கரோனாவை வீழ்த்துவதில் தமிழக அரசின் போர்க்கால வேகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 25, 2021

கரோனாவை வீழ்த்துவதில் தமிழக அரசின் போர்க்கால வேகம்!

 தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?வேகமாக  செயல்படாதது ஏன்? பாரபட்சமின்றி மத்திய அரசு நடக்கட்டும்!

கரோனாவை வீழ்த்துவதில் தமிழக அரசின் போர்க்கால வேகம்! தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தயக்கம்
காட்டுவது ஏன்? வேகமாக செயல்படாதது ஏன்? பாரபட்சமின்றி மத்திய அரசு நடக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கரோனா கொடுந்தொற்று (கோவிட் 19) அதன் இரண்டாம் அலை வீச்சினை முழு மூச்சாகக் காட்டி மக்களின் உயிர் பறிக்கும் அவலம் தொடருவது ஒருபுறம்.

மற்றொருபுறம் கரோனா தொற்றின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படும் கரும்பூஞ்சை நோயும் பலருக்கு வந்து மக்கள் அவதியும், பீதியும் கொள்வது மேலும் துன்பத்தை அதிகரிக்கவே செய்யும் அவலமாகும்.

அவரவர் பணிகளை கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்!

தமிழ்நாட்டில் தி.மு.. வெற்றி பெற்று ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக அமருவதற்கு முன்பிருந்தே, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள் தனது அயராத பணியை புயல் வேகத்தில் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அவரது அமைச்சரவையினரும், அதிகாரிகளும், களப் பணியாளர்களாக இந்தப் ‘‘போரில்'' ஈடுபட்டுள்ள உயிர் பற்றிக் கவலைப்படாது உழைக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும், காவல்துறை யினரும், துப்புரவுத் தொழிலாளத் தோழர்களும் அவரவர் பங்களிப்பை மிகுந்த கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்!

ஆனால், கரோனாவை கட்டுப்படுத்தித் தடுக்க முக்கிய கருவியான தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு அனுப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா... அரசு, இதில் அரசியல் பார்வையுடன் நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பரவலாகவும், உலகளாவிய நிலையிலும், மத்திய பா... அரசின் நடவடிக்கை சரிவர இல்லை என்றும் விமர்சிக்கும் நிலையே உள்ளது!

தடுப்பூசிகளை உடனுக்குடன் விநியோகம் செய்திருந்தால்...

மத்திய அரசு தடுப்பூசிகளை மொத்தமாக கொள் முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கு - பாதிப்பிற்கு ஏற்ப முன்னுரிமை அளித்து, தடுப்பூசிகளை உடனுக் குடன் விநியோகம் செய்திருந்தால், அமெரிக்காவைப் போல் (ஜோபைடன் நிர்வாகப் பொறுப்பேற்றவுடன் தொடர்ச்சியாக அதில் கவனம் செலுத்தியதுபோன்று செலுத்தியிருந்தால்) கரோனாவைத் தடுக்க, கட்டுப்படுத்த - இரண்டாம் அலையின் வீச்சை எதிர்கொள்ளப் பெரிதும் பயன்பட்டிருக்கும்.

முதலில் தன்னிடத்திலேயே அந்த அதிகாரத்தை வைத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி, எல்லோருக்கும் இலவசமாக ஊசி போடுவதை ஒரு தீவிரமான நடவடிக்கையாக ஆக்கியிருந்தால், இந்தக் குழப்பமும், மயக்கமும் இருக்காது!

தடுப்பூசிகளை அனுப்புவதில் ஏனோ பாரபட்சம்?

மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்புவதில் ஏனோ பாரபட்சம்? அதை பல உயர்நீதிமன்றங்களே சுட்டிக்காட்டிய நிலை! (முன்பு டில்லி உயர்நீதிமன்றமும், அலகாபாத் உயர்நீதிமன்றமும், நேற்று (24.5.2021) சென்னை உயர்நீதிமன்றம் போன்றவை தங்கள்அதிருப்தியை' வெளிப்படையாகத் தெரிவித்து, பாரபட்ச நடவடிக்கைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளன).

தமிழ்நாடு தி.மு.. அரசு மூன்றரை கோடி தடுப்பூசி களை வரவழைக்கப் பன்னாட்டு டெண்டர்களைக் கோரியுள்ளது; மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ள தடுப்பூசி  77 லட்சம். நேற்றுவரை 70 லட்சம் ஊசிகள் போடப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுறுசுறுப்புமிகு மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் ஃபைசர், மாடெர்னா முதலியவை ஏனோ மாநிலங் களுக்கு வழங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி, தயங்கும் நிலையும் உள்ளது.

இதை மேனாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் அவர்களும் சுட்டிக்காட்டி, மக்களை இப்படி உயிரி ழக்கும் நிலைக்குத் தள்ளலாமா என்றும் கேட்டிருக்கிறார்!

அவசரம் - அவசியம்!

பிரதமரும், மத்தியில் ஆளும் பா... அரசும் இந்த தடுப்பூசி விநியோகம்பற்றிய குழப்பத்தை நீக்கி, தெளிவான, திட்டவட்டமான அறிவிப்புகளை  அறிவித்து  - மாநிலங்களுக்குத் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றிக் கிடைத்து, குழந்தைகள் உள்பட 18 வயதினருக்கும், மூத்தவர்கள் என்ற வயது வேறுபாடின்றி தடுப்பூசிப் பயன்களை மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தத் தடையாக உள்ள அத்துணை இடையூறுகளையும், தடங்கலையும் நீக்கிட முன்வருதல் அவசரம் - அவசியம்!

இப்பிரச்சினையில் அரசியல் பார்வை எந்தத் தரப்புக்கும் இன்றி, மனித நேயப் பார்வைதான் ஆளுமை செலுத்தவேண்டும்.

முக்கிய வேண்டுகோளாகும்!

தடுப்பூசிதான் மக்களை இந்தக் காலகட்டத்தில் இந்தப் பேரிழிவிலிருந்து காப்பாற்றக் கூடிய நம்பிக்கை ஒளியாகும். அதனைத் தங்கு தடையற்று மாநில அரசுகளுக்குக் குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தந்து செயல்படும் வேக அரசுக்கு உதவிட முன்வருக!

இது முக்கிய வேண்டுகோளாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

25.5.2021             

No comments:

Post a Comment