12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஒன்றிய அரசு நெறிமுறை அறிவித்தவுடன் செலுத்தப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஒன்றிய அரசு நெறிமுறை அறிவித்தவுடன் செலுத்தப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப்.25 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அங்கீகரிக்கப் பட்டுள்ள கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை, ஒன்றிய அரசு அனுமதி அளித்ததும் தமிழ்நாட்டில் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்குக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரப்பெற்ற 12 முதல் 15 வயதுக் குட்பட்ட சிறுவர்களுக்கான கோர்பே வேக்ஸ் தடுப்பூசியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24.2.2022) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

27ஆம் தேதி போலியோ முகாம்கள்: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் கடந்த 11 ஆண்டு களாகவும், தமிழ்நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டி உள் ளது. அந்தவகையில் வருகிற 27ஆம்தேதி 43 ஆயிரத்து 51 மய்யங்களில் போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை உள்பட பல சேவை துறைகளை சேர்ந்த சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த பணி களில் பயன்படுத்தப்பட இருக்கின்றனர். இதற்காக 3 ஆயிரம் வாகனங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது. போலி யோ சொட்டு மருந்து முகாமை 27ஆம் தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் முதல மைச்சர்தொடங்கி வைக்கிறார்.

10 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி - 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள்ஏற்கெனவே தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோர்பே வேக்ஸ் என்ற புதிய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சுமார் 10 லட்சம் சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசு 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் என இலக்கு நிர்ணயித்து ஒதுக்கீடு செய்துள்ளது.

அதில் இன்று (நேற்று) சென்னைக்கு 3 லட்சத்து 89 ஆயிரம் கோர்பேவேக்ஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசி களை தற்போது ஆய்வு செய்துள்ளோம். 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் களுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை களை ஒன்றிய அரசு முறையாக அறிவித்தவுடன் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். விரைவில் ஒன்றிய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசியை பொருத்தவரை, கோவேக்சின் தடுப்பூசியை போல, முதல் தவணை செலுத்தி 28 நாட்கள் கழித்து 2ஆவது தவணை செலுத்தப்படும்.

ஒன்றிய அரசு அனுமதித்ததும், பள்ளி களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். இந்தியா விலேயே தமிழ்நாட்டில்தான் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 82.27 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 37.64 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் என ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 91.39 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 72.05 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில் 1 கோடிக்கு மேற்பட் டோர் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான், 3ஆவது அலையில் உயிரிழப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. 27ஆம்தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை யொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளபட வேண்டி இருப்பதால், சனிக்கிழமை நடைபெற இருந்த 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 67 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மய்யங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று கொண்டிருக்கும். தமிழ் நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடு துறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்கள் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு, பணி ஆணைகள் இன்று (நேற்று) வழங்கப் பட்டுள்ளது.

விரைவில் விசாரணை

தமிழ்நாட்டில் 12 வகையான நோய்களுக்கு 11 வகையான தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் மாதம் முதல் துரிதப்படுத்தப்படும். அயனாவரம் இ.எஸ்.அய். மருத்துவமனையில் தொழிலா ளர்களை, ஜாதி ரீதியாக மருத்துவர்கள், செவிலியர்கள் திட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனை தொழிலாளர் நலத்துறை ஆணையத்துடன் இணைந்து குழு அமைத்து விரைவில் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment