ரஷ்ய - உக்ரைன் போர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

ரஷ்ய - உக்ரைன் போர்

மனித இனம் நாகரீகமடைந்த காலத்தில் இருந்தே அதிகாரப் பசியைத் தீர்த்துக்கொள்ள போர் ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 தனி நபர்களின் ஆசைக்காக லட்சக்கணக்கான மக்கள் போரில் பரிதாபமாக இறந்துள்ளனர். காலச் சக்கரத்தால் இவை அனைத்தும் மாறிவிடும் என்று பார்த்தால், போர் செய்யும் முறை மாறியுள்ளதே தவிர மனிதர்களின் அதிகாரப் பசி தீரவே இல்லை.

தற்போதுள்ள நவீன உலகத்தில் மனிதர்கள் எத்தனையோ துறைகளில் அபார வளர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனாலும் மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் முடிந்தபாடில்லை. இதற்கு சரியான எடுத்துக்காட்டு தற்போது ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை

1990ஆம் ஆண்டு வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்துடன் தான் இருந்தது. பின்னர் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தங்களுக்கு என  அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தது.தற்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், அய்ரோப்பிய நாடுகளுடனும் பங்கிட்டுக்  கொண்டு தான் இருக்கிறது. மேலும் மொழி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உக்ரைன் மக்கள் ரஷ்ய மக்களோடு ஒன்றுபட்டுத் தான் இருக்கிறார்கள். மேலும் ரஷ்ய மொழியை பேசும் கணிசமான மக்கள் உக்ரைனிலும் இருக்கிறார்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் பிரதமர் விக்டர் யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு ரஷ்யாவிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்க உக்ரைனின்  தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது ரஷ்யா. மேலும் உக்ரைன் கிழக்குப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்தது. இதுவே இரு நாடுகளிடையே பிரச்சினை உருவாக முதல் காரணமானது.  இப்பிரிவினைவாதிகளுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் இடையே நடந்த தாக்குதல்களில் இதுவரை 15,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட

முதல் ஒப்பந்தம் - மின்ஸ்க் ஒப்பந்தம்

 இந்நிலையில் 2015ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக இருந்த  பெட்ரோ பொரொஷென்கோ-க்கும் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-க்கும் இடையே புதிதாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அது மின்ஸ்க் ஒப்பந்தம்  என்று அழைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சினைகள் 

உக்ரைன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது, ஆனால் ரஷ்யாவோ, கிவ் நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு உக்ரைன் பகுதிக்கு சிறப்பு தகுதி அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வதாக கருதப்படுகிறது.உக்ரைன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்புத் தகுதிகொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் உக்ரைன் அரசாங்கமோ, கிழக்கு உக்ரைனுக்கு சிறப்புத் தகுதி வழங்கிவிட்டதாகக் கூறுகிறது.மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன், உள்நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும். கிழக்கு உக்ரைனில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால், அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன். இல்லையெனில் தேர்தல் ரஷ்யாவின் அழுத்தத்தின் கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு கூறுகிறது.உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல் உக்ரைன், கிழக்கு உக்ரைன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.உக்ரைனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என புதிய வாதத்தையும் முன் வைத்துள்ளது ரஷ்யா. மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தன் வாதங்களை முன் வைத்துள்ளது ரஷ்யா. இந்நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது அமெரிக்கா. மேலும் இரு நாடுகளிடையே உள்ள பிரச்சினையை சுமுகமாக முடித்து வைக்க அமெரிக்கா பேசி வருகிறது. ஆனாலும் ரஷ்யா உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது தாக்குதலை நடத்தி முன்னேறிக் கொண்டு வருகிறது.

 இவ்வுலகம் ஏற்கெனவே நிறைய போர்களை சந்தித்துவிட்டது. போரால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  ஊழல் நாடுகள் பல கரோனா பொருளாதார இழப்புகளை சாக்காக வைத்து தங்களின் திறமையற்ற அரசியல் நடவடிக்கைகளை மூடிமறைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் உக்ரைன் போரையும் பொருளாதார இழப்பிற்கு சாக்காக சொல்லிக்கொள்ளும் நிலை உருவாகி விட்டது.

No comments:

Post a Comment