ஓர் அன்பு வேண்டுகோள் - அறிவிப்பு!
அன்பார்ந்த கழகக் கொள்கைக் குடும்பத்து உறவுகளே, பகுத்தறிவாளர்களான உடன்பிறப்புகளே, ‘விடுதலை'யின் வாசகப் பெருமக்களே - ஓர் அன்பு வேண்டுகோள் - அறிவிப்பு!
கரோனா கொடுந்தொற்று (கோவிட் - 19) இரண்டாம் அலையின் வீச்சு மிகவும் கொடூரமாகப் பரவி வருவதை அறிவீர்கள்.
தடுப்பூசிப் போட்டுக் கொள்வது, முகக்கவசம் தவறாது அணிதல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுதல், தனி நபர் இடைவெளி, கிருமி நாசினி தடவிக் கொள்ளுதல், தேவையற்று வெளியே செல்லுதலைத் தவிர்த்தல், தூய்மைப் பாதுகாப்பு, தனிமையின் இனிமையை சுகமான சுமையாக ஆக்கிக் கொள்ளல்மூலம் நாம் நம்மையும் பாதுகாத்து, பிறரையும் காப்பாற்றலாம்.
இந்நிலையில், நமது ‘விடுதலை' பணித் தோழர்களை வீட்டிலிருந்து (ஷிப்டு முறையில்)- வரும் இரண்டு வாரங்கள் உச்சக்கட்டமாக இரண்டாம் அலை வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், பணி செய்ய - 8 பக்கங்களை மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை 4 பக்கங்களில் - கரோனா தொடக்க முதல் அலை இருந்த காலம் போல கொண்டு வந்து, உரிய காலத்தில் அனைவருக்கும் ‘விடுதலை' பிரதிகளும், PDF வடிவிலும் கிடைக்கும் ஒரு ஏற்பாட்டைத் தற்காலிகமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
அதன்படி வரும் திங்கள் முதல் (19.4.2021) 4 பக்கங்களாக ‘விடுதலை' வருவது தவிர்க்க இயலாததாகவும், சூழ்நிலைக் கேற்ப நமது பணித் தோழர்களின் உடல்நலம், பாதுகாப்பு - மற்ற சமூகநலம் கருதியும் - இந்த ஏற்பாடு ஒரு தற்காலிகம்தான் - நிரந்தரம் அல்ல!
வாசகப் பெருமக்கள் அனைவரது அன்பான, கனிவான கடமை உணர்வுடன் கூடிய ஒத்துழைப்பைப் பெரிதும் வேண்டுகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.4.2021
No comments:
Post a Comment