அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவருக்கான புதிய உணவு பட்டியல்: அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவருக்கான புதிய உணவு பட்டியல்: அரசாணை வெளியீடு

சென்னை, ஏப்.6- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப் படும் உணவுக்கான புதிய பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மை யினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 1,354 பிற்படுத் தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கிப் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு கல்லூரி, அய்.டி.அய். மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

9.7.2021 அன்று இந்த விடுதிகள் தொடர் பாக முதல்-அமைச்சர் தலை மையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விடுதி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுக்காக பெறப்படும் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிய உணவுப் பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி அனைத்து பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவுக் கட்டணம் மாற்றப்படாமல் உணவுப் பட்டியலை மாற்றி அமைத்து அட்ட வணைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

காலை உணவு

அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் காலை உணவாக, திங்கள்கிழமை - சேமியா கிச்சடி, தக்காளி சட்னி அல்லது சாம்பார்; செவ்வாய் கிழமை - பூரி மசால்; புதன்கிழமை - இட்லி, சாம்பார், சட்னி; வியாழக்கிழமை இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய் பால்; வெள்ளிக்கிழமை - பொங்கல் அல்லது வரகு பொங்கல் அல்லது திணை அரிசி பொங்கல், கத் தரிக்காய் கொத்சு, வடை; சனிக்கிழமை - ரவா கிச்சடி, தேங்காய் சட்னி; ஞாயிற்றுக் கிழமை - தோசை அல்லது நவதானிய தோசை, சாம்பார், சட்னி.

மதிய உணவு

திங்கள்கிழமை - சோறு, சாம்பார், இருவகை பொரியல், ரசம், மோர், முட்டை; அல்லது சோறு, சாம்பார், ஒரு பொரியல், ரசம், மோர் முட்டை மசாலா; செவ்வாய்கிழமை - காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை;

புதன்கிழமை - சோறு,  மட்டன் அல்லது சிக்கன் குழம்பு, பொரியல், மோர்; வியாழக்கிழமை - தக்காளி சோறு அல்லது எலுமிச்சை சோறு அல்லது தயிர் சோறு, உருளை பொரியல், முட்டை; வெள்ளிக்கிழமை - சோறு, காரக் 

குழம்பு, பொரியல் (அல்லது கூட்டு), ரசம், மோர், முட்டை; சனிக்கிழமை - புதினா சோறு அல்லது காரட் சோறு அல்லது கறிவேப்பிலை சோறு, முட்டை, 

அப்பளம் (பருப்பு துவையல்) ; ஞாயிற்றுக்கிழமை - சோறு, முட்டை குருமா, ரசம், மோர்.

இரவு உணவு

திங்கள்கிழமை - சப்பாத்தி, குருமா; செவ்வாய்கிழமை - இடியாப்பம், குருமா (அல்லது காய்கறி கூட்டு) ; புதன்கிழமை - காய்கறி புலாவ், குருமா (அல்லது ரைத்தா) ; வியாழக்கிழமை - ஊத்தாப்பம், சட்னி, சாம்பார்; வெள்ளிக்கிழமை - கோதுமை தோசை, தக்காளி சட்னி; சனிக்கிழமை - சோறு, சாம்பார், பொரியல், ரசம்; ஞாயிற்றுக்கிழமை - தக்காளி 

சோறு அல்லது சாம்பார் சோறு, வறுவல்;

வாரத்திற்கு ஒரு நாள்

1ஆவது வாரம் மற்றும் 3ஆவது வாரம் புதன்கிழமையில் கல்லூரி விடுதியில் ஆட்டிறைச்சி (80 கிராம் வீதம்); பள்ளி விடுதிகளில் ஆட்டிறைச்சி (80 கிராம் வீதம்) ;

2ஆவது வாரம் மற்றும் 4ஆவது வாரம் புதன்கிழமையில் கல்லூரி விடுதியில் கோழி இறைச்சி (120 கிராம் வீதம்); பள்ளி விடுதியில் கோழி இறைச்சி (100 கிராம் வீதம்); நாள்தோறும் வழங்கப்படும் உணவு வகைகளுடன் வாரத்திற்கு 5 முட்டைகள் என ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 20 முட்டைகள் வழங்கப்படும்.

 முட்டை சாப்பிடாத மாணவருக்கு ஒரு வாழைப் பழம் வழங்கப்படும்.

சிற்றுண்டி

நாள்தோறும் மாலை நேரங்களில் வேக வைத்த பயறுகள் (சுண்டல்) மற்றும் சுக்குமல்லி காபி அல்லது கருப்பட்டி தேநீர் வழங்கப்படும். விழா காலத்தில் வழங்கப்படும் சிறப்பு உணவில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment