எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

 தமிழ்நாட்டில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். வைத்துள்ள அடுக்கடுக்கான திட்டங்கள்!

தி.மு.க. தலைமையிலான 'திராவிட மாடல்' அரசைக் குறி வைக்கிறார்கள்!

தமிழ்நாட்டின் கருப்பு - சிவப்பு - நீலம்- கதர் அடையாள சக்திகளே காவிக்கு மாற்றாக எழுந்து நின்று முறியடிப்போம்!

சமூகநீதி - மதச்சார்பின்மையைக் காப்பாற்றவேண்டிய முக்கிய தருணம் இது!

தமிழ்நாட்டில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். வைத் துள்ள அடுக்கடுக்கான திட்டங்கள்! தி.மு.க. தலைமையிலான 'திராவிட மாடல்'  அரசைக் குறி வைக்கிறார்கள்! தமிழ்நாட்டின் கருப்பு - சிவப்பு - நீலம் - கதர் அடையாள சக்திகளே, காவிக்கு மாற்றாக எழுந்து நின்று முறியடிப்போம்! சமூகநீதி - மதச்சார்பின்மையைக் காப்பாற்றவேண்டிய முக்கிய தருணம் இது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

தி.மு.க. தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படும் மதச்சார்பற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களே!

தமிழ் இன உணர்வாளர்களே, திராவிட பண்பாடு காக்கப்பட நாளும் பலமுனைகளில் தமிழ்நாட்டில் செயல்படும் அருமை மொழி இன உணர்வாளர்களே,

இணைய தளத்தில் வந்த  அபாயகரமான தகவல்கள்!

இணைய தளத்தில் வந்துள்ள கீழ்க்காணும் செய்திகளை ஆழ்ந்து படியுங்கள்!

நண்பர் ‘ராஜ சங்கீதன்' அனுப்பியுள்ள இச்செய்தியை, தமிழிலும், ஆங்கிலத்திலும், தனிச் செய்தியாகவும் இணையத்தில் படித்தேன்!

எப்படி கோவிட்-19 பல மாற்று உருவம் எடுத்து, குரங்கு அம்மை மற்றும் வேறு வகை உருமாறிய கோவிட் ஆக மீண்டும்படையெடுத்து, மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக உலா வருகிறதோ, அப்படி ஆரிய சனாதன மதவெறி பரப்பி இந்திய நாட்டின் பன்முக கலாச்சாரத்தை அழித்து, ஒழித்து, ‘இந்துராஷ் டிரம்' என்ற ஒரே மதம், ஒரே மொழி ‘சமஸ்கிருதம்', ஒரே ஒற்றை ஆட்சி, ஒரே பண்பாடு - சமஸ்கிருத ஆரியப் பண்பாடு, ஒரே ஆட்சி - மாநில அரசுகளே அற்ற ஒற்றை அதிகார ஆட்சிக் குடையின்கீழ் கொண்டு வந்து, சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் விடை கொடுத்துவிட்டு, மீண்டும் பழைய மனுதர்ம சாம்ராஜ்ஜியத்தை நிலை நாட்டி பார்ப்பனியப் பதாகையைப் பறக்கவிட்டு, ‘‘அகண்ட பாரதம்'' என்ற கோட்சேயின் கனவை செயலு ருவாக்கத் திட்டமிட்டு வெளிப்படையாகப் பேசிவரும் ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டை - பெரியார் மண்ணை - சமதர்ம, சமூகநீதி, சுயமரியாதை உணர்வு படர்ந்துள்ள பூமியை, காவி மயமாக்கிட களத்தில் இறங்கிவிட்டனர் என்பதற்கு இதோ இந்தச் செய்தியே - மறுக்க முடியாத ஆதாரமாகும்!

இதோ ‘ராஜசங்கீதன்'  அனுப்பிய செய்தி:

ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கைகள்!

‘‘ * நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1500 ஷாகா கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது.

* வாரச் சந்திப்புகள் மாநிலம் முழுக்க 600 இடங்களில் நடக்கின்றன

* மாதாந்திரக் கூட்டங்கள் 400 இடங்களில் நடத்தப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே கொடுத்திருக்கிறார்.

எங்கு தெரியுமா? (தமிழ்நாட்டில்)

ஆர்.எஸ்.எஸ். - சமூக சமத்துவம், சமூகநீதி போற்றும் அமைப்பாம்!

ஆகஸ்ட் 16 ஆம் தேதி தமிழ்நாட்டு ஊடகங் களின் ஆசிரியர்களை சந்தித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை(!) விளக்கி இருக்கிறார். 2025 இல் நடக்கவிருக்கும் 

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டின் தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாட்டில் தடம் பதிக்க விரும்பிப் பேசியிருக்கிறார்.

நம் ஆசிரியர்களும் சும்மா இல்லை. அவர் களின் ‘பெரும்பான்மை எதேச்சதிகாரம்', ‘தாய் மதம் திரும்புதல்'  என்பனபற்றி பல கேள்வி களைக் கேட்டுள்ளனர். பொதுச்செயலாளர் பொறுமையாக பதிலளித்திருக்கிறார். என்ன வென தெரியுமா?

‘‘* ஆர்.எஸ்.எஸ்., சமூக சமத்துவம் மற்றும் சமூகநீதி போற்றும் அமைப்பு.

* இந்திய மனங்களை காலனியாதிக்கத்திலிருந்து விடுவிக்க உருவாகிய அமைப்பு.

* அரசியல் சாசனத்தை மதிக்கும் அமைப்பு''  என்றெல்லாம் பேசி இருக்கிறார். 

ஓர்  ஆசிரியர், ‘தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முடியாது' என்றதும், வெகுண்டெழுந்து 'காங்கிரஸ் மட்டும் காலூன்றி விட்டதா' எனக் கேட்டிருக்கிறார் தத்தாத்ரேயா.

இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோவில்களை விடுவிக்கப் போகிறார்களாம்!

எல்லா முயற்சிகள் எடுத்தும், தமிழ்நாட்டில் இருக்கும் திராவிடப் பாரம்பரியத்தால் வளர முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக் கிறார். கோவில் நிர்வாகங்களைக் கையில் எடுக் கும் உத்தியை எடுத்திருப்பதாக ஒப்புக்கொள் கிறார். இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோவில் களை விடுவிக்கும் பிரச்சாரம் தொடரப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

ஹிந்துத்துவ, ஆரிய பண்பாட்டுக்கு எதிராக திராவிடப் பண்பாடு அரசியலாகி நிற்கிறது. 

இன்னும் ‘பண்பாடு எல்லாம் வேஸ்ட்' எனப் பேசுபவர்களின் மரபணுவை பரிசோதித்துப் பாருங்கள். டைனோசர் அல்லது தகவமைக்க முடியாமல் அழிந்து போன நியாண்டர்தல் மரபணு தொடர்ச்சியைக் கொண்டிருக்கலாம். இல்லையெனில் ஸ்டெப்பி புல்வெளியின் பாரம்பரியத்தை மனதில் அணிந்திருக்கலாம்.

‘நியூஸ் மினிட்டில்' வெளியாகி இருக்கும் இக்கட்டுரை சொல்வது ஒரு விசயத்தைத் தான்:

அவர்கள் ஓய்வதாக இல்லை.'' 

- ராஜசங்கீதன்

சங் பரிவார்களின்  திரிசூலங்கள்!

படித்தீர்களா?

மிகப்பெரிய ஆபத்து, தமிழ்நாட்டிற்கு ஏற்படவிருப் பதை அறிந்து, முற்போக்காளர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்த குரலில், ஒரே இலக்கோடு -

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை மதவெறி அமளிக் காடாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸை ஒரு போதும் காலூன்ற விடமாட்டோம் என்பதை கங்கணம் கட்டிய உறுதியாக்கிக் களம் காணத் தவறக்கூடாது!

அவர்கள் பேசுவது ‘‘சனாதனம்.''

ஆனால், அவர்கள் பொய்யும், போலியுமான செய்திகளை அதிகமாகப் பரப்புவதற்குக் கையிலிருக்கும் இணைய தள மின்னணு விஞ்ஞானத்தைப் பயன்படுத்து கின்றனர்!

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இந்தக் கலவரம் விதைத்து - இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் மதவெறி நஞ்சைப் புகுத்தும் கொடுஞ்செயலை  அனுமதிக்கப் போகிறதா?

‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராக இப்போது திரிசூல முயற்சியாக,

1.  ஆளுநர் ரவியின்மூலமாக ஒரு போட்டி அரசு (மசோதாக்களை கிடப்பில் போட்டு) திராவிடத் தத்துவங் களை எதிர்த்துப் பல ‘‘வித்தைகளை'' நாளும் செய்து வருகிறது.

2. ‘நீட்', ‘கியூட்', ‘புதிய கல்விக் கொள்கை' என்ற பெயரில் கல்வியைக் காவி - மனு மயமாக்கும் அதிகார யுக்திகள் - ‘திராவிட மாடல்' அரசுக்கு நிதி மூலமும் நெருக்கடி தருவது.

3. அண்ணாமலை போன்ற விபீஷணர்களின் விதண்டாவாத விவரமற்றப் பிரச்சாரங்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுதல்.

இந்தப் பலூன்களைக் குண்டூசிகளால் ஒரு நொடியில் தமிழ்நாடு உடைத்தெறியும்!

அரசமைப்புச் சட்டத்தை மதிக்கிறோம் என்று உதட் டளவில் கூறிவிட்டு, உண்மையில் அதன் அடிக்கட்டு மானங்களை (மாற்றக் கூடாத பகுதி) கரையான் அரிப்பது போல அரிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்.

இறையாண்மை - இந்திய அரசமைப்புச் சட்டப்படி இருப்பது யார் கையில் தெரியுமா?

மக்களிடம்! ஆம், மக்களிடம்தான்!

தமிழ்நாட்டு முற்போக்கு, ஜனநாயக சக்திகளே சமதர்ம விரும்பிகளே, சமூகநீதிப் போராளிகளே!

உதவாதினி தாமதம்! உடனே அவரவர் கட்சி அளவிலும், கூட்டணி அளவிலும் பிரச்சாரம், களமாடும் செயல்முறைத் திட்டங்கள் என்ற தடுப்பூசிகளைப் பரப்பிடுவீர்!

தீயணைப்பு வேகத்தில் திறந்த மனதோடு ஒருங் கிணைந்து செயல்பட்டால் ஒழிய, தமிழ்நாட்டை மட்டு மல்ல; இந்தியாவைக் காவிகளிடமிருந்து, சாமியார்களி டமிருந்து, கபட வேடதாரிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை நான்காகப் பிளவுபடுத்தும் தந்திரம்!

தமிழ்நாட்டு எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை நான்கு பிளவாக்கி, நான்கையும் வலுவிழக்கச் செய்ய வழக்கு மன்றத்தில் காலந்தள்ளிடும் நிலைக்கு ஆளாக்கி, ‘‘பொம்மலாட்ட விளையாட்டை'' - அதனை இயக்கிடும் கயிறுகளை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கைகளில் வைத்திருக்கின்றன.

இது தெரிந்தோ, தெரியாமலோ இதில் எந்தக் கருத் தையும் இதுவரை கூறாத தி.மு.க.வின்மீது, அ.தி.மு.கவின் பல குழுக்களும் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, பணத்தைத் தொலைத்தவன், தொலைத்த இடத்தை விட்டு, வேறு எங்கோ தேடிய ஏமாளிகளைப்போல், பரிதாப நிலையில் உள்ளனர்!

தி.மு.க.வும், ‘திராவிட மாடல்' ஆட்சியும்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளுக்குக் குறியாம் - அதில் அவர்கள் ஓய்வதாக இல்லையாம்!

நாமும் அம் மதவெறி நோய் விஷக்கிருமிகளை விடுவதாக இல்லை.

தி.மு.க. ‘திராவிட மாடல்' ஆட்சியின் வலிமை வெறும் கோட்டை கொத்தளத்தில் இல்லை; தமிழ்நாட்டுத் திராவிட உணர்வு படைத்த மக்களின் இரும்பு மன மென்னும் எஃகுக்கோட்டையில்தான் இருக்கிறது!

பல காலம் முன்பே ‘ட்ரோஜன் குதிரைகளை' அடையாளம் காட்டி, எச்சரிக்கை மணி அடித்த மண், இந்த மண்!

பிரச்சாரப் பேராயுதம் முதல் தடுப்பூசி!

கோவில், கடவுள் பக்தி என்ற மயக்க மருந்துகள் கைக்கொடுக்காது!

பக்திக்கும், புத்திக்கும் வேறுபாடு தெரிந்த மண்- தமிழ் மண். கடவுள் பக்தி, கோவில் என்ற மயக்க மருந்துகள் அவர்களுக்குக் கைகொடுக்காது. இனியும் கைகொடுக்காத அளவுக்கு உரிய நடவடிக்கை, அனைத்துத் தரப்பு விளக்கங்கள், வினைகள்மூலம் அவர்கள் விழிபிதுங்கச் செய்து காட்டி, ‘‘திராவிட மாடல்'' ஆட்சியை கண்ணை இமை காப்பதுபோல் காத்து, இந்தியாவில் காவிக்கு மாற்று கருப்பும் - சிவப்பும் - நீலமும்தான் என்று காட்ட முழுத் தயார் நிலையில் தமிழ் மண்ணை இந்தியத் திருநாட்டை மதச்சார்பற்ற சமூகநீதி சமதர்மத்தைக் காப்பாற்ற சரித்திரம் படைக்கும் தருணம் இது!

சிந்திப்பீர், செயல்படுவீர் - விரைந்து!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

19.8.2022


No comments:

Post a Comment