''வளர்ந்த மாநிலம் என கூறப்படும் தமிழகத்தில், இன்னும் பல இடங்களில் தீண்டாமை உள்ளது; இது வேதனைக்குரியது. அதிகார அரசியல், உண்மையை மறைத்து விட்டது,'' என, தமிழக ஆளுநர் ரவி தெரிவித்தார்.
நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர விழா, மகாத்மா காந்தி துவக்கிய ஹரிஜன் சேவா சங்கம் 90ஆம் ஆண்டு விழா ஆகியவை, சென்னை சேத்துப்பட்டு எஸ்.ஆர்.எஸ்., சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடந்தது.
விழாவில், விருதுகளை வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது: கல்வி, தொழில், உட்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியவற்றில், தமிழகம் முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சிக்கு உரியது. இந்தியாவில் கல்வி துறையில், 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 28 சதவீதம் பேர் தான் பள்ளி செல்கின்றனர்.
தமிழகத்தில் 51 சதவீத குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இது சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது; நாம் பெருமைப்பட வேண்டும். இதை உற்றுநோக்கினால் வேதனைதான் மிஞ்சுகிறது.
சில சமூகத்தினர் மட்டும் 70 முதல் 75 சதவீதம் கல்வி கற்பதும், பட்டியலின குழந்தைகள், 13 முதல் 14 சதவீதம் மட்டுமே கல்வி கற்பதும் தெரியும். இவ்விரண்டுக்கும் இடையிலான இடைவெளியை நாம் பார்க்க வேண்டும்.
சமூக நீதி, வளர்ச்சி குறித்து பேசுகிறோம். பாதிக்கப்பட்ட மக்களை மறந்து விட்டோம்; அடித்தட்டு மக்கள் குறித்து பேசுவதில்லை. தமிழகத்தில் இன்னும் தீண்டாமை உள்ளது. பல பொது இடங்களில், பள்ளிகளில், கோவில்களில், பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. நீர் நிலைகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
வளர்ந்த மாநிலம் எனக் கூறும் நிலையில், தீண்டாமை இருப்பது வேதனைக்குரியது. இது மிகவும் வெட்கக் கேடானது. இதுகுறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதிகார அரசியல் உண்மையை மறந்து விட்டது. தீண்டாமையை கடைப்பிடிப்போருக்கு எதிராக, கடுமையான சட்டங்கள் இருந்தும், இவை இன்னும் நடக்கின்றன.
பட்டியலின ஆண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் 75 சதவீதம் பேர்; பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர், தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின்றனர். இதுவே இக்குற்றங்கள் தொடர காரணம்.
நாம் வளர்ந்து விட்டோம் என தினமும் கூறுகிறோம். இது பொய். பாதிக்கப்பட்டவர்களின் குரல் வெளியில் தெரிவதில்லை. பட்டியலின மக்களும் நம் மக்கள். அவர்களின் நிலை மேம்பட, உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
('தினமலர்' - 18.10.2022 பக்.7)
ஆளுநர் பேச்சின் தோரணை என்பது ஆளுநர் என்ற பொது நிலையில் இருந்து கருத்துக் கூறுவதாகத் தெரியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, ஓர் அரசியல்வாதியைப் போல் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசுவது சரியானது தானா?
தீண்டாமை அறவே ஒழிந்துவிட்டது என்று மார் தட்டவில்லை. அதேநேரத்தில் அதனை ஒழிக்கும் கொள்கையைக் கொண்ட 'திராவிட மாடல்' அரசு நடந்து கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களை நோக்கும்போது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பில் முன்னணி மாநிலம் தானே!
ஆர்.எஸ்.எஸ். வாதியாகப் பேசும் ஆளுநருக்கு ஒன்றை நினைவூட்டுகிறோம் - உ.பி.யில் பிஜேபிதானே அதிகாரத்தில் இருக்கிறது. அதுவும் சாமியார் முதலமைச்சர்.
அவர் தலித் மக்கள் வாழும் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?
முதல் நாளே அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சோப்பும், வாசனைப் பொருள்களும் கொடுப்பது எந்த அடிப்படையில்? செத்துப் போன பசுவின் தோலை உரித்த தலித் மக்களைக் கொன்றவர்கள் யார்? அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் தானே இவர்களின் ஜெகத் குரு. தீண்டாமைக்கு மூலவேராக இருக்கக் கூடிய ஸ்ருதி, ஸ்மிருதிகளைக் கொளுத்திடத் தயார்தானா?
"ஹிந்துவாகப் பிறந்தேன். ஆனால் ஹிந்துவாக சாக மாட்டேன்" என்று 5 லட்சம் பேர்களுடன் அண்ணல் அம்பேத்கர் ஏன் பவுத்தம் தழுவினார்?
வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசுவது ஆளுநருக்கு அழகல்ல!
No comments:
Post a Comment