கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?

"அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு, எனக் கேற்படுகிற மன உளைச்சல்களை, அயர்வை, சோர்வை - அனைத்தையும் போக்குகின்ற அருமருந்தாக அமைந்திருப்பதே எழுத்துப் பணிதான்.

அதுவும் முதல்வர் எனும் சுமை என் தோளில் ஏற்றப்பட்ட பிறகு, இந்த நான்கு, அய்ந்து ஆண்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் ஓடி விட்டு வந்தவன், எலுமிச்சைப் பழத் தண்ணீரை விரும்பு வதுபோல், நானும் களைப்பாற்றிக் கொள்ளக் கவிதை, கட்டுரை, கதை - ஏதாவதொன்றை எழுதுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக் கிறேன்."

இப்படி 'நெஞ்சுக்கு நீதி'  - தன் வரலாற்றில் தொடக்கமாக எழுதுகிறார்.

மேலே செல்வோமா?

"பல்வேறு தலைப்புக்களில் முப்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் நான் தலைமை ஏற்றுக் கவிதை பாடியிருப்பது இந்த நான்கு, அய்ந்து ஆண்டுகளில்தான்!

அந்தக் கவிதைகளை எழுதுவதற்கு எனக்குக் கிடைக்கிற இடம்? பெரும்பாலும் புகைவண்டி தான்.

இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் புகைவண்டியின் பெட்டிகளின் கதவுகளை மூடிவிட்டுத் தூங்குவது போல ஒரு நடிப்பு! அதன் பிறகு பார்வையாளர்கள், முறையீடுகள், நிச்சயமாக இல்லை என்று நம்பலாம். அதிலும் சில நிலையங்களில் கதவைத் தடார், தடார்' எனத் தட்டி வெளியே ஆளை இழுத்து, "பாவம், நல்ல தூக்கம் போலிருக்கிறது. எழுப்பி விட்டோம். பரவாயில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்'' எனப் புன்னகை புரிகிறவர்களும் உண்டு. இவை களுக்கிடையே இருபது முப்பது பக்கங்கள் எழுதி விட்டோம் என்ற மன நிறைவோடு விடியற்காலை ய்ந்து மணிக்குத் தூங்கி, ஆறு மணிக்கு இறங்க வேண்டிய ஊரில் விழிப்பதிலே ஒரு தனி இன்பம் இருக்கத் தான் செய்கிறது.

காலையில் எழுந்ததுமே வீட்டு வாயிற்புறத்தில் அய்ம்பது பேர் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டுச் சிற்றுண்டி அருந்துவதற்குள் அய்ம்பது நூறாகிறது. சரியாக அழுக்குத் தேய்த்துக் குளித்தே ஆண்டு ஏழுக்கு மேலாகிறது. நூறு பேருடைய பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, மேலும் பத்துப் பார்வையாளர் சீட்டுக்களோடு பையன் மேலே வருகிறான். அதில் இருபது பேரைப் பார்க்க முடியாமல் போய், "கோட்டைக்கு வாருங்கள்; அல்லது மாலையிலே வாருங்கள்'' என்று கூறிவிட்டு, 'அய்யோ இப்படிச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறோமே; என்ன நினைத்துக் கொள்கிறார்களோ?' என்ற மன வேதனையோடு காரிலே ஏற வேண்டியிருக்கிறது.

கோட்டையிலே அதிகாரிகளுடன் - அமைச்சர்களுடன் ஆலோசனை - எதிர்பாராமல் எழுகின்ற எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய இன்றியமையாமை! மூன்று மணிக்குச் சோறு! அதற்காக வெளியே கிளம்பும்போது அலுவலகத்தைச் சுற்றிப் பெரியதோர் பார்வையாளர் அணிவகுப்பு. அவர்களுடைய முறையீடுகளைப் பெற்று அதற்காவன செய்வதாக உறுதியளித்து மீண்டும் மாலை 4-30 மணிக் கெல்லாம் வீட்டில், பார்வையாளர்கள் சந்திப்பு! இதற்கிடையே சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள், சட்டசபை இருந்தால் அந்த வேலைகள்!

இத்தனையிலும் கழக நினைவும், கலை உணர்வும் இழையோடிக் கொண்டிருப்பதால், களைப்பு ஆளை வீழ்த்துவதில்லை; தாங்கிக் கொள்ள முடிகிறது.

அரசாங்கப் பொறுப்பு எவ்வளவுதான் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தாலும் நம் கழக நண்பர்களைப் பார்க்கின்றபோது, இதயத்தில் சுமை குறைகிறது. சுவை ஏறுகிறது. அவர்கள் ஏதாவது சூடான விஷயங்களைக் கொண்டு வந்திருந்தால்கூடக் கழகத்தைப் பற்றி அவை இருந்தால் சூடும் சுவையும் கலந்த இன்பத்தை அனுபவிக்க முடிகிறது."

புரிகிறதா, கலைஞருக்கு எது அருமருந்து, இன்பத்தை எப்படி அனுபவிக்கிறார் - என்பது!

- நாளையும் கலைஞரை சந்திப்போம்.

No comments:

Post a Comment