உள்நாட்டில் மட்டுமல்ல - உலக வம்பை விலைக்கு வாங்கும் ஹிந்துத் துறவிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

உள்நாட்டில் மட்டுமல்ல - உலக வம்பை விலைக்கு வாங்கும் ஹிந்துத் துறவிகள்!

இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற உத்தரப்பிரதேசத்தில் துறவிகள் சட்ட திட்ட வரைவை வகுத்துள்ளனர். இதில், தலைநகராக வாரணாசியும், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பன போன்றவையும் இடம் பெற்று உள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் சங்கராச்சாரியா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி அனந்த்ஸ்வரூப் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். முக்கிய துறவி களுடன் ஹிந்துமத ‘அறிவுஜீவி’கள் சேர்ந்து சுமார் 30 பேர் இதில் கலந்து கொண்டனராம். இவர்கள், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதற்கான சட்ட திட்டங்களுக்கான வரைவை தயாரித்துள் ளனர். அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் வரவிருக்கும் மக்மேளாவின் போது, துறவிகள் மாநாட்டின் முன் இந்த வரைவு குறித்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் என்பது  தர்மசபை ஆகுமாம்

‘அகண்ட பாரதம்’ எனும் பெயரில் ஹிந்து அரசின் கொள்கைகளாக மொத் தம் 750 பக்கங்களைக் கொண்டுள்ளது இந்த வரைவு. சுமார் 300 பக்கங்களில் முக்கிய சட்டங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதர பக்கங்களில், சட்டம், கல்வி, நிர்வாகம், பாதுகாப்பு, தேர்தல் உள்ளிட்ட வற்றின் செயல்பாடுகளும் இடம் பெற் றுள்ளன. அகண்ட பாரதத்தில் உத்தரப் பிரதேச துறவிகள் வகுத்துள்ள ஹிந்து நாட்டின் புதிய தலைநகராக வாரணாசி இருக்குமாம். தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு குருகுலக் கல்வி அறிமுக மாகுமாம். நாடாளுமன்றத்தை இனி தர்மசபை என அழைக்க வேண்டும், 16 வயதினருக்கும் வாக்குரிமை அளிக்கப் படும். தேர்தலில் போட்டியிடும் வயது 25 ஆகும், ஆனால், முஸ்லிம் மற்றும் கிறிஸ் தவர்களுக்கு தேர்தல்களில் வாக்குரிமை அளிக்கப்படாது. இதுபோல், பலவும் மத நல்லிணக்கத்தைக்  குலைக்கும் சர்ச்சைக் குரிய பல கொள்கைகள் இடம் பெற்றுள்ள தாக புகார்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.இதுகுறித்து இக்கூட்டத்தை நடத்திய சுவாமி அனந்த் ஸ்வரூப் கூறும்போது, ‘‘அகண்ட பாரதக் கொள்கையின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகியவற்றை ஒரு நாள் இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் அனுபவிக்கலாம். சட் டங்கள் த்ரேத்தா, சுவப்ரா யுகங்களின்படி அமலாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் இராணுவப் பயிற்சி கட்டாயம், விவசாயத் திற்கு வரி இல்லை’’ என்றார்.

கடவுளர் உருவப்படங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் அலகாபாத்தில் அனைத்து மடங்களின் தலைமைத் துறவி களின் தர்மசபை நடைபெற்றது. இதில் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி இந்த ஹிந்து நாட்டிற்கான சட்டதிட்ட கொள்கைகள் வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவிற்கான கூட்டத்தில் முக்கிய தலைவர்களாக சம்பவி பீடா தேஷ்வர், ஹிந்து ராஷ்டிரிய நிர்மாண் சமிதியின் தலைவர் கமலேஷ்வர் உபாத்யா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.என்.ரெட்டி, பாதுகாப்புத் துறையின் நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்மத்தின் முக்கிய கர்த்தாவான சந்திரமணி மிஸ்ரா, டாக்டர் வித்யாசாகர் மற்றும் விஷ்வ ஹிந்து மகா சங்கத்தின் தலைவர் அஜய்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வரைவில் ஹிந்துக் கடவுளர்கள் உள்ளிட்டோரின் உருவப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், துர்கா மாதா, ராமன், கிருஷ்ணன், கவுதம புத்தர், குரு கோவிந்த் சிங், ஆதி சங்கராச்சாரியா, சாணக்கியன், வீர் சாவர்க்கர், ஜான்சி ராணி இலக்குமிபாய், பிருதிவிராஜ் சவுகான் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஆட்சி அதிகார பீடத்தில் பிஜேபி அமர்ந்தாலும் அமர்ந்தது; அவ் வளவுதான் - நாடே இரணகளப்பட்டுக் கிடக்கிறது.

என்னவென்று புகல்வது!

சங்பரிவார்களின் சட்டாம்பிள்ளைத் தனம் கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு விட்டது. இப்பொழுது இந்தத் துறவிகள் இந்தியாவுக்கான சட்டத்தைத் தயாரித்துள் ளனர் என்றால் - இதில் ஒன்றிய அரசுக்கோ, பிஜேபி சங்பரிவாரத்துக்கோ தொடர்பு இல்லை என்று நினைத்தால் அவர்களை விட ஏமாளிகள் வேறு எவரும் இருக்க முடியாது.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோல துறவிகளை விட்டு ஆழம் பார்க்கின்றனர் (Feeler).

இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம் இருக்க வேண்டும் என்று கோல்வால்கர் கூறுகிறார். 

பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் (1981) அம்பேத்கர், மகாத்மா பூலே, காந்தியார், கோல்வால்கர் படங்க ளோடு  மனுதர்ம சாஸ்திர நூலையும் அலங்கரித்து எடுத்துச் சென்றனர்.

மனுதர்மத்தை எரித்த அம்பேத்கரை யும், சங்பரிவார்களால் கொல்லப்பட்ட காந்தியார் படத்தையும், பார்ப்பன சூது களையும்,  வர்ணாசிரமத்தையும் எதிர்த்த மகாத்மா ஜோதி பாபுலே படத்தையும், பிறப்பினால் பேதம் பேசும் மனுதர்மத் தையும்  அலங்கரித்து எடுத்துச் செல் கின்றனர் என்றால் இவர்களின் இரட்டை வேடத்தையும், விஷமப் புத்தியையும்  என்னவென்று புகல்வது!

குடி மக்கள் உரிமையும் கிடையாதாம்!

குருஜி கோல்வால்கர் வரையறுக்கப் பட்ட நமது தேசியம்   (We or Our Nation hood Defined)  என்ற நூலில் என்ன குறிப்பிடுகிறார்?

“ஹிந்துஸ்தானில் உள்ள ஹிந்து அல் லாதவர்கள் அன்பு தியாகம் போன்றவை களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டவர் களாகக் கருதக் கூடாது அல்லது  இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகையையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்கள் உரிமையும் இன்றி வாழ வேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது ஹிந்து சாமியார்கள் தயாரித்துள்ள அரசமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கும்,  கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்று வரை யறுக்கின்றனர்.

ஹிந்து சாமியார்கள் 750 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு திட்டத்தை வெளி யிட்டுள்ளனர் என்றால் இவை இந்திய  அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான வையல்லவா? அவர்கள்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடி ‘தாம்தூம்‘ என்று தாண்டிக் குதிக்கிறார் பிரதமர் மோடி ஒரு பக்கத்தில் - இன்னொரு பக் கத்தில் அதற்கு நேர் எதிரான திட்டத்தைத் தயாரிக்கின்றனர் இவர்களின் பாது காவலர்கள்  (Guard Fathers). 

இந்தக் கூட்டத்தின் இரட்டை வேடம் புரிகிறதா?

விநாசகாலே  விபரீத புத்தி!

இன்னொரு ஆபத்தான நச்சு விதை களையும் ஊன்றுகின்றனர். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம், இலங்கை மற்றும் மியான்மரையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பார்களாம்.

உள்நாட்டில் மட்டுமல்ல; வெளி நாட்டுக் கலகத்தையும் விலைக்கு வாங் கப் போகிறார்கள்!

இவ்வளவு நடந்தும் பிரதமரின் வாயும், அதிகார வாயும் மூடிக் கிடப்பது ஏன்? ஏன்? ‘விநாசகாலே விபரீத புத்தி!’

No comments:

Post a Comment