எண்ணிக்கையில் பாதியாய்
எத்திறத்தும் மிகுதியாய்
இருந்திடும் பெண்ணினத்தின்
அடிமைத்தளையை அறுக்காது
மண்ணடிமை தீருமென்பது
முயற்கொம்பே என்றுரைத்தவர்
மானமிகு மனிதயினத்தின்
மாண்புகளை கூறுபோட்டு
மனிதம் கொல்லும்
மரணநஞ்சாம் ஜாதியத்தை
மனமகிழ ஏற்போரை
இன்னும் இருக்கின்றானேயென்றவர்
என்னைப் பேச வைத்த
தொன்மைத் தமிழ்மொழிக்கு
தாயாம் திராவிடத்தின்
எதிரியாம் ஆரியத்தை
நத்திப்பிழைக்க கோடிதரினும்
தொடமாட்டேன் என்றவர்
வடக்கினை வாழ வைக்கும்
தெற்கினை மாள வைக்கும்
சுரண்டும் வடவருக்கு
சூலறுக்கும் பனங்கருக்காய்
சூடுபோம் செம்பழுப்பிரும்பாய்
சுயமரியாதை காத்தவர்
நான் யார்? என்இனமெது?
என்றென்னைக் கேட்டால்
'திராவிடன் என்கையில்
நாவெலாம் தேன்தான்'
எனமகிழ்ந்த பாவலன்
இனங்காத்த காவலன்
கொடியோர்க்கு முடிவுகட்ட
எளியோர்க்கு வாழ்வளிக்க
உலகாளத் துடிக்கும்
தமிழுக்குத் துணை நிற்க
புலியாய் புறப்படு
தலையறுக்க வாளெடு வென்றவர்
தமிழை உயிருக்கு நேரென்றார்
தந்தை பெரியாரை உயிரென்றார்
மணியம்மையை அன்னையன்றி யாரென்றார்
ஆசிரியரை ஆசிரியர்கட்கு சட்டாம்பிள்ளையென்றார்
அவர்தான் புரட்சிக் கவிஞர்
அவர் பிறந்தநாளே ஏப்.29.
புரட்சிக் கவிஞரின் புத்துலகமைப்போம்
வாழ்க புரட்சிக்கவிஞர்!
---- முனைவர் அதிரடி க.அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment