மரணமில்லாவாழ்க்கையின் முக்கிய ஆய்வில் வியப்பான முடிவு உயிர்வாழ வைக்க மூளை செய்யும் கடைசி முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

மரணமில்லாவாழ்க்கையின் முக்கிய ஆய்வில் வியப்பான முடிவு உயிர்வாழ வைக்க மூளை செய்யும் கடைசி முயற்சி

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் இறுதிவரை உடலை வாழவைக்க அனைத்து வித முயற்சிகளையும் செய்கின்றன. மூளையும் இதே போல் இறுதிவரை உயிர்வாழவைக்க போராட்டம் நடத்துகிறது என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் வாழ்க்கையை நீடிக்க நடந்துவரும் ஆய்வில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது

 நமது உடல் உயிரோட்டமாக இருக்க அனைத்து விதை முயற்சிகளையும் உடல் உறுப்புகள் செய்கின்றன. எடுத்துக்காட்டாக விபத்தில் ரத்த இழப்பு ஏற்பட்டால் ஈரல் தன்னிடம் சேகரித்து வைத்துள்ள ரத்தத்தை உடனடியாக வெளியிட்டு இரத்த இழப்பை ஈடு செய்ய முயற்சிக்கிறது, மோசமான உயிரபாயம் விளைவிக்கும் கிருமிகள் உடலில் வந்துவிட்டால் உடனடியாக எலும்பு மஞ்சைகள் அதிக அளவில் வெள்ளை அணுக்களை வெளியேற்றி அந்தக் கிருமிகளை அழிக்க முயற்சி செய்யும்,

இப்படி பலவகையில் உயிரைக் காப்பாற்ற நமது உடல் முயற்சி செய்யும், இப்போது மூளை இறுதி நொடிகளில் உயிரைக் காப்பாற்ற செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு கணக்கிட்டுக் கொண்டு இருந்தது, அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார்.

ஆனால் இறக்கும்போது மூளையில் இருந்து எதிர்பாராத அலைகள் பதிவாகின. அவர் இறந்த பிறகு மூளையில் ஏற்பட்ட அதிர்வலைகளை ஆய்வு செய்த மருத்துவ ஆய்வாளர்கள் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர். அதாவது அவர் மரணமடையும்  முன்னும் பின்னும் 30 வினாடிகளில், மனிதனின் மூளை அலைகள்  பழையவற்றை நினைத்துப் பார்ப்பது போன்ற அதே அலைவடிவங்கள் அப்போது தென்பட்டன.

ஒரு நபரின் கடைசித் தருணங்களில் "வாழ்க்கையின் நினைவுகள்" வந்து போவது என்பது அவரது உயிர்பிரியும் வாய்ப்பை மேலும் தாமதப்படுத்தவும் உடலில் மீண்டும் உயிர்ப்பு நிலையைக் கொண்டுவரவும் மூளை இவ்வாறு செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  இந்த ஆய்வைச் செய்தவர் லூயிஸ்வில் மருத்துவப் பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியரும் அறுவைச் சிகிச்சை நிபுணருமான அஜ்மல் ஸெம்மர். கனடாவின் வான்கூவரைச் சேர்ந்தவர். இறந்துக் கொண்டிருக்கும் மூளையின் முதல் பதிவு இது என்றும் - "இது முற்றிலும் தற்செயலாக நடந்தது, நாங்கள் இந்த பரிசோதனையை செய்யவோ அல்லது இந்த சமிக்ஞைகளை பதிவு செய்யவோ திட்டமிடவில்லை." என்று ஸெம்மர் கூறினார்

 ஆகவே, நமது அன்புக்குரியவர்களைப் பற்றியோ, பிற மகிழ்ச்சியான நினைவுகளைப் பற்றியோ நமக்கு மீண்டும் ஒருமுறை நம்முடைய நினைவில் தெரியுமா என்று நம்மால் சொல்ல முடியாது" என்கிறார் ஸெம்மர். இந்த நினைவுகள் உயிரூட்டம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்டு இருக்கும் என்பதை மறுக்க இயலாது. நோயாளியின் இதயம் மூளைக்கு குருதி கொண்டு செல்வதை நிறுத்துவதற்கு 30 வினாடிகளுக்கு முன்பு, அதிக அறிவாற்றல் தேவைப்படும் பணிகளான கவனக் குவிப்பு, கனவு காண்பது, நினைவுபடுத்துவது ஆகியவற்றைப் போன்ற பணிகளைப் பின்பற்றியது என்று அவர் கூறுகிறார்.

இதயம் துடிப்பதை நிறுத்திய 30 நொடிகளில் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறலாம். அந்தப் புள்ளி வரைக்கும் மேற்சொன்ன மூளையின் பணிகள் தொடர்ந்தன. வாழ்க்கை எப்போது முடிவடைகிறது? இதயம் துடிப்பதை நிறுத்தும்போதா அல்லது, மூளை செயல்படுவதை நிறுத்தும்போதா என்ற கேள்வியையும் இந்த ஆய்வு எழுப்புகிறது.எனினும் இந்த ஒரேயொரு ஆய்வில் இருந்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸெம்மரின் குழு எச்சரிக்கிறது.

 குருதிப் போக்கு மற்றும் வீங்கிய மூளை, வலிப்பு நோய் ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்ட நோயாளி கொண்டிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. "ஒரேயொரு நபரை மட்டும் ஆய்வு செய்து அதைக் கொண்டு ஆய்வறிக்கை அளிக்க எனக்குப் பிடிக்கவில்லை" என்று ஸெம்மர் கூறுகிறார். 2016-ஆம் ஆண்டு தொடக்கப் பதிவுக்குப் பிறகு பல ஆண்டுகளாக, பகுப்பாய்வை வலுப்படுத்த உதவுவதற்காக அவர் இதே போன்ற நிகழ்வுகளைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் 2013ஆம் ஆண்டு ஆரோக்கியமான எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. எலிகளின் இதயம் துடிப்பதை நிறுத்திய 30 வினாடிகள் வரை மரணத்தின் கட்டத்தில் அதிக அளவு மூளை அலைகள் வெளிப்பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இது ஸெம்மரின் வலிப்பு நோயாளியிடம் தென்பட்டதை ஒத்திருந்தது.

இந்த ஆய்வுகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் "வியக்கத்தக்கவை" என்று ஸெம்மர் கூறுகிறார். இந்த ஆய்வு முடிவு வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் குறித்த மற்ற ஆய்வுகளுக்கான கதவைத் திறக்கும் என்று ஸெம்மர் குழு இப்போது நம்புகிறது. உயிர்வாழ உடல் இறுதிவரை போராடுகிறது என்று இதுவரை நமக்குத் தெரிந்துவந்த அறிவியல் உண்மையில் தற்போது கட்டளைப் பீடமான மூளையும் தன் பங்கிற்கு உணர்வுகளத் தூண்டி உயிர்வாழ்க்கையை நீடிக்க போராட்டம் நடத்துகிறது என்பது  தெரியவந்துள்ளது.   இனிவரும் காலங்களில் அறிவியல் மூலம் மூளையின் இந்த செயல்பாட்டை வைத்து இறக்கப்போகும் மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆய்வுகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment