பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 9, 2021

பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?

இந்திய அரசை 'ஒன்றியம்' என்று எப்படி அழைக்கலாம் என்று மாலன் முதல் நாராயணன் வரை மூன்று நாட்களாக குதித்துக் கொண்டு இருக்கின்றனர், தொலைக்காட்சி விவாதத்தில் சரியான பதிலடிகள் வருவதால் முந்தைய ஆட்சியைப் போல் பொய்யைக் கத்திக் கத்திப் பேச முடியாமல், நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறி சரக்கு இல்லாமல் வந்தவர்கள் ஓடி விடுகிறார்கள்.

"மத்திய", "ஒன்றிய" என்கின்ற இரண்டுக்கும் கண்டிப்பாக வேறுபாடு உண்டு!

மத்திய - மய்யம் - சர்வாதிகாரம்;

ஒன்றியம் - இணைந்த - சமத்துவம்.

சமத்துவம் என்ற வார்த்தை அவாள்களுக்கு எட்டிக்காய்போல் கசக்குமே! ஒன்றியம் என்றால் திருவள்ளுவர் கூறிய 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று ஆகிவிடுமே!

மத்தியம் என்றால் அவாளின் நால்வர்ணத்தின் சிதறல். ஆகவேதான் 'ஒன்றியம்' என்று கூறுவதன் உண்மை கண்டு உடல் எரிந்து கதறுகிறார்கள் - கூவுகிறார்கள்.

இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றைத் தலைமையின் கீழ் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்பது, தனி மன்னராட்சி  சமஸ்தானங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டமே!

ஜம்மு காஷ்மீர் ராச்சியம், மைசூர் சமஸ்தானம், சிக்கிம் ராச்சியம், திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் உண்டு. பரோடா அரசு, மற்றும் டல்ஹவுசி பிரபு அறிவித்தபடி, பிரிட்டனின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான, சதாரா அரசு 1848, நாக்பூர் அரசு 1854, தஞ்சாவூர் மராத்திய அரசு 1855, அயோத்தி இராச்சியம் 1859, அங்கோல் அரசு, ஆர்க்காடு அரசு 1855, பண்டா அரசு, குல்லர் அரசு, ஜெயந்தியா அரசு, ஜெய்ப்பூர் அரசு, ஜலாவுன் அரசு, ஜஸ்வன் அரசு, ஜான்சி அரசு, கச்சாரி அரசு, காங்கிரா அரசு, கண்ணனூர் அரசு, கிட்டூர் அரசு, குடகு இராச்சியம், கொலபா அரசு, கோழிக்கோடு அரசு, குல்லூ அரசு, கர்னூல் அரசு, குட்லேஹர் அரசு, மக்க ரை அரசு,  நர்குண்டு அரசு, பஞ்சாப் அரசு, ராம்கர் அரசு, சம்ப ல்பூர் அரசு, சூரத் அரசு, சிபா அரசு, துளசிப்பூர் அரசு, உதய்ப்பூர் அரசு, (சத்தீஸ்கர் மாநிலம்).

மேலும், ஏறக்குறைய 225 சிறு குறு மன்னராட்சி அரசுகளையும் உள்ளடக்கிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரங்களை உள்ளடக்கிய தனித் தனி நாடுகளாக இருந்தன. 1948க்குப் பிறகு இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து உருவான பல நாடுகளின் கூட்டமைப்புதான் இன்றைய இந்தியா என்பது கடந்த கால வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதில் எந்த நாடும் ஒரே மொழியைப் பேசியதில்லை, ஒரே உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, ஒரே கலாச்சாரத்தை உடையதாக இல்லை, ஒரே தெய்வ வழிபாடு முறை கொண்டிருக்கவில்லை, ஒரே நிறமும், தோற்றமும் கொண்டவர்களாக இருக்கவில்லை.

300க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே கூட்டமைப்பில் இணைந்த ஒரே காரணத்திற்காக ஒரே கலாச்சாரம், ஒரே மொழி , ஒரே மதத்தைப் பின்பற்றி ஒரே குடிகளாக மாற வேண்டும் என்பதும், வாழ வேண்டும் என்பதும் அந்த மக்களின் மேல் திணிக்கப்படும் அத்துமீறல் அதிகார வன்முறை தான் அன்றி வேறில்லை.

இந்த 300 நாடுகளில் எதை இந்திய தேசமாக சொல்கிறார்கள்? எந்த நாடு பழைய இந்தியா - இந்திய தேசம் என்பதின் ஆரம்பப் புள்ளி  எந்த நாடு என்று யாரால் சொல்ல முடியும்? இத்தனை நாடுகளையும் 1948ஆம் ஆண்டுக்குப் பின் ஒருங்கிணைத்து உருவாக்கிய மாநிலங்களின் கூட்டமைப்புதான் இன்றைய இந்தியா. இதைத் தான் டாக்டர் அம்பேத்கர்"India, that is Bharat, shall be a Union of States"என்று தான் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் திட்டவட்டமாகப் பதிவு செய்து இருக்கிறார் 'ஒன்றிய அரசு' என்பதுதான் அரசியல் சாசனம் சொல்வது - சட்டப்படியானது.

தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் தனி அடையாளமும், தனி மொழியும், கலாச்சாரமும் கொண்ட ஒரு மாநிலம் ஆகும்.

மத்திய அரசு என்று குறிப்பிடுவது மக்களின் மீது  - மாநிலங்களின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறையே!

மத்திய அரசு என்பதற்கு மக்கள் கிடையாது. மாநில அரசுகளுக்குத்தான் மக்கள் உண்டு - மக்களிடம் அன்றாட தொடர்பும் உண்டு.

ஒரு முக்கியமான கேள்வி உண்டு.  'Union of States'  என்பதற்குத் தமிழ் மொழி பெயர்ப்பு 'மாநிலங்களின் ஒன்றியம்' என்பதுதானே!

ஆங்கிலத்தில் சொல்லும்போது வலி தெரியாது - தமிழில் சொல்லும் போது மட்டும் இந்தப் பார்ப்பனர்களின் நாடி அதிவேகத்தில் துடிதுடியென்று துடிக்கிறது. காரணம், பார்ப்பனர்களுக்கென்று ஒரு நாடு கிடையாது அல்லவா!

No comments:

Post a Comment