டேராடூன், ஏப்.15 கும்பமேளாவையொட்டி, அரித்துவாரில் உள்ள கங்கை நதியில் லட்சக்கணக்கானோர் ‘புனித' நீராடினராம். சமூக இடைவெளியை பின்பற்றாததால், கரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் கும்பமேளா நடந்து வருகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்த நிகழ்வில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சாமியார்களும், பக்தர்களும் வந்து கங்கையில் ‘புனித' நீராடுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
‘புனித நீராடுவது' பல கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், 3 ஆவது கட்ட ‘புனித நீராடல்' நிகழ்ச்சி நேற்று (14.4.2021) நடைபெற்றது.
அகாடா என்ற சாமியார்கள் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் ‘புனித நீராடுவதற்காக', ஹர் கி பைரி என்ற படித்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் அவர்கள் நீராடினர். நாகா சாதுக்கள் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து ‘புனித' நீராடினர். லட்சக்கணக்கான சாதாரண பக்தர்கள், வேறு படித்துறைகளில் நீராடினர்.
நேற்று மதியத்துக்குள் 8 லட்சம் முதல் 10 லட்சம் நபர்கள்வரை நீராடியதாக கும்பமேளா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட காவல்துறை டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார். கரோனா கட்டுப்பாடுகள் காரண மாக, எதிர்பார்த்ததைவிட குறைவான கூட்டம்தான் வந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த பக்தர்களுக்கு காவல்துறையினர் முகக் கவசங்களை விநியோகித்தனர். ஆனால், ‘புனித' நீராடும்போது பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடை வெளியையும் பின்பற்றவில்லை.
கரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கும்பலாக நடமாடினர். இதனால், கரோனா பரவல் மேலும் அதிரிக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.
உத்தரகாண்டில் நேற்று முன்தினம் (13.4.2021) ஒரே நாளில் 1,925 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவற்றில் அரித்துவாரில் மட்டும் 594 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment