தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர் பி.ஜே.பி.பற்றி எழுதாமல் - ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர் பி.ஜே.பி.பற்றி எழுதாமல் - ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்?

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., விளக்கவுரை

சென்னை, செப்.14 பி.ஜே.பி.பற்றி எழுதாமல்ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்? என்பதற்கான விளக்கத்தை அளித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’

புத்தக வெளியீட்டு விழா!

கடந்த 8.9.2021  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்..

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

அய்யா அவர்களின் - தமிழர் தலைவரின்

ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூலை வெளியிட்டு, சிறப்புரை வழங்கி விடைபெற்று சென்றி ருக்கின்ற மக்களவை உறுப்பினர் மானமிகு தயாநிதி மாறன் அவர்களே,

புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்திருக்கின்ற திராவிட முன்னேறக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி அவர்களே,

எனக்கு முன்னர் இங்கு வாழ்த்துரை வழங்கி இந் நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற சட்டப்பேரவை உறுப் பினர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற தங்கை மணியம்மை அவர்களே, நிறைவாக நம்மிடையே சிறப்புரை வழங்க விருக்கின்ற நூலாசிரியரும், தமிழர் தலைவருமான அய்யா அவர்களே,

வழக்கம்போல இந்த அரங்கில் திரண்டு, இந்த நிகழ்வையும் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, ஜனநாயக சக்திகளே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை!

நேற்று நான் புதுடில்லிக்குப் புறப்படுகின்றபொழுது, நம்முடைய கவிஞர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, அய்யா அவர்களின் இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து என்னிடத்தில் கூறினார்.

நான் இன்றிரவுதான் கடைசி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வருவதாகத் திட்டமிட்டு இருந்தேன்.

அய்யா அவர்களின் அந்தத் தகவலை கேட்டதும், உடனே வருகிறேன், தமிழர் தலைவரின் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை - அந்த வாய்ப்பை நான் நழுவவிடமாட்டேன் என்று ஒப்புதல் அளித்தேன்.

இந்த நிகழ்விற்குப் பிறகு, இன்னும் சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவேண்டும். நீண்ட நேரம் பேசவேண்டும் என்கிற பேராவல். தமிழர் தலைவர் அவர்கள் இந்தக் கரோனா கொடுந்தொற்றின் நெருக்கடி சூழலிலும், நேரத்தை எந்த அளவிற்குப் பயனுள்ள அளவில் செலவிட்டிருக்கிறார் என்பதை எண்ணி வியந்து போகிறேன், பெருமைப்படுகிறேன்.

தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர்

ஓய்வாக இருக்கவேண்டும் என்று சோர்ந்து வீழ்ந்து விடாமல், இந்தச் சூழலிலும்கூட காலத்திற்கான தேவை யைக் கருதி, இந்த நூலைப் படைத்து, தமிழ்ச் சமூகத் திற்குக் கொடையளித்திருக்கிறார்.

பி.ஜே.பி.யைப்பற்றி எழுதாமல், ஆர்.எஸ்.எசைப்பற்றி ஏன் எழுதவேண்டும்? நாட்டை ஆண்டு கொண்டிருப்பது பி.ஜே.பி. - நம்மோடு களத்தில் மல்லுக் கட்டி நிற்பது பி.ஜே.பி. ஆகவே, பி.ஜே.பி. என்ற அரசியல் கட்சியைப்பற்றி எழுதாமல், அதை அம்பலப்படுத்த முனையாமல், ஆர்.எஸ்.எஸ்.பற்றி எழுதவேண்டிய தேவை என்ன? இதை நாம் கூர்ந்து நோக்கவேண்டும்; ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிப் படித்த முதல் நூல்  ‘‘ஆர்.எஸ்.எஸ். - ஓர் அபாயம்‘’

40 ஆண்டுகளுக்கு முன்னால், என் நினைவைத் திரும்பிப் பார்க்கிறேன். இதே பெரியார் திடலில், 1980-களில் நான் வாங்கிப் படித்த முதல் நூல் என்று கருது கிறேன், ‘‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்'' என்கிற நூல் - பெரியார் திடலில் வாங்கிய புத்தகம். அப்பொழுது நான் கல்லூரி மாணவன்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதே பெரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஒரு நூல் எழுதத் தேவை எழுந்துள்ளது. அதுவும் தமிழர் தலைவர் அவர்களே, அந்த நூலை எழுதவேண்டிய ஒரு தேவை எழுந்துள்ளது.

அந்த நூலை வெளியிட்டு, பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை நான் பெரியார் திடலில் பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பும்40 ஆண்டுகளுக்குப் பின்பும்!

40 ஆண்டுகளுக்கு முன்பும், ஆர்.எஸ்.எசை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருந்தது - அம்பலப்படுத்தவேண்டிய தேவை இருந்தது.

40 ஆண்டுகளுக்குப் பின்பும் ஆர்.எஸ்.எசை மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி என்பது, ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை - ஆர்.எஸ்.எஸ். என்கிற நாற்றங்காலில் வளர்ந்து நிற்கின்ற ஒரு மாமரம் - பெரிய மரம் - நச்சு மரம்.

ஆர்.எஸ்.எசைப் புரிந்துகொண்டால்தான், பி.ஜே.பி. யைப் புரிந்துகொள்ள முடியும். ஆகவேதான், பெரியார் திடல், திராவிடர் கழகம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். குறித்த விவரங்களைத் திரட்டி, அடுத்தடுத்த தலை முறைக்கு சமர்ப்பித்துக் கொண்டே - ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தக் கூடிய வகையில், தயாநிதி மாறன் அவர்கள் சொன்ன தைப்போல, ஓர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லுகிற வகையில், பல்வேறு தலைப்புகளின்கீழ், மிக அருமையான ஒரு நூலை நமக்கு அளித்திருக்கிறார், அருளியிருக்கிறார் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

1925 இல் தோன்றிய இரண்டு முக்கிய இயக்கங்கள்!

தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிடுகிறார், 1925 இல் இந்திய சமூகச் சூழலில், இரண்டு முக்கிய இயக்கங்கள் - கருத்தியல் சார்ந்த இயக்கங்கள் தோன்றின. ஒன்று, ஆர்.எஸ்.எஸ்., இன்னொன்று சுயமரியாதை இயக்கம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில், இந்தத் தமிழ் மண்ணில் தோன்றிய இயக்கம். இரண்டும் நேர் எதிர் துருவங்களில் இயங்கக் கூடிய இயக்கங்கள்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவாகுவதற்கு முன்பே, மதம் சார்ந்த அமைப்புகள் பல தோன்றியிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு அரை நூற்றாண்டு களுக்கு முன்பே ஆரிய சமாஜம் தோன்றியது. தயானந்த சரசுவதி சாமிகள் உருவாக்கிய அமைப்பு.

ஹிந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்கின்ற அடிப்படையில் உருவாக்கிய அந்த அமைப்பு ஹிந்து என்கிற  கருத்தியலை  இங்கே கட்டமைத்த இயக்கம்.

சுவாமி விவேகானந்தரும்கூட ஹிந்து என்று சொல்கிறபொழுது, நமக்குள் ஒரு சக்தி பிறக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த சொல்லாடலை வெகுவாக மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த் தவர். ஹிந்து மகாசபை தோன்றியது.

இப்படி பல இயக்கங்கள் தோன்றினாலும்கூட, அந்த இயக்கங்கள் எல்லாவற்றையும்விட, ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம்தான் இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே பேசு பொருளாக மாறியிருக்கிறது.

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது

ஆர்.எஸ்.எஸ். என்கிற அந்த இயக்கம் - இன்றைக்கு இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அள விற்கு வலிமை பெற்றிருக்கிறது. பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்றாலும், உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் அமர்ந்திருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக யார் என்று அடையாளப் படுத்தக் கூடிய இடத்தில், பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்கள் இல்லை; ஆர்.எஸ்.எஸின் முன்னணித் தலைவர்கள்தான் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் எந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவேண்டும் என்று பி.ஜே.பி.யின் தலை வர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதைவிட, ஆர்.எஸ். எஸ்.சின் தலைவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இயற்றவேண்டும் - அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று பி.ஜே.பி. விரும்பியது என்பதைவிட,

ஆர்.எஸ்.எஸ். விரும்பியது - ஆர்.எஸ்.எஸ்.தான் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பான உண்மை - எதார்த்தமான உண்மை.

ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில்...

ஆகவேதான், தமிழர் தலைவர் அவர்கள் ஆர்.எஸ். எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில், இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் ஹிந்துத் றதுவா கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது - அதனு டைய நோக்கம் என்ன? ஹிந்து ஒற்றுமை என்றால், அதனுடைய நோக்கம் என்ன?

ஹிந்துத்துவா என்ற கோட்பாடு எதை நோக்கியதாக இருக்கிறது?

எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்

பார்ப்பனர்கள் மூன்றே சதவிகிதம்பேர் என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். அவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள்; மிகமிக சிறுபான்மை சமூகத் தைச் சார்ந்தவர்கள்.  எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர். ஆனால், கருத்தியல் அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையாக அவர்கள் இருக்கிறார்கள். அதற்கான யுக்திகள் - கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையை கட்டமைப்பதற்கான யுக்திகள்தான் ஆர்.எஸ்.எஸ். கையாளக்கூடிய பல்வேறு வழிமுறைகள்.

அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தற்காலத்து வளர்ச்சிதான் ஹிந்துத்துவா என்ற கருத்தியல் வளர்ச்சி. புதிதாக இன்றைக்கு உருவாக்கியிருக்கிற ஒரு கோட்பாடு.

இவர்கள் எல்லோருக்கும் அடிப்படையான கருத்தியல் என்பது சனாதனம்.

அதனுடைய நேரிடையான பொருள் என்பது - நிலையானது - அழிவில்லாதது என்று பொருள்.

ஆனால், அந்த அழிவில்லாதது என்னவென்றால், நானே படைத்த நால் வருண தருமத்தை என்னாலேயே மாற்ற முடியாது என்பதுதான்.

மாற்ற இயலாதது - அழிக்க முடியாதது - இது இயங்கியலுக்கே முரணானது. இயங்கியல் போக்குக்கு எதிரானது. எல்லாம் மாறும் என்பதுதான் இயங்கியல்.

நான்கு வருணம் என்கிற சமூகப் பாகுபாடு மாறாது

ஆனால், மாறவே மாறாது - யாராலும் மாற்றவே முடியாது - சனாதனத்தின் அடிப்படை அதுதான்.

என்ன மாறாது?

பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வு என்கிற இந்த சமூக பாகுபாடு - சமூக வேறுபாடு மாறாது.

நான்கு வருணம் என்கிற இந்த சமூகப் பாகுபாடு மாறாது. நான்கு வருணங்களில் பிராமண வர்ணம் என்கிற அந்தப் பார்ப்பனர்கள்தான் எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் என்கிற இந்த நிலைப்பாடு மாறாது - இந்தக் கருத்தியல் மாறாது.

ஒவ்வொருவருக்குமான வருணதர்மம் என்று சொல்லக்கூடிய வருணம் சார்ந்த தொழில் மாறாது - அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும் - செய்யக் கடமைப்பட்டவர்கள். இறைவன் அப்படி அதை நியமித்திருக்கிறான் - தீர்மானித்திருக்கிறான் - நிர்ணயித் திருக்கிறான். அது மாறாது.

ஆகவே, சனாதனம் என்கிற சொல் எவ்வளவு பெரிய கோட்பாட்டை உள்ளடக்கியதாகக் கொண்டிருக்கிறது. அதை அவர்கள் தங்களுக்கான கருத்தியலாக வளர்த்த காலத்தில், அது  பார்ப்பனியம்.

தங்களுக்கே உரியது என்று அவர்கள்  அதை கையில் எடுத்த காலம் - பார்ப்பனியமாக அதை வளர்த் தெடுத்தது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது

அது தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், மேலும் வளர்த்தெடுக்கப்படவேண்டிய, செழுமைப்படுத்தவேண்டிய தேவையைப் பெறுகிறது  - அப்பொழுதுதான் அது ஹிந்துயிசமாக மாறுகிறது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிராமணர்கள் - பிராமணரல்லாத வர்கள் அல்லது பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்த சூழலில், பார்ப்பனரல்லாதவர்களை ஹிந்துக்களாக தம்மோடு அரவணைத்துக் கொள்வதன்மூலம்தான், அணிதிரட்டிக் கொள்வதன்மூலம்தான் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற தேவை பார்ப்பனர்களுக்கு எழுகிறது.

அதனால் அவர்கள் திட்டமிட்டு வளர்த்த, வளர்த்தெடுத்த செழுமைப்படுத்திய அடுத்த நிலைதான் ஹிந்துயிசம் என்கிற அரசியல். அது ஒரு ஆன்மிகம் அரசியல் சார்ந்தது. கல்ச்சுரல் அன்ட் பிரிச்சுவல் என்ற தளத்திலே மட்டும் ஒருங்கிணைப்பதற்கு மட்டும் பயன்படுத்தியது.

உன் தெய்வமும் ஹிந்து தெய்வம்தான்; உன் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரம்தான். உன் வழிபாட்டு முறையும் ஹிந்து வழிபாட்டு முறைதான் என்று கலாச் சார தளத்திலே ஆன்மிக தளத்திலே இணைத்துக் கொள்வதற்கான ஒரு கோட்பாடாக அதை வளர்த் தெடுக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் - அதைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் - அப் பொழுது தான் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பெருந்தெய்வங்களோடு சிறு தெய்வங்களை இணைத்தது கலாச்சாரத் தளம்.

சிவன் - பெருமாள் அல்லது சிவன் - விஷ்ணு என் கிற பெருந்தெய்வ வழிபாடுகளோடு முருகன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள். முனீஸ்வரன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள்.

நம்முடைய கலாச்சாரத்தைநடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை....

நம்முடைய முன்னோர்களை எண்ணி, நாம் நடுகல் நட்டு அவர்களை வழிபடுகிற வழிபாட்டு முறையைக் கையாண்டு வந்த நம்முடைய கலாச்சாரத்தை - நடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை - அவர்களின் பெருந்தெய்வ வழிபாட்டுக் கலாச்சார முறையோடு இணைத்துக் கொண்டார்கள்.

கலாச்சார தளத்திலே, ஆன்மிகத் தளத்திலே இணைத்துக் கொண்டார்கள். இணைப்பதற்கு இவர் களும் இடங்கொடுத்தார்கள். இயைந்து போனார்கள்; இணங்கிப் போனார்கள்.

இன்றைக்குக் குலதெய்வ வழிபாட்டு முறையே அருகி வருகிறது. முருகனும் ஹிந்துக் கடவுளாக ஏற்கப் பட்டுவிட்டான். சிவபெருமானுக்குப் பிள்ளையாக அறிவிக்கப்பட்டு விட்டான்.

மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்கு...

ஆகவே, பெருந்தெய்வ வழிபாட்டு முறையும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும் அல்லது குலதெய்வ வழிபாட்டு முறையும் இணைக்கப்பட்ட வரையில், அந்தக் கலாச்சார தளத்திலே அல்லது ஆன்மிக தளத்திலே அது ஹிந்துயிசமாக வளர்ந்த நிலையில், தங்களுடைய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதிகார வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அரசியல் தளத்திலே ஆளுமை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்கிற சூழலில், இங்கே ஒரு மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்கு, அரசியல் தளத்தில் திட்டமிட்டு, வளர்த்துக்கொண்ட இன்றைய தத்துவம் தான், இன்றைய கோட்பாடுதான் ஹிந்துத்துவா என்பது.

ஹிந்துத்துவா என்பது மிகமிக அண்மைக்காலத்திலே இவர்கள் வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு கோட்பாடு.

எல்லாம் ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டுத் தளத்திலே தீர்மானிக்கப்பட்டவை. ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காக இவர்கள் உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம் என்பது.

ஜனசங்கம்தான், பின்னாளில் பாரதீய ஜனதா கட்சியாக மாறுகிறது. ஜனசங்கம் தேர்தலில் நின்ற பொழுது, இரண்டே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர்கள் பாரதீய ஜனதா கட்சி என்று ஓர் அரசியல் பிரிவை உருவாக்கி, ஹிந்துராஷ்டிம் என்கிற ஒரு புதிய கருத்தை முன்வைத்து, ஹிந்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து, ஹிந்துப் பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது.

ஹிந்து பெரும்பான்மையை வலிந்து திரட்டுவது...

எனக்கு இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை என்று, கிறித்துவர்களின் வாக்கு தேவையில்லை என்று, முஸ்லிம் வெறுப்பையும், கிறித்துவ வெறுப்பையும் - அதற்கான மூலாதாரமாக வைத்து, ஹிந்து பெரும் பான்மையை வலிந்து திரட்டுவது. அதற்கு அவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு ஸ்டேட்டஜி.

பாபர் மசூதி இடிப்புக்கு முன் நிகழ்ந்த ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் - வரலாற்று நிகழ்வு அது. மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அவர்கள் நடை முறைப்படுத்தியபொழுது பாரதீய ஜனதா கட்சி கையாண்ட யுக்தியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி, வேலை வாய்ப்பு கேள்விக்குறி

ஷெட்யூல்டு காஸ்ட் அண்ட் ஷெட்யூல்டு டிரைப்ஸ் மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி, வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக மாறுகிறது.

அப்பொழுதே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இதை முக்கியமான கோரிக்கையாக வைக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் குறித்து ஒரு கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம்தான்; ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment