தொண்டால் உயர்ந்திடும் எம் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

தொண்டால் உயர்ந்திடும் எம் தோழர்கள்!

பெரியார் தொண்டர்களாகிய நமது இயக்கப் பொறுப்பாளர்கள் பலரும் பற்பல ஊர்களில், அதிக விளம்பரங்கள் இல்லாமல் செய்யும் தொண்டறப் பணிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

'ஒரு ரூபாய் பணி - ஓராயிரம் ரூபாய் விளம்பரம்' என்ற இந்த விளம்பர யுகத்தில்கூட, 'பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை' என்று அமைதியான வழியில் நமது மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் நாம் முன்வந்து செய்யும் தொண்டு - பிறர் பாராட்டினாலும் - பாராட்டா விட்டாலும், ஏன் தூற்றினாலும்கூட, தொடரும் என்ற தொண்டு  மனப்பான்மையுள்ள தோழர்கள் நமது இயக்கத்திற்கு அணிகலன்கள் போன்ற வர்கள்!

50ஆம் ஆண்டு திருமண நாள் கண்ட தேனி மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மானமிகு தோழர் . இரகுநாகநாதன் - சாந்தா ஆகிய வாழ்விணையர்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் ஒரு அரிய தகவல் - இதோ அக்கடிதம்:

"மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

"போடிநாயக்கனூர் நகராட்சி - பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்" பற்றிய தகவலுக்காக தங்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

12.12.2012இல் நகராட்சி நிருவாகம் - யாரும் எடுத்து நடத்தத் தயங்கும் எரிவாயு தகன மயானத்தை "பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்" என்று என்னால் துவங்கப்பட்ட அறக் கட்டளை வசம் ஒப்படைத்தார்கள். தமிழ்நாட் டிலேயே தந்தை பெரியார் பெயரில் இயங்கும் - எரிவாயு தகன மயானம் இது ஒன்றுதான்.

ஆரம்பித்த ஒரு வருட காலம் மிகுந்த கஷ்டப் பட்டேன். பழைய முறையில் எரியூட்டுகின்ற வர்களை, சுற்றுச்சூழல் பாதுக்காக்கக்கூடிய எரிவாயு தகன மயானத்தில் எரியூட்ட உடல் கிடைக்கவில்லை. இறந்தவர்களை இல்லம் சென்று மாலை மரியாதை செய்துவிட்டு "எரிவாயு தகன மயானத்தில் நாங்கள் எரியூட்டித் தருகின்றோம்" என்று கேட்டாலும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. நகராட்சி நிர்வாகமும் முயற்சி எடுத்து - பழைய முறையில் எரியூட் டினால் "இறப்பு சான்று" தரமாட்டோம் என்று சொல்லி, ஒருவழியாக கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம்.

மாதம் சராசரியாக 40 உடல்கள் எரியூட்டி வந்து கொண்டிருந்த வேளையில் - மே மாதம் மட்டும் 150 உடல்கள் எரியூட்டியுள்ளோம். தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர், பெரியகுளம் பகுதிகளில் எரிவாயு தகன மயானம் இருந்தாலும் - இந்த கரோனா காலத்தில் இறந்தவர் உடலை வீட்டில் அதிக நேரம் வைத்துக் கொள்ளாமல் உடனே எரியூட்ட வேண்டும் என விரும்பும் வீட்டுக்காரர்கள்  மேற்சொன்ன எல்லா இடங்களுக்கும் போன் செய்தாலும், எந்த நேரத்திலும் எரியூட்டித் தரக்கூடிய இடம் போடி - பெரியார் சமத்துவம் மயானம் மட்டுமே என்று மாவட்டத்தில் உள்ள எல்லோரிடமும் நற்பெயர் எடுத்து வருகின்றது.

நகராட்சி நிருவாகமும், "எந்த நேரத்தில் வந் தாலும் காக்க வைக்காமல் எரியூட்டி விடுங்கள்" என்று அறிவுறுத்தியதினால், இரவு - பகலாக மானமிகு சுருளிராஜ் அவர்களின்   மேற்பார் வையில், எனது கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

மே மாதம்

இயற்கை மரணம் - 77, மருத்துவமனை மரணம் - 34, கரோனா தொற்று மரணம் - 38

எம்மிடம், ஆம்புலஸ்-1, “பெரியார் சமத்துவம்" சிறிய தேர் - 1, பெரிய தேர் - 1

Freezer Box-2 - இதைக் கொண்டு போடி நகர மக்களுக்கு மிக சிறந்த தொண்டாக செய்து வருகின்றோம்.

கடந்த 20 ஆண்டுகாலமாக தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மூலமாக முகாம் நடத்துகிறோம். அவசரத் தேவைக்கு தினமும் நம்மை நாடி குருதி கேட்டு வருகின்றார்கள்.

அத்துடன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடை வழங்கி வருகின்றோம். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடை அளித்து வருகின்றோம்.

மேலும் எங்களின் பணி தொய்வின்றி தொடர தங்களின் வாழ்த்துகள் வேண்டுகின்றோம்."

அன்புடன்

- . இரகுநாகநாதன்

இடுகாடும், சுடுகாடும் தான் - பேதம் தழைத்துள்ள இந்த ஊளைச் சமூகத்தில் சமரசம் ஏற்படுத்துவதும், அதற்கு உதவுவதும் மரணம்  ஒன்றே!

ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந் தவன், படித்தவன் - படிக்காதவன், பதவியாளன் - பதவி இல்லாதவன் என்ற பேதம் மரணத்தின் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களை அடக்கம் செய்வதில்கூட நம் நாட்டில் எப்படி எப்படியோ பேதம்! சிற்சில நேரங்களில் பற்பல இடங்களில் தலைநீட்டி, மனித குலத்திற்கு தலைகுனிவை ஏற்படுகின்றன.

பகுத்தறிவாளர்களும், பெரியாரிஸ்டுகளும்  அதனைப் போக்கும் திறன் உள்ளவர்கள்  என்பதை தோழர்கள் இரகுநாகநாதன் - சாந்தா, லெனின், சுருளிராஜ் ஆகிய ஒரே குடும்பத் தவர்கள்  அற்புதமான சாதனையை அடக்கமிகு அன்பர்களாகச் செய்து, அப்பகுதியில் மறைந்த வர்களுக்கு மரியாதைப் பணி செய்து கடமையாற் றுகின்றனர்!

இதுபோலவே அதே மாவட்டத் தோழர் ஸ்டார் நாகராஜன் - குருதிக் கொடை அளிப்பதில் பல முறை தனித்து உயர்ந்து நிற்கும் தொண்டறச் செம்மல்!

இயக்கம் இத்தகையோர் தொண்டால் பெருமைப்படுகிறது!

இவர்களோ என்றும் பெறாத இன்பம் பெற்று மகிழ்கின்றனர்!

வளர்க அவர்தம் தொண்டறம்!

பெருகட்டும் இதுபோன்ற நற்பணிகள்!!

No comments:

Post a Comment