எண்ணிப் பார்க்கட்டும் உன்மூளை! - நீ
பீடு நடைபோட்டு
நிமிர்ந்து நடப்பது
பெரியார் போட்ட நெடுஞ்சாலை!
நம்
உயிரை நிகர்த்தபெயர்
பெரியார்! பெரியார்!
நெடுஞ்
சாலைக்கு வைத்த
தந்தை பெரியார்
பெயரை நீக்குதல்
முறையா? சரியா?
இன்னும் ஆரியச் சதிவலையா?
இனியும் பழைய இழிநிலையா?
இதயம் குமுறும் எரிமலையாய்
எழடா! தமிழா! கனல்அலையாய்!
பகுத்தறி வென்னும்
வாளை எடுத்தார் - நரிப்
பார்ப்ப னீயத்தின்
வாலை அறுத்தார்!
புகுத்திய வைதீக
இருட்டை ஒழித்தார் - பொய்
புராண, இதிகாசப்
புரட்டைக் கிழித்தார்!
வீசிய செருப்பைக்
கண்டு நகைத்தார் - கொடும்
விஷப்பாம் புகளைக்
காலில் மிதித்தார்!
“தாசி மகன்”என்னும்
இழிவைத் துடைத்தார் - மனு
தர்மத்தைத் தீயில்
பொசுக்கி எரித்தார்!
மூட நம்பிக்கைத்
தடைகளை உடைத்தார் - அந்த
“மூன்று விழுக்காட்டின்”
ஆதிக்கம் தகர்த்தார்!
காடு மேடென்று
சுழன்றே உழைத்தார் - நாம்
கல்வியில் முன்னேறப்
பாதை வகுத்தார்!
“நிகர்நிலைச் சமுதாயம்“
சரித்திர நேர்வு - அவர்
நிகழ்த்திய புரட்சியால்
ஏற்பட்ட தீர்வு!
அகிலத்தில் நாமிங்கே
யாருக்குத் தாழ்வு? - தமிழர்
ஆட்சியும் மீட்சியும்
அவர்தந்த வாழ்வு!
ஈடு இணையிலாத்
தமிழா! தமிழா!
எண்ணிப் பார்க்கட்டும் உன்மூளை! - நீ
பீடு நடைபோட்டு
நிமிர்ந்து நடப்பது
பெரியார் போட்ட நெடுஞ்சாலை!
நம்
உயிரை நிகர்த்தபெயர்
பெரியார்! பெரியார்!
நெடுஞ்
சாலைக்கு வைத்த
தந்தை பெரியார்
பெயரை நீக்குதல்
முறையா? சரியா?
இன்னும் ஆரியச் சதிவலையா?
இனியும் பழைய இழிநிலையா?
இதயம் குமுறும் எரிமலையாய்
எழடா! தமிழா! கனல்அலையாய்!
- கவிச்சுடர் கவிதைப்பித்தன்
No comments:
Post a Comment