பிற இதழிலிருந்து... நீதிபதிகளின் பேச்சைக் கேளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

பிற இதழிலிருந்து... நீதிபதிகளின் பேச்சைக் கேளுங்கள்!

'முரசொலி' தலையங்கம்

யார் பேச்சையும் கேட்காமல் வெறுப்புப் பேச்சை மட்டுமே விதைத்து வரும் மதவாத சக்திகளின் உச்சந்தலையில் கொட்டி இருக் கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

பா.ஜ.க. கட்சியானது ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பின்னால் இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் அதிகம் ஆகிவருகிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

"நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப் பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.” என்று இந்திய நீதித்துறையில் நீதியரசர்களாக பணியாற்றிய வர்கள் இந்திய அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை கொடுத்தார்கள்.

'நாட்டின் அரசமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் என்று பிரதமர் மோடிக்கு 108 பேர் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார்கள். மேனாள் நீதியரசர்கள், மேனாள் துணை நிலை ஆளுநர்கள், மேனாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள், மேனாள் வெளியுறவுச் செயலாளர்கள் இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள்.

"இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல, நாட்டில் அரசமைப்பு சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டது போல் உள்ளது. இந்தச் சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்களது மவுனம் காது கேளாதது போல உள்ளது” என்று பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த வெறுப்பு அரசியல் புதிய பரிமாணத்தை பெற்றி ருப்பதாக கூறியிருந்த அவர்கள், அரசமைப்பின் தனித்துவம் சிதைக்கப்படாமல் காக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாக தெரிவித்தி ருந்தார்கள்.

கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர் தங்களை அக்கறை உள்ள குடிமக்கள் என்று குறிப்பிட்டு இருப்பதோடு அதன் பின்னணியில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என கூறியிருந்தனர். இது ஏதோ முதல்தடவையாக இப்படி எழுதி இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி அறிவுரை கூறி வருகிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலை 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத் துக்குமான தேர்தலாக யோகி ஆதித்யநாத் சொன்னார். ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களை கூட்டி வைத்துக் கொண்டு, 'நீங்கள்தான் ஒரு காலத்தில் மொகலாயர்களை வீழ்த்தியவர்கள், அதே போல இப்போதும் வீழ்த்த வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் சொன்னார். இவைதான் வட மாநில வெறுப்பரசியலின் தூண்டுதலாக உள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் வெறுப்பு அரசியலின் மய்யமாக உள்ளது. இதனைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் ஷாஹீன் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் ஒருவழக்கை தாக்கல் செய்திருந்தார். "நாடு முழுவதும் இசுலாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இந்த விவகாரத்தில் சுதந்திரமான, நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தவறி ழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் டில்லி ஆகிய மாநிலங்களில் அண்மைக் காலமாக இந்து அமைப்புகளின் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் அதிகம் இருந்ததை சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகிய இருவரும் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து அதிகமான வருத்தங்களையும் கோபங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். "இது 21 ஆம் நூற்றாண்டு. அரசமைப்புச் சட்டத் தில் 51 கி பிரிவான அடிப்படை உரிமைகளில் அறிவியல் பூர்வமான மனப்பான்மையை நாம் வளர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மதத்தின் பெயரால் நாம் எந்த இடத்தை அடைந்துள்ளோம்? எந்த அளவு மதத்தின் மதிப்பைக் குறைத்துள்ளோம்?” என்று வருத்தப் பட்டுள்ளார்கள் நீதிபதிகள்.

"வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ முடியாத நேரத்தில் சகோதரத்துவம் எங்கே நிலவும்? வெறுப்புணர்வு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு சட்டப்பிரிவுகள் இருக்கும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத நடுநிலை நிலவ வேண்டிய நாட்டில் இத்தகைய பேச்சுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளைக் காக்க வேண்டிய தேவை உள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் அரசமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் காக்கும் கடமை இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது” என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், டில்லி மாநில அரசுகள் இதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். பதில் தரச் சொல்லி இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற நடவடிக்கையானது இத்தகைய வெறுப்புப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மதத்தைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை ஒன்றிய பா.ஜ.க. அரசும் - பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வெறுப்புப் பேச்சு என்றால் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடு தேவையில்லை. இந்த ஜாதி அந்த ஜாதி என்ற வேற்றுமை இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் எத்தகைய வெறுப்புணர்வு பேச்சும் வெறுக்கத்தக்கதே. கண்டிக்கக்கத்தக்கதே! இதில் மாற்றுக்கருத்து இல்லை!

நன்றி: 'முரசொலி' தலையங்கம் 24.10.2022


No comments:

Post a Comment