2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்னர், மாநிலங்களின் நிதித் தேவைகளை கேட்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய நிதியை ஒதுக்குகின்ற வகையில் திட்டக்குழு செயல்பட்டு வந்தது. அரசமைப்புச் சட்டம் கூறும் கூட்டாட்சி முறைப்படி, மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டில் ஓரளவிற்குத் தேவையை அறிந்து செயல்படுகின்ற நிலையே நிலவியது. பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு திட்டக்குழு முற்றிலும் கலைக்கப்பட்டு 'நித்தி ஆயோக்'(NITI AYOG) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு மாநிலங்களைக் கலந்து பேசி முடிவெடுக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டது. 'நித்தி ஆயோக்' அமைப்பு எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஒரு தலைப்பட்சமானவையே. மாநிலங்களின் பங்கேற்பு என்பது இல்லை. 'NITI AYOG' என்ற ஆங்கிலப் பெயரில் உள்ள 'NITI' என்பதன் விரிவாக்கம் National Institution of Transforming India என்பதாகும்.
இந்த ஆங்கிலப் பெயரில் நிதியும் (Finance) இல்லை; நீதியும் (Justice) இல்லை. 'நித்தி ஆயோக்' என்றால் ஹிந்தியில் ‘திட்ட அமைப்பு’ என்பதாகும். இதை தமிழில் ‘நிதி ஆயோக்’ என்று சொல்வதும் தவறு. தமிழில் 'தினமணி' ஏடு, ‘நீதி ஆயோக்’ என்ற மொழி பெயர்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. ‘நீதி’ சார்ந்து செயல்படுகின்ற அமைப்பு எனும் கருத்தாக்கத்தை உருவாக்கிட முனையும் நினைப்பில் செயல்படுவதாகத்தான் இந்த மொழிபெயர்ப்பைக் கருத முடியும். மொழிபெயர்ப்பு என்பது சரியான பொருளைத் தருகின்ற வகையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘தினமணி’ ஏடு சரியான மொழிபெயர்ப்பினை பதிப்பிக்க முன்வருமா? தொடர்ந்து ‘நீதி ஆயோக்’ என பதிப்பிப்பது நியாயமான செயல் அல்ல; பொருத்தமான மொழிபெயர்ப்பும் அல்ல; பா.ஜ.க. ஆட்சி உருவாக்கிய அமைப்பினை தூக்கிப் பிடிக்கும் - தாங்கிப் பிடிக்கும் முனைப்பே ஆகும். ‘தினமணி’ ஏடு தனது போக்கினை மாற்றிக் கொள்ளுமா?
- வீ.குமரேசன்
No comments:
Post a Comment