரிய வாய்ப்பே! நாட்டின் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதியும் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்படும் இக்காலகட்டத்தில், புதிய தலைமை 2024-லும் சரி, அதற்கு முன்பு நடைபெறவிருக்கும் இமாச்சலப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களிலும் சரி தொண்டர்களிடையே புத்தெழுச்சியை ஏற்படுத்தி, மக்கள் ஆதரவைத் திரட்டி ஒருமுகப்படுத்தி, புதுவெள்ளத்தைப் பாய்ச்சிடும் புதிய திருப்பம் உருவாக்குவதாக அமையட்டும்!
அவருக்குத் திராவிடர் கழகத்தின் நல்வாழ்த்துகள்!
No comments:
Post a Comment