ஒரு முறை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறியப்படும் பொருட்கள் தான் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முதல் காரணம். குளிர்பான உறிஞ்சு குழாய், காது சுத்தப்படுத்தும் 'ஸ்வாப்', மிட்டாயில் வைக்கப்படும் குச்சி, கை துடைக்கும் காகிதம், 'பிளாஸ்டிக்' பை இப்படி பலவற்றை, பல கோடிப் பேர் தினமும் ஒரு முறை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிவது தான் குப்பை மேடுகளிலும், நீர் நிலைகளிலும் மலைபோலச் சேர்ந்து விடுகிறது. உலகெங்கும், ஆண்டுக்கு 150 மில்லியன் டன் குப்பை, ஒரு முறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் ரகம் என, வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த சுமையைக் குறைக்க, பல முறை பயன்படுத்தும் வகையில் பொருட்களை வடிவமைக்கலாம் என்று களமிறங்கியுள்ளது, டென்மார்க்கை சேர்ந்த 'லாஸ்ட் ஆப்ஜெக்ட்'. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காது சுத்தப்படுத்தும் குச்சி, 1,000 காட்டன் 'ஸ்வாப்'களுக்கு வேலையில்லாமல் செய்துவிடும்.தவிர, லாஸ்ட் ஆப்ஜெக்டின் காது சுத்தப்படுத்தும் குச்சியை, எளிதில் மறுசுழற்சி செய்யலாம்.
பொருட்களை பயன்படுத்தி விட்டு, நினைத்த இடத்தில் வீசி எறியும் உரிமையை, யார் நமக்குக் கொடுத்தது? யாரும் தரவில்லை... ஆனால், அதை தொடர்ந்து செய்கிறோம். அதற்குக் காரணம், அவற்றுக்கு மாற்றாக சரியான பொருட்கள் சந்தைக்கு வரவில்லை. இப்போது, லாஸ்ட் ஆப்ஜெக்ட் போன்ற நிறுவனங்கள், அதை செய்யத் தொடங்கி விட்டன. முக கவசம், முகம் துடைக்கும் 'டிஷ்யு' காகிதம், 'பிளாஸ்டிக்' பை என்று பலவற்றுக்கும், லாஸ்ட் ஆப்ஜெக்ட் முன்வைத்துள்ள மாற்றுப் பொருட்களுக்கு, அய்ரோப்பாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மெல்ல இந்த கலாசாரம் உலகெங்கும் பரவினால், பூமி மீது குப்பைச் சுமை குறையும்.
No comments:
Post a Comment