கரோனா தடுப்பூசி கொள்முதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 9, 2021

கரோனா தடுப்பூசி கொள்முதல்

 பொறுப்புடன் செயல்படும் தமிழ்நாடு அமைச்சரும்எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைக் குறை கூறும்  ஒன்றிய நிதி அமைச்சரும்

கரோனா தொற்றுக் கட்டுப்பாட்டின் முழு ஆளுமையை அதன் முதல் அலையின் பொழுது ஒன்றிய அரசே தன்னிடம் வைத்துக் கொண்டது. இரண்டாவது அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்த நிலையிலும், கரோனா தொற்றை வென்று விட்டதாக உலக அரங்கில் தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டது. இரண்டாம் அலையின் தாக்கம் பற்றிய முன்யோசனை, திட்டமிடல் ஏதுமின்றி உள்நாட்டில் உற்பத் தியான கரோனா தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையானபோது, தடுப்பூசிக் கொள்கையை அறிவித்த ஒன்றிய அரசு, தானே நாட்டின் ஒட்டு மொத்தத் தேவைக்கும் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் மாநிலங்களே தேவைப்படும் தடுப்பூசியை உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கொள்முதல் செய்து கொள்ளலாம் என திடீரென அறிவித்தது. இதனால் மாநிலங்கள் தங்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் முதல்நிலைத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பானதே. வெளிநாட்டுக் கொள்முதல் என்பதில் மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே கொள்முதல் செய்வது எளிது. அந்நியச் செலாவணி மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு அதிகாரம் ஒன்றிய அரசின் வசம்தான் உள்ளது.

மாநிலங்களில் தடுப்பூசிப் பற்றாக்குறை பரவலாகத் தென்பட்ட நிலையில், ஒன்றிய அரசே தடுப்பூசி முழுவதையும் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யலாமே எனும் கருத்தும் பொதுவெளியில் வலுப்பட்டது. உச்சநீதி மன்றமும் இதுகுறித்து வழக்கினை தானே முன்வந்து எடுத்து ஒன்றிய அரசு தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்யலாமே என கருத்தினை அண்மையில் வெளியிட்டது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்த அளவில் தடுப்பூசியை பெற்றிட வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிக்கு கோரி இருந்தது. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, தெலங்கானா, ஆந்திரா, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிக்கு வேண்டுகோள் விடுத்தன. ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் தெரிவிக்க கடைசிநாள் (ஜூன் 5) வரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்பதுதான் உண்மைநிலை.

இது குறித்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊட்டியில் செய்தியாளர் சந்திப்பில் உண்மை நிலையினை - வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்புதல் தர முன்வராத நிலையினை விளக்கினார். ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், “வெளிநாட்டு நிறுவனங்கள் தடுப்பூசி வழங்கிட ஒப்புதல் தராததற்கு ஒன்றிய அரசினைப் பொறுப்பாக்குவது அபத்தமானதுஎன மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் அந்த சந்திப்பிலேயே பதிலளித்தார். இந்த செய்தி பரவலாக அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பானது மீண்டும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் எனும் செய்தியினையும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

ஆனால் மாநிலங்களில் நிலவிடும் தடுப்பூசி பற்றாக்குறை பற்றி செய்தி வெளியிட்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் மாநில அரசுகளை குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைக் குறை கூறும் விதமாகப் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவது மிகவும் மெதுவாகத்தான் நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகளும் வெகுவாக வீணாக்கப்படுகின்றனஎன அனைத்து மாநில அரசுகளை அல்ல - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறைகாணும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.  கரோனா தாக்குதல் இரண்டாம் அலையின் கோரம் அறியாமல், மூன்றாம் அலை வர வாய்ப்பு உள்ளது எனும் அறிஞர் கூற்று பற்றிய புரிதல் இல்லாமல், “ஒன்றிய அரசு ஒட்டுமொத்த தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திட முன்வரும் யோசனையில் உள்ளதுஎன்ற முறையில் கருத்துத் தெரிவித்து உள்ளார். கூடுதலாக தான் அளித்த பிரத்யேகப்  பேட்டி ஒன்றில்சுகாதாரம் (Health) என்பது மாநில அரசு அதிகார வரம்பில் வருகிறதுஎனவும் கூறி தப்பிக்க முனைந்துள்ளார்.

கரோனா தொற்றின் முதல் அலையின் பொழுதுசுகாதாரம்ஒன்றிய அரசுப் பட்டியலில் இருந்ததா? என்பதை ஒன்றிய நிதி அமைச்சர் பொதுவெளியில் விளக்க முன்வருவாரா?

ஒன்றிய அரசின்மீதான விமர்சனத்தைக் கண்டித்து, மக்களைத் தொற்றிலிருந்து காப்பாற்றிட எந்த வழியிலும் செல்ல முயற்சிக்கும் தமிழ்நாடு சுகாதார அமைச்சரின் பொறுப்பான அணுகுமுறையும், ‘சுகாதாரம்மாநில அரசு அதிகார வரம்பில் வருகிறது என கூறும் ஒன்றிய நிதி அமைச்சரின் அணுகுமுறையும் எப்படி இருக்கிறது? கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கடைப்பிடிக்கப்படவேண்டிய அணுகுமுறையில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களிடம் உள்ள வேறுபாடு குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.   

No comments:

Post a Comment