வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 7, 2021

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 கண் மருத்துவர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தந்த "கருத்தோம்பல்!"

 

வேலூரில் தி.மு..வின் முக்கிய செயல்வீரரும், மேனாள் மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் இருந்த அருமை சகோதரர்  முகம்மது சகி அவர்களது அருமைச் செல்வன்,  கண் மருத்துவர், சிறந்த திராவிடர் இயக்கப் பற்றாளரான டாக்டர் முகம்மது சயி அவர்களது இல்லத்தின் விருந்தோம்பலை கழகத்தவர்களாகிய நாங்கள் பல முறை அனுபவித்து மகிழ்ந்துள்ளோம்.

அன்பால் திக்குமுக்காடித் திணறும் அளவுக்கு விருந்தோம்பலை முனைப்புடன் செய்வர்!

அத்தகைய கொள்கைக் குடும்பத்தவர் நமது கண் மருத்துவர் டாக்டர் முகமது சயி அவர்கள். 4.6.2021 அன்று, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்றமருத்துவரிடம் கேள்வி கேட்டு அய்யங் களைப் போக்குதல்பற்றிய ஒரு நிகழ்ச்சியை நாங்கள் குடும்பத் துடன் பார்த்தோம். மிகவும் மகிழ்ந்தோம். பயனடைந் தோம்! கண் மருத்துவர் முகம்மது சயி அவர்களது 'கருத்தோம்பல்' மிகவும் தெளிவாக அய்யங்களைப் போக்குவதாக இருந்தது!

கரும்பூஞ்சை என்ற தொற்று பற்றிய பீதி கரோனாவை விட அதிகமாக மிரட்டி வரும் இக்காலக்கட்டத்தில் அதுபற்றி துல்லியமாகவும், தெளிவாகவும், கேட்கும் எவருக்கும் அளவுக்கு மீறிய அந்தப் பீதியைப் போக்கும் வண்ணமும், நம்பிக்கையும், நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிகளுக்குப் பெருக்கித் தரும் வண்ணமும் அந்தக் 'கருத்தோம்பல்' (இது ஒரு புதிய சொல்லாக்கம்தான்) அமைந்திருந்தது.

கண்களைப் பாதிக்கும் கரும்பூஞ்சை (திuஸீரீus) தொற்று பல ஆண்டுகளாக இருப்பதுதான் - இப்போது அதிகமாகப் பரவி வருகிறது என்பதும் உண்மையே!

கரோனா வந்தவர்களுக்கெல்லாம் அது வந்து விடும் என்று வீணே அச்சப்பட வேண்டியதே இல்லை.

1. அதிகமான அளவுக்கு  - கட்டுப்பாடற்ற நீரிழிவு -  சர்க்கரை நோயின் அளவு 400, 500 என்ற அளவில் கட்டுமீறிப் போனவர்களுக்கும் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படக்கூடும்.

2. மற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதனாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

3. ஸ்டீராய்ட் (ஷிtமீக்ஷீஷீவீபீ) அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அதன் பாதிப்பாகவும் இத்தொற்று ஏற்படக்கூடும்.

4. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக - ஆயிரத்தில் எங்கோ ஒன்று என்று இந்த கரும்பூஞ்சை நோய் வந்தது. இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில்  மற்ற பாதிப்புகளும் நோயாளிகளுடன் இணைவதால் இந்தக் கரும்பூஞ்சைத் தொற்றும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே கரோனா பாதிப்பாளர்களுக்கெல்லாம் இது வந்து விடும் என்று பீதி அடைய வேண்டாம். இது குணப்படுத்த முடியாத உயிர்க்கொல்லி நோய் என்று நம்பிக்கை இழந்து - நோயில் சாவதை விடபயம் - பீதியில் நோயாளிகள்சாகும் அளவுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.

துவக்கத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தி மீள முடியும்; சர்க்கரை கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கம், மருத்துவ முன்னெச்சரிக்கை ஆகிய மூன்றையும் கடைப்பிடிப்போர் எவரும் அச்சப்பட வேண்டியதில்லை; அப்படியே அது தாக்கினாலும் ஆரம்பத்திலேயே அதன் அறிகுறிகளைக் கண்டு அறிந்தால் நிச்சயம் அதை வென்று மீள முடியும் என்று தெளிவினை, துணிவினை "ஊசி மருந்தாக"க் கேட்கும் நோயாளிகளுக்குத் தனது 'கருத்தோம்பல்' மூலம் செலுத்தினார் நமது கண் மருத்துவர் அவர்கள்!

நல்ல தன்னம்பிக்கையை, கேள்வி கேட்ட எல்லோரிடமும் விதைத்தார்; அதனைப் பதியும் படி கருத்துப் பரிமாற்றமும் செய்தார்.

நோய்த் தடுப்பு மட்டுமின்றி நோய் பற்றிய விழிப் புணர்வும் இன்றையக் காலகட்டத்தில்  மிக முக்கியமாகும்.

மருத்துவப் பெருந்தகையாளர் டாக்டர் முகமது சயி, தெளிவூட்டும் அத்தகைய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இத்தகைய கருத்தோம்பல் மூலம் செய்து வருவது - சிறப்பானது!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின்  இத்த கையகருத்தோம்பல்நிகழ்ச்சிகள் வகுப்பறைப் பாடங்களாகக் கேட்போரை வசீகரிக்கச் செய்வனவாகும். காரணம், நல்ல மருத்துவர்களை அழைத்துக் கருத்து விருந் தளிப்பதேயாகும்!

No comments:

Post a Comment