"வாருங்கள் படிப்போம்..." அய்யா ஆசிரியர் அவர்கள் உரை (5) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 7, 2021

"வாருங்கள் படிப்போம்..." அய்யா ஆசிரியர் அவர்கள் உரை (5)

 வா.நேரு, மதுரை

நேற்றைய தொடர்ச்சி...

அவர் வந்ததிற்கு ரூ 2 கொடுத்தபிறகும் (அந்தக் காலத்தில் 2 ரூயாய் என்பது அதிக மதிப்பு வாய்ந்தது), கெஞ்சி அழைத்த போதும் அவர் வரவில்லை. 7ஆம் தேதி எனது குழந்தையும் மனைவியும் இறந்து  விட்டார்கள் என்று அந்த ஆசிரியர் எழுதியிருப்பதை மனம் நொந்து,வெந்து டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

தாழ்த்தப்பட்டவர்களைத் தொடுவதை விட நாங்கள் மனிதர்களாக இல்லாமல் போகிறோம் என்று ஜாதி ஹிந்துக்கள்  நடந்து கொள்வதைக் குறிப்பிடுகின்றார்.

திராவிட மாடலில் நல்வாழ்வுத்துறை

இப்போது அப்படியே திராவிட மாடலுக்கு வாருங்கள். இந்த்த் திராவிட மாடலில் ,மக்கள் நல்வாழ்வுக்கு என்று வரக் கூடிய இந்த வாய்ப்புகளில்'Democratising care‘   என்று எழுதியிருப்பதை நண்பர் முரளிதரன் அவர்கள் கூட முரசொலியின் தலையங்கத்தில் அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார்கள்.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுப்பாட்டை உருவாக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. திராவிட மாடல் என்ன செய்த்து? இந்தியாவிலேயே மிகச்சிறந்த அடித்தளக் கட்டமைப்பு- Infra Structure  இங்குதான் இருக்கிறது. தமிழ் நாட்டில் மாநில அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் பாதிக் கட்டிடங்கள் சுகாதாரம், கல்வி சார்ந்தவை.

மத்திய அரசு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஆரம்ப நிலை மருத்துவத்தை வழங்குவதை நோக்கியே தமிழ்நாடு தன் நிதியைச்செலவழித்திருக்கிறது.திராவிடர் ஆட்சிகள்,திராவிட மாடல் என்றால் என்ன?.. மக்களுக்கு மருத்துவ வசதிகள் அமைப்பதில் மிக முக்கியமான கட்டமைப்பு  இந்த ஆரம்ப நிலைய சுகாதார நிலையங்கள்தான்.

இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் 27,215பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் 32,884பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்தான் இருக்கிறது. இதுதான் திராவிட மாடல், வளர்ச்சி.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 12 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. குஜராத், மகாராட்டிரா மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகவும், கூடுதல் வசதிகளோடும் செயல்படுகின்றன. மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 சதவிகிதத்திற்கும் மேலானவை 24 மணி நேரமும் செயல்படுகின்றன. ஆனால் இந்திய அளவில் 39 சதவிகிதம் மட்டுமே (89 சதவிகிதம் எங்கே? 39 சதவிகிதம் எங்கே?) 24 மணி நேரமும் செயல்படுகின்றன. மிக அழகாக திராவிடன் மாடல் புத்தகத்தில் இருக்கும் செய்திதான் இதிலே மொழி பெயர்த்துக்கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி  ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கி விட்டாலும் அதில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள், மருந்து ஆளுநர்கள் தேவை. இதற்கு மருத்துவக்கல்லூரிகள் தேவை. இப்படியான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதிலேயே நாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. திராவிட இயக்கம், கலைஞரின் ஆட்சி, மற்றவர்களின் ஆட்சி சிறப்பாக செயலாற்றியதின் விளைவு இது. இந்திய அரசின் விதிமுறையை விட தமிழ்நாட்டின் விதிமுறை மேலானது. தமிழ்நாட்டில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதற்கு இதுதான் காரணம்.

'நீட்' தேர்வும் தமிழ் நாட்டின் மருத்துவக்கல்லூரிகளும்

'நீட்' தேர்வு வந்தற்கும் இதுதான் முக்கியக் காரணம்.விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. புரிந்துகொள்ளுங்கள். இந்திய அரசின் விதிகளின்படி, 2015இல் தமிழ்நாட்டில் 15 மருத்துவக்கல்லூரிகள் இருந்தால் போதுமானது. நண்பர்களே, அப்போதே தமிழ் நாட்டில் 45 மருத்துவக்கல்லூரிகள் இருந்தன. இந்தியா முழுவதும் 385 மருத்துவக்கல்லூரிகள்தான் இருக்கின்றன என்ற நிலையில் அதில் 12 சதவிகிதக் கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருந்தன.அதற்கு அபராதம் என்ன? மத்திய அரசின் தொகுப்புக்கு இங்கிருந்து  போகணும். இட ஒதுக்கீடு அடிப்படையில் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால்கூட மத்திய  அரசு கொடுக்காது.அது வேறு அரங்கத்திலே விவாதிக்கப்பட வேண்டிய செய்தி.எனவேதான் தனியார் மருத்துவக்கல்லூரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாலும் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக்கல்லூரி இருப்பதை அரசு உறுதி  செய்திருக்கிறது.தரவுகளின் படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட  மருத்துவர்களின் விவரப்படி,தமிழ் நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியா முழுவதும் பார்த்தால் வெறும் 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள்.ஆகவே திராவிட மாடல் என்பது எப்படிப்பட்டது?.செவிலியர்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் தமிழ் நாட்டில் 10000 பேருக்கு 44.4 பேர் இருக்கிறார்கள். இந்திய அளவில் 10,000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கிறார்கள்.

ஆயிரம் பாராட்டுகள்:

திராவிட மாடல் என்பது  எப்படிப்பட்டது?. நன்றாக நீங்கள் நினைத்துப்ப்பார்க்கவேண்டும். எனவே அனைவருக்கும் அனைத்தும். அதிலும் குறிப்பாக யார் ஒடுக்கப்பட்ட மக்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.எனவே தான் அன்றைக்கு  கத்தியவாரிலே நடந்த நிகழ்வுக்கு ஜாதி அடிப்படை. ஆனால் தமிழ் நாட்டில் ஜாதி  ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமத்துவத்திற்கு வாய்ப்பு  கொடுத்து, கல்வியிலே அவற்றைக் கொண்டுவந்து ,அதைப் பொதுமைப்படுத்தி, இன்னார்க்கு இதுதான் என்பதற்குப் பதிலாக 'எல்லோருக்கும் எல்லாம்,’ 'கல்வி நல்கா கசடருக்கு தூக்கு மரம் அங்கே உண்டாம்' என்று சொன்னதைப் போல,மிக முக்கியமாக கல்வி வாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுத்து சமதர்மப் படுத்தி, குலதர்மத்தை அழித்தது. அதுதான் திராவிட மாடல்.அதிலே இது மட்டும், ஒரு பகுதி மட்டும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.இதைப் போல பல புள்ளி விவரங்களை எடுத்துச்சொல்லி சிறப்பாக வந்திருக்க்கூடிய இந்த நூல், அனைவருக்கும் பரப்பபடவேண்டிய, செய்திகள் உள்ள நூல். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்என்று சொல்கிறவர்கள் எவ்வளவு பெரிய தவறு இழைத்தவர்கள் என்பதை அறிய இந்த நூலைப் படிக்கவேண்டும். “பொய்யிலே முக்காற்படி,புரட்டிலே காற்படி,வையகம் ஏமாறும் படி வைத்துள்ள நூற்களை ஒப்புவது எப்படி" என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்களே, அதுபோல அந்தக் கருத்துகளை எல்லாம் தள்ளுபடி செய்து ,நூலைப் படி, அறிவைப் படி என்று சொல்லத்தக்க அளவிற்கு இதனைப் படியாகக்  கொள்ளுங்கள். இதனைப் போல அறிஞர்களே பல  நூல்களை எழுதுங்கள். இவர்களைப் பின்பற்றுங்கள். உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள். அதற்காக நூல் ஆசிரியர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள், வெளியிட்டவர்கள் உட்பட.நன்றி." என்று குறிப்பிட்டு ஆசிரியர் அவர்கள் ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார்.

 அய்யா ஆசிரியர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவித்து,’வாருங்கள் படிப்போம்குழுவின் ஒருங்கிணைப் பாளர் பேரா.உமாமகேஸ்வரி உரையாற்றினார்.கேள்வி பதில் நிகழ்ச்சியில், கேட்பாளர்களின் கேள்விகளுக்கு  ஆசிரியர் அவர்கள் பதில் அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் கலந்து கொண்டு,உணர்ச்சிகரமாக தனது கருத்தினை நிகழ்வில்  பதிவு செய்தார்.

(நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment