* ''சொன்னதைச் செய்வதும், செய்வதையே சொல்வதும்'' திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரித்திரம்!
* ஒரு வாக்குக்கூட பெறாத எதிர்க்கட்சிகள்; டெபாசிட் இழப்பதில் பா.ஜ.க.தான் நம்பர் ஒன் கட்சி!
* எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத் திரையை மக்கள் கிழித்துத் தொங்கவிட்டார்கள்!
* வேட்பாளர்களைத் தேடித் தேடி பணமாலையை, ஜாதி, மதவெறியை ஊட்டிப் பார்த்தது பா.ஜ.க.; பெரியார் மண் அதற்கு இடந்தரவில்லை!
தி.மு.க. கூட்டணியினருக்கும்- நமது 'சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கும்' நமது வாழ்த்துகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதையே சொல்வதும்'' திராவிட முன்னேற்றக் கழகத் தின் சரித்திரம்! ஒரு வாக்குக்கூட பெறாத எதிர்க்கட்சிகள்; டெபாசிட் இழப்பதில் பா.ஜ.க. தான் நம்பர் ஒன் கட்சி! எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத் திரையை மக்கள் கிழித்துத் தொங்கவிட்டார்கள்! வேட்பாளர்களைத் தேடித் தேடி பணமாலையைச் சூட்டி, ஜாதி, மதவெறியை ஊட்டிப் பார்த்தது பா.ஜ.க.; பெரியார் மண் அதற்கு இடந்தரவில்லை! வாகை சூடி நிற் கின்றது தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சி களும் - கம்பீரத்துடனும், கண்ணியம் குறை யாமலும்! தி.மு.க. கூட்டணியினருக்கும், நமது ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கும்' நமது வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் அமைந்து சுமார் 9 மாதங்கள்தான் ஆகும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களுக்கான - மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கான தேர்தல் - கடந்த 19.2.2022 அன்று நடைபெற்றது.
வரலாறு படைத்துள்ளனர் தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள்
நாடாளுமன்றத் தேர்தல் (2019), சட்டமன்றத் தேர்தல் (2021) மற்றும் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தி.மு.க., தி.மு.க. கூட்டணியினர் பெற்ற வெற்றிகளை மேலும் பெருக்கிய வண்ணம் - ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு, தி.மு.க.வின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான ஆட்சிக்குப் பேராதரவு தந்து - எதிர்த்து நின்ற கட்சிகளுக்குப் படுதோல்வியையே ''பரிசாக'' அளித்து, வரலாறு படைத்துள்ளனர் தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தைக்கூட, இடங்களையோ எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெறவில்லை.
நல்லாட்சி நாயகரின் மகுடத்தில் மேலும் பல ஜொலிக்கும் வைரக்கற்கள்
தமிழ்நாடு வாக்காளர்கள் அவர்களைப் புறக்கணித்த தோடு, புறந்தள்ளியும், நல்ல தீர்ப்பைத் தந்துள்ளதன்மூலம் - 9 மாத தி.மு.க. ஆட்சி - பார் போற்றும் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சித் திகழுகிறது என்ப தைப் பறையாற்றியுள்ளனர். இத்தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் ஊர்போற்றும் ஆட்சியின், நல்லாட்சி நாயகரின் மகுடத்தில் மேலும் பல வெற்றிகள் என்ற ஜொலிக்கும் வைரக்கற்களைப் பதித்து, திராவிடர் ஆட்சியின் மாட்சியின் பெருமையை உலகறியச் செய்யும் சான்றிதழ் வழங்கி, சரித்திரம் படைத்துள்ளனர்.
வெற்றி என்ற இலக்கு நோக்கியே!
இந்த வியத்தகு வெற்றிக்கு வித்தான முதலமைச்சர் அவர்களின் ஆட்சிச் சாதனைகள் -
1. ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதியின் பட்டாங்க செயலாக்கம்.
2. பக்குவப்பட்ட தேர்தல் வியூகம், கூட்டணிக் கட்சி களையும் 2019 முதலே அரவணைத்துச் சென்று, மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் பலம் குன்றாமல் மேலும் வலுவடையச் செய்யும் விரிந்த மனப்பான்மை.
3. தி.மு.க. அமைச்சர்கள், செயல்வீரர்கள், பொறுப் பாளர்களின் கடினமான உழைப்பும், உத்வேகமும், கட்டுப்பாடு நிறைந்த அணுகுமுறைகளும்.
4. எதிரணியினரின் பலத்தைக் குறைத்து மதிப் பிடாமல், வெற்றி என்ற இலக்கு நோக்கியே உழைத்து, செய்த பிரச்சாரம், கட்டமைப்புகளின் பலமான வீச்சு - திட்டமிட்ட செயலாக்கம்.
எதிர்க்கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி!
தாம் நேரிடையாக மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்தால் கரோனா கொடுந்தொற்று மேலும் பல்லாயிரம் பேருக்குப் பரவிடும் அபாயம் உண்டு என்று முதல மைச்சர் அவர்கள் பொறுப்புணர்ச்சியோடு சிந்தித்து, காணொலிமூலம் மாவட்டம் வாரியாக செய்த அரு மையான பிரச்சாரத்தின்மூலம் அவ்வப்போது எதிர்க் கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி கொடுக்கத் தவறவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அஞ்சி காணொலிமூலமே பேசுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க. அண்ணாமலையும் அவதூறு பரப்பி வந்த நிலையில், ‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதையே சொல்வதும்'' திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரித்திரம் என்பதை நன்கு புரிந்துகொண்ட மக்கள், எடுபடாத ஏகடியங்களுக்கு நல்ல தீர்ப்பின் மூலமே பதிலளித்து - அவர்களின் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழித்துத் தொங்கவிட்டார்கள்!
அண்ணா பெயர் கொண்ட கட்சி என்பதையே அறவே அவர்கள் மறந்துவிட்டு, பா.ஜ..க.வின் ஊதுகுழ லாகி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைப் பொருத்தமின்றி வரவேற்று, மாநில உரிமையை மண்டியிட்டு, பிரதமர் மோடியிடம் அடகு வைத்ததற்கு மக்களின் தக்க மறுப்பும், பதிலும்தான் இந்த பிரம்மாண்ட பெருவெற்றி!
‘நீட்' தேர்வு எதிர்ப்பில்கூட இரட்டை வேடம்; பா.ஜ.க.வின் பணத்தோட்டத்தை உலுக்கிவிட்டனர்! கூட்டணியில் கூட ரகசிய ஒப்பந்தம் - தற்காலிக நாடகம் - இச்சாயங்களை வெளுக்க வைத்தனர் தமிழ்நாட்டு வாக்காளர்கள்.
ஒரு வாக்குக்கூட பெறாத எதிர்க்கட்சிகள் - ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெறுவதில்- டெபாசிட் இழப்பதில் பா.ஜ.க.தான் நம்பர் ஒன் கட்சி.
‘‘கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை''
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதி களை அ.தி.மு.க.வின் தயவில் பெற்றார்களே பா.ஜ.க. வினர், அந்தத் தொகுதிகளுக்குள்ள உள்ளாட்சி இடங் களைக்கூட இத்தேர்தலில் அவர்களால் பெற முடிய வில்லை என்பதைவிட, அவர்கள் ‘‘கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை'' என்பது போன்ற வீண் வாதத்திற்கு வேறு உதாரணம் வேண்டுமா?
அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமையினர் - எதில் போட்டி போட்டார்கள்?
டில்லி பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு சரணம் பாடுவதில் யார் முதலில் என்றுதான் போட்டி போட்டார்கள்; ‘‘இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசி''களாக இத்தேர்த லின் போதும், பிரச்சாரத்தின்போதும் ‘கொள்கைச் சூன்யங்கள்' என்று தங்களை பாரறிய அறிவிப்பதுபோல் நடந்துகொண்டதைவிட பரிதாபம் வேறு உண்டா?
எடப்பாடியையே பறிகொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்.
சொந்தத் தொகுதியை இழந்தார் ‘பணிவாளர்' என்ற 'பவ்விய புருஷர்!'
சவால் விட்டவர்கள் தலை தொங்கும் நிலை!
‘‘வேலும்'' பயன்படவில்லை; ‘‘மணி''யும் பயன்பட வில்லை; சவால் விட்டவர்கள் தலை தொங்கும் நிலையை வாக்காளர்கள் தீர்ப்பின்மூலம் வழங்கி விட்டனர்.
வாகை சூடி நிற்கின்றன தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் - கம்பீரத்துடனும், கண்ணியம் குறை யாமலும்!
பா.ஜ.க. மொத்த வாக்கு சதவிகிதம் காட்ட, வாக்கா ளர்களைத் தேடுமுன், வேட்பாளர்களைத் தேடித் தேடி பணமாலையைச் சூட்டி, ஜாதி, மதவெறியை ஊட்டிப் பார்த்தது; பெரியார் மண் அதற்கு இடந்தரவில்லை.
ஒரு பேரூராட்சியை - அவர்களின் செல்வாக்கு இருக்கிறது என்று பிதற்றித் திரியும் குமரி, கோவை, திருப்பூரில் பெற்றதுண்டா? தொடர் தோல்விகளுக்கான அச்சாரத் தோல்விகள் - அலை போன்ற இந்தத் தோல்விகள்!
தி.மு.க. கூட்டணியினருக்கும் - ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கும்' நமது வாழ்த்துகள்!
வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணியினருக்கும், அதன் மூலகர்த்தாவான முதலமைச்சர்களிலேயே முதல் முதலமைச்சர் என்று ஓங்கு புகழ் கொண்ட நமது ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கும்' நமது வாழ்த்துகள்!
“வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்துவோர் நாவெல்லை!” என்று ‘தஞ்சைவாணன் கோவை'யில் ஒரு வரி உண்டு - முதலமைச்சரின் வெற்றியை நமக்கு நினைவூட்டுகின்றன.
உள்ளாட்சி வெற்றி நாயகர்களே, தலைமையின் பெருமையை தகத்தாய ஒளிவீசச் செய்யுங்கள்!
உள்ளாட்சி வெற்றி நாயகர்களே, உங்களுக்கு வாழ்த்துச் சொல்லும் இவ்வேளையில், இனிமேல் உங்கள் பொறுப்பையும், கடமையையும் சுமையாகக் கருதாமல், சுகமானதாக மாற்றி, தி.மு.க. ஆட்சிக்கு மேலும் கூடுதலாகப் பொலிவும், வலிமையும், நற் பெயரையும் சேர்க்கும் வண்ணம் குறையற்று நடந்துகொண்டு, மாசில்லா புகழுடன் கடமையாற்றுங்கள்.
அதன்மூலம் தலைமையின் பெருமையை தகத் தகாய ஒளிவீசச் செய்யுங்கள், உங்கள் தலையாய கடமை அது!
இதுதான் நமது உரிமையுடன் கூடிய அன்பு வேண்டுகோள்!
எதிர்க்கட்சி நண்பர்களே, இனியாவது தமிழ்நாட்டு நலனில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பைத் தந்து, சறுக் கலைச் சரி செய்துகொள்ளுங்கள் - காவிக் கனவுகள் கலையட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.2.2022
No comments:
Post a Comment