‘‘ஊசி மிளகாய்’’
மத்தியில் உள்ள ஒன்றிய அரசு கடந்த 7ஆண்டு களில் இந்தியா முழுவதிலும் பரவி, பல மாநிலங்களில் கிழக்குப் பகுதி மாநிலங்கள் உட்பட, ஆட்சிகளை அமைத்தது, மக்களின் ஆதரவைப் பெற்றதனாலா? மக்களிடையே இக்கொள்கைகளுக்குக் கிடைத்த வரவேற்பினாலா?
இல்லை; இல்லவே இல்லை; எல்லாம் வித்தைகள் மூலமே!
"ராம்! ராம்! ஆயாராம், காயராம்" என்ற குதிரை பேரங்கள் மூலமே என்பதைக் கீழே காணும் செய்தி அகிலத்திற்கே அம்பலப்படுத்துவதாக உள்ளது! இல்லையா?
அடுத்த கட்சிகளைச் சேர்ந்த 173 எம்.பி. எம்.எல்.ஏ.க்களை வளைத்தது
கட்சித் தாவலால் பெருமளவு ஆதாயம் அடைந்த பா.ஜ.க.
"புதுடில்லி, செப். 11 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் கட்சித் தாவல்கள்மூலம் அதிகம் ஆதாயம் அடைந்த கட்சியாக பா.ஜ.க.-வும், அதிகம் இழப்பைச் சந்தித்த கட்சிகளாக காங்கிரசும், பகுஜன் சமாஜும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன்படி 2014 முதல் 2021 வரையிலான 7 ஆண்டுகளில் தேர்தல்களின்போது, 1,133 வேட்பாளர்கள் மற்றும் 500 எம்.பி.க்கள் மற்றும் எல்.எல்.ஏ.க்கள் அடுத்த கட்சிக்குத் தாவியுள்ளனர். இதில், அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டும் 222 வேட்பாளர்கள், 177 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கட்சிகளுக்குத் தாவியுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளில் 399 தலைவர்களை பறிகொடுத்த காங்கிரஸ், அடுத்த கட்சிகளிலிருந்து 115 வேட்பாளர்களையும் 61 எம்.பி. மற்றும் எல்.எல்.ஏ.க்களையும் தன் பக்கம் இழுத்துள்ளது.
காங்கிரசுக்கு அடுத்தபடியாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) கணிசமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பறி கொடுத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் 153 வேட்பாளர்களும், அதன் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த கட்சிக்கு தாவியுள்ளனர். இதே காலத்தில் மற்ற கட்சிகளி லிருந்து 65 வேட்பாளர்களையும் 12 சட்டமன்ற உறுப்பினர் களையும் பகுஜன் சமாஜ் தன்பக்கம் இழுத்துள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜ.க. கடந்த 7 ஆண்டு களில் 253 வேட்பாளர்கள் மற்றும் 173 எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துள்ள அதே நேரத்தில், 111 வேட்பாளர்கள் மற்றும் 33 எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பறி கொடுத்துள்ளது.
அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தனது 60 வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் அடுத்த கட்சிகளிடம் பறி கொடுத்துள்ளது.
மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 31 வேட்பாளர்கள் மற்றும் 26 சட்டமன்ற உறுப்பினர்களை 7 ஆண்டுகளில் இழந்துள்ளது. அடுத்த கட்சிகளின் 23 வேட்பாளர்கள் மற்றும் 31 சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் வளைத் துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதாதளம் 59 வேட்பாளர்கள், 12 எம்.பி. எம்.எல்.ஏ.க்களை இழந்துள்ளது. மறுபக்கத்தில், அடுத்த கட்சிகளின் 23 வேட்பாளர்கள், 12 எம்.எல்.ஏ.க்களை தன்வசம் கொண்டு வந்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 வேட்பாளர்களையும், 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் பிற கட்சிகளிடம் இழந்துள்ளது. மறுபுறம், வேறுகட்சிகளிடமிருந்து 15 வேட்பாளர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களை தன்னிடம் கொண்டு வந்துள்ளது.
சரத்பவார் தலைமையிலான என்.சி.பி. தனது 52 வேட்பாளர்களையும், 25 சட்டமன்ற உறுப் பினர்களையும் பறிகொடுத்து, அடுத்த கட்சிகளைச் சேர்ந்த 41 வேட்பாளர்களையும், 8 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துள்ளது." ('தீக்கதிர்' - 12.9.2021)
அடுத்தவர் தோட்டத்தில் விளைந்த பயிர்களை அப்படியே அரசியல் சூதாட்டம் ஆடி, நல்ல விலை கொடுத்தோ அல்லது சி.பி.அய். விசாரணை, வருமான வரித்துறை அச்சுறுத்தல் மூலமோ அல்லது ஏலம் போட்டோதான் - இந்த அதிசய ஆபூர்வ சாதனைக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்!
மற்றவர் வளர்த்த மரங்களை அப்படியே பிடுங்கி நட்டு விட்டு "என் தோட்டத்தில் எவ்வளவு மரங்கள் பார்த்தீர்களா? என் தோட்டம் எப்படியெல்லாம் வளர்ந் திருக்கிறது பார்த்தீர்களா?" என்று கூச்ச நச்சமின்றிக் கூவி மகிழ்கின்ற கூத்து பற்றி இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா?
மற்றவர் தோள்மீது ஏறி நின்று "என் உயரம் எவ் வளவு பார்த்தீர்களா?" என்று கேட்கும் விந்தை இது!
அந்தோ ஜனநாயகமே, உன் நிலை இப்படியாக கேலிக் கூத்தாக ஆகி விடுவதா?
வேதனை! வெட்கம்!!
173 எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவிய நிலை - கட்சித் தாவல் தடைச் சட்டம் மவுன குருவாகிவிட்டதே!
No comments:
Post a Comment