தூத்துக்குடி, ஜன.21 தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்த நாள் விழா, சிறப்புக் கருத்தரங்கமாகக் கொண்டாடப்பட்டது.
19.12.2021 அன்று மாலை 4 மணி யளவில், பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது.
மண்டலத் தலைவர் சு.காசி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஆழ்வார், திருவை ஒன்றியத் தலைவர் சு.திருமலைக்குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பெ.காலாடி, தூத்துக்குடி ஒன்றிய அமைப்பாளர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். ச.வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.
தமிழர் தலைவரின் ஆளுமை
தமிழர் தலைவரின் ஆளுமை - ‘அரசியலை நிர்ணயிப்பதில்’ என்ற தலைப்பில் திமுக இலக்கிய அணியைச் சேர்ந்த மோ.அன்பழகன் உரையாற்றினார். ‘இனவுரிமைப் போராட்டங்களில்’ என்ற தலைப்பில் மாணவர் கழக மாவட்டச் செயலாளர் ஆ.கலைமணி உரையாற்றினார். ‘இயக்கம் காப்பதில்’ என்ற தலைப்பில் திமுக திருவை நகரப் பொருளாளர் சொ.பொன்ராஜ் சிறந்ததொரு உரை நிகழ்த்தினார். அடுத்து தலைவரின் பெருமைக்குரிய தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக கழகப் பேச்சாளர் மா.பால்ராசேந்திரம் ‘தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பாசம் என்கிற உணர்வு
அவர் தம் உரையில், புரட்சிக் கவி ஞரின் பாடலைக் கூறி, சிறு வயதிலேயே பெரியோருக்குரிய முதிர்ச்சியைப் பெற்றவராக - கொள்கையில் மிகச்சிறந்த தெரிவு பெற்றவராகத் திகழ்ந்தவர் தமிழர் தலைவர் அவர்கள் என்றார். 11 வயதிலேயே மாவட்ட மாநாட்டில் முதிர்ந்த முன்னோடிகளால் தெரிவு செய்யப்பட்டு உரை நிகழ்த்தியவர் நம் ஆசிரியர் என்றார். தங்கத்தால் எடைபோடப்பட்டத் தலைவராக மட்டுமின்றிப் பல்வேறு சிறப்புக்களுக்குரியோராய் பாரோர் போற்றிடும் தலைவராய் விளங்குபவர் நம் தலைவர் என்றார். அவர்தாம், மனிதனின் பாசம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? என்பதனைச் சிங்கப்பூரில் தான் கண்ட ஒரு துண்டறிக்கை வாயிலாகக் கூறுவதைக் கேட்கும்போது மனிதரில் பலரின் பாசம் என்கிற உணர்வு சுயநலமிக்கதாய் இருக்கிறதோவென எண்ணப்படுகிறது. அதேபோல் பிறறைப் பிழைப்பட உணர்தல் என்பதனையும் இலண்டன் தொடர்வண்டிச் சீட்டு பரிசோதகரின் வழியாகச் சான்று காட்டி விளக்கியது மிகச்சிறப்பு. இளைஞர்கள் தம் வாழ்வில் துணையைப் பிழைப்பட உணர்ந்து அதனால் தம் வாழ்வை இழந்துவிடக்கூடாது என்ற நல்ல செய்தியை எடுத்துக்காட்டுவதையும், இதுபோல் பல்வேறு செய்திகளை விரைவாக எடுத்துக்கூறிச் சிறப்புரை யாற்றினார்.
இறுதியாக செ.செல்லத்துரை நன்றி கூறினார். இந்நிகழ்வுக்கு அ.மதிவாணன், வழக்குரைஞர் பா.இராசேந்திரன், கரு.மாரியப்பன், கோபால்சாமி, த.பெரியார்தாசன், த.நகாராஜன், நா.கலைச்செல்வி, சண்முகம், பொ.போஸ் மற்றும் தோழர்கள் பலர் வருகை தந்து சிறப்புச் செய்தனர்.
No comments:
Post a Comment