உலகில் மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கிறது மாரடைப்பு. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரப்படி, மாரடைப்புக்கு ஆளாவோர் வேகமாக அதிகரித்து வருகின்றனர்.
ஆனால், இதயநோய்க்கான சிகிச்சை முறைகள் குறைவாகவே இருக்கின்றன. அத்தோடு, அவற்றுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களால், அச் சிகிச்சைகள் அனைவருக்கும் எட்டக்கூடியவையாக இல்லை.
இந்த நிலையில், மரபணு சிகிச்சையால், பரம்பரை மாரடைப்பு நோயை தடுக்க முடியும் என்கின்றனர் வெர்வ் தெரப்யூடிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்.
உலகெங்கும், 3.1 கோடி பேர் பரம்பரை இதய நோய் உள்ளவர்கள்.இதய ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் சேராதபடிக்கு மனித மரபணுவில் திருத்தம் செய்வது, மாரடைப்பு வரும் வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துவிடும் என வெர்வ் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.
ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஒருவர், வெர்வின் இணை நிறுவனராக உள்ளார். முதலீட்டு ஜாம்பவானான 'கூகுள் வென்ச்சர்ஸ்', வெர்வ் தெரப்யூடிக்சில் முதலீடு செய்துள்ளது.வெர்வின் மருத்துவர்கள், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட, 'கிறிஸ்பர் ஜீன் எடிட்டிங்' என்ற மரபணு திருத்த கருவியை பயன்படுத்துகின்றனர் இந்த முறை சற்றே சர்ச்சைக்குரியது என்றாலும், வேறு துறைகளில் நல்ல பலன்களை தந்துள்ளது.
பரம்பரையாக இதயநோய் வராமல் தடுப்பதற்காக ஒரே ஒருமுறை செய்யப்படும் சிகிச்சையாக இது இருக்கவேண்டும் என வெர்வ் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த புதிய மரபணு சிகிச்சை முறையை, ஏற்கெனவே பரம்பரை காரணமாக மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு பயன்படுத்த வெர்வ் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment