ஹிந்தி எதிர்ப்பு மாநாடு (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

ஹிந்தி எதிர்ப்பு மாநாடு (2)

திராவிடர் கழகம் கடந்த 4ஆம் தேதி நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பல முக்கிய அம்சங்களை அடி நாதமாகக் கொண்டவையாகும்.

(1) இந்தியா ஒரு துணைக் கண்டம் - ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்கள் திரும்பத் திரும்ப சொல்லுவது போல ஒரே நாடு அல்ல.

(2) இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமல்ல - இந்தியா என்பது  ஹிந்துக்கள் உள்பட பல்வேறு மதங்களுக்கும் - மதச் சார்பற்ற பகுத்தறிவாளர்களுக்கும் சொந்தமான நாடாகும்.

இன்னும் சொல்லப் போனால் ஹிந்து மதத்துக்குள் பல பிரிவுகள் - பிளவுகள் உண்டு; ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதோடு ஹிந்துகளுக்குள் ஒரு பிரிவினரும் இன்னொரு பிரிவினரும் மோதிக் கொள்ளும் நிலையும் உண்டு.

சில நாட்களுக்கு முன்புகூட காஞ்சிபுரத்தில் வைணவர் களுள் வடகலை- தென்கலை பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவு சென்னை உயர்நீதிமன்றம் வரைகூட சென்றது நினைவிருக்கலாம்.

காஞ்சிபுரம் கோவில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா; தென் கலை நாமம் போடுவதா என்ற வழக்கு இந்தியாவையும் தாண்டி இலண்டன் பிரிவிக் கவுன்சில்வரை (Privy Council) சென்றதெல்லாம் உண்டு.

சைவர்கள் ஹிந்துக்கள் அல்லர்; ஹிந்து மதம் வேறு, சைவ மதம் வேறு என்று தமிழ்க் கடல் மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, நாவலர் சோம. சுந்தர பாரதியார் போன்றோர் ஆணி அடித்ததுபோல கூறியுள்ளனர்.

இதற்கு மேலும் முக்கிய கருத்து ஒன்று உண்டு. ஹிந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு என்பதுதான். இன்னும் சொல்லப் போனால் ஹிந்து என்ற பெயரை இம்மதத்துக்குக் கொடுத்தவனே வெள்ளைக்காரன்தான் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டுள்ளார். ("தெய்வத்தின் குரல்" பாகம் 1 பக்கம் 267-268).

இந்த நிலையில் உள்ளவர்கள் ஒரே மதம் - அதுவும் ஹிந்து மதம் என்பதெல்லாம் எவ்வளவுப் பெரிய மோசடி!

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் கூறுகிறார் ("ஞான கங்கை").

இத்தகைய அடிப்படைவாதம் கொண்ட கட்சி அதிகார பீடத்தில் இருப்பதால் தங்களுடைய கலாச்சாரமே இந்தியாவின் ஒரே கலாச்சாரம் என்று முரட்டுக்காளைபோல முட்டுகிறார்கள்.

இதன் ஆணி வேரான உண்மை என்ன தெரியுமா? சமஸ்கிருதம் என்று சொன்னாலும் சரி. அதன் குட்டியான ஹிந்தி என்று சொன்னாலும் சரி, ஒரே கலாச்சாரம் என்று சொன்னாலும் சரி, ஒரே மதம் என்று சொன்னாலும் சரி இதனுடைய நுட்பமான பொருள் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதுதான். மீண்டும் மனுதர்ம ராஜ்ஜியத்தை உண்டாக்குவதுதான்.

ஹிந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பனீய - சனாதன எதிர்ப்பு - பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை இப்பொழுது மட்டுமல்ல, 1931ஆம் ஆண்டிலேயே நன்னிலத்தில் நடைபெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டில் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.

"பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர, வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்கள் படிக்கும்படிச் செய்வது, பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடைப் பரப்பவும், புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும் உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே (தாய்மொழிக்கு அடுத்தபடியாக) நமது இளைஞர்கள் கற்க வேண்டும்" என்று இன்றைக்கு 91 ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதை இயக்க மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றைக்குக்கூட பார்ப்பன ஏடுகளும் - தொலைக்காட்சிகளில் விவாதம் செய்யும் பார்ப்பனர்களும் சுருதி பேதமில்லாமல் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுவதைப் பார்க்க முடிகிறதே!

தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் வரை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை பார்ப்பனீயப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் முனைப்பை மேற்கொள்ளும் காரணம் புரிகிறதா? கடந்த 4ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாடு என்பதை இந்த வரிசையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment