நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி "வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கும் இந்துக்கள் போகவில்லையா? ஏன் குறுகிய பார்வை” - நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி "வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கும் இந்துக்கள் போகவில்லையா? ஏன் குறுகிய பார்வை” - நீதிமன்றம்

மதுரை, ஜூலை 5 கன்னியாகுமரி ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "ஆதிகேசவ பெருமாள்  கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

திருவட்டாறில் அமைந்துள்ள இந்தக் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலின் முடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தாந்திரிக விதிப்படி குடமுழுக்கு விழாவின் போது, கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையை கழற்றி விட்டு பங்கெடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைப்பிடிக்க படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது.

 ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு  ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, "கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் கோவில்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும்போது, அவர்களை நிறுத்தி மதத்தினை உறுதிசெய்வது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், "கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு அவர் இந்து அல்ல ஆனால் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார் என தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் “பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஏராளமான இந்துக் கடவுள்களின் பாடல்களை பாடியுள்ளார். அவை கோவில்களிலும் ஒலிக்கப்படுகின்றன.

வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. இந்த விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.   

கன்னியாகுமரி மாவட்டத்தைச்சேரந்த பாஜகவினர் மற்றும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி கடந்த மாதம் நடந்த கோவில் தேரோட்டத்தில் மனோஜ் தங்கராஸ் கலந்துகொள்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். தற்போது நீதிமன்றத்திலும் பினாமி பெயரில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக வாழும் மாநிலத்தில் ஒரு சில பாஜகவினர் சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவினரும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்திக் கலவரத்தை தூண்ட பெரும் முயற்சி செய்துவருகின்றனர். 


No comments:

Post a Comment