கரோனா கடுந்தொற்று : மத்திய அரசின் அவசர முக்கிய கவனத்திற்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 27, 2021

கரோனா கடுந்தொற்று : மத்திய அரசின் அவசர முக்கிய கவனத்திற்கு

 கரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்

தனியார் தன் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிப்பதை தடுக்க வேண்டும்

கரோனா தடுப்பூசி மருந்து விநியோகத்தில் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தாமல் தெளிவான அறிவிப்புகளை வெளியிடுவதுடன், தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள் முதல் செய்து மாநிலங்களின் தேவைக்கும் பாதிப்புக்கும் ஏற்ப வழங்க வேண்டும், தனியார் தன் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிப்பதை தடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கரோனா கொடுந் தொற்றின் இரண்டாம் அலை நாட்டையே மிகப் பெரிய அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி வருகிறது! மக்களின் அச்சத்தை அகற்றி, புதிய நம்பிக்கையை ஊட்ட வேண்டிய மத்திய அரசு கடைசியில் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில், மாநில அரசுகள் தலையில் போட  - இந்த  இக்கட்டான தருணத்தில் - நினைப்பது எவ்வகையில் நியாயம்?

மக்களை குழப்பும் அறிவிப்புகள்

தடுப்பூசிகள் போடப்படுவது பற்றி தெளிவான  - முரண்படாத அறிவிப்புகள் வருவதற்கு பதிலாக, மக்களைக் குழப்பும் அறிவிப்புகள் வருவது மிகவும் வேதனையானது!

18 வயது முதல் 44 வயது வரை  உள்ளவர்களை கரோனா தாக்குவது 22 விழுக்காடு என்ற அளவில் புள்ளி விவரங்கள் வந்துள்ள நிலையில், மே முதல் தேதியிலிருந்து அவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு அறிவித்து, "அவர்கள் தனியார் மருத்துவமனைகள் மூலமே போட்டுக் கொள்ளுவர்" என்றும், அதற்குக் கட்டண நிர்ணயம் ஏற்கெனவே இருந்ததிலும் அதிகமான கட்டணத்தை நிர்ணயிக்க தனியார் உற்பத்தி மருந்து நிறுவனங்களை அனுமதித்தது எவ்வகையில் சரியானது?

மருந்துகளை மத்திய அரசே கொள் முதல் செய்ய வேண்டும்

இந்த நெருக்கடியில் மக்களைக் குழப்பாமல், வஞ்சிக்காமல் மத்திய அரசு அதன் நிதியிலிருந்து மருந்துகளை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அனுப்பி, அனைத்து 18 வயது  முதல் 44 வயதுடையோர்களுக்கும் முழுமை யாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த உடனடியாக முன்வர வேண்டும்.

மாநில அரசுகளின் நிதி நிலைமை எப்போதும் பற்றாக்குறை உள்ள நிலையில், பிரதமர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிதி, ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி நிதி - இவற்றை செலவழித்து மக்களை கொடுந் தொற்றிலிருந்து காப்பாற்ற அவசரமாக முன்வர வேண்டும்.

தனியார் அமைப்புகள் விலையை நிர்ணயிக்க அனுமதிப்பதா?

விலை நிர்ணயத்தை தனியார் அமைப்புகள் விருப்பம்போல் முடிவு செய்ய அனுமதிப்பது - நியாயமல்ல.

மத்திய அரசுக்கு ஒரு விலை; மாநில அரசுக்கு ஒரு விலை என்ற பல்வேறு அளவுகோல்களை வைப்பது -  எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்ற நிலைக்கே தள்ளிவிடும் மோசமான நிலையேயாகும்!

முதல் பணியாக, தடுப்பூசி விநியோகம் சம்பந்தமாக சீரான முறையில் அமைந்த அறிவிப்புகள் மத்திய அரசால் செய்யப்படல் வேண்டும்.

மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கப்படல் வேண்டும்

மாநில முதல்வர்களின் கருத்தை அறிந்து இதனை ஒருமித்து முடிவு செய்தால், குழப்பமும் குளறுபடிகளும் ஏற்படாது.

தடுப்பூசி போடுவதில் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கே இன்னும் முழுமையாக முதல் டோஸ் ஊசி போய்ச் சேரவில்லை, எனவே இளைஞர்களுக்கும் என்பதனையும் ஒருங்கிணைத்து சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை ஓர் இலக்காக வைத்து முன்னுரிமையை ஓர் இயக்கமாக ஆக்கிடல் அவசர அவசியமாகும்.

மாநிலங்களுக்கான ஒதுக்கீடு மத்திய அரசின் விருப்பு, வெறுப்பு - அல்லது ஏதோ ஒரு வகை கணிப்புக்கு உட்படுத்தி நடத்தப்படாமல் - அறிவியல் அணுகுமுறைபோல் துல்லியமான தேவைகளையும் பாதிப்புகளையும் முன்வைத்து, மாநில மருத்துவ நிபுணர் குழுவினரின் கருத்துக்கிணங்க நிர்ணயம் செய்வதுடன்  கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டத்திற்கு இடம் தராமல், தடுப்பூசி விநியோகம், முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி காத்தல் - மற்றைய தடுப்பு உத்திகள் - முதலியவற்றைப் பின்பற்ற  மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தொண்டு அமைப்பை உருவாக்கி முறைப்படுத்துவது அவசியமாகும்.  இதனை ஊருக்கு ஊர் அமைத்து செயல்பட்டால், பீதி அடையாமல் நிலைமையை சமாளித்துக் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்.

தன்னம்பிக்கை அவசியம்

தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்கக் கூடாது.

இந்த அலை ஓய்வதற்கு மே மாதம் இறுதி வரையும் ஆகலாம்; மேலும் சில வாரங்கள் ஆனாலும் ஆகலாம் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்தாகும்.

"முகக்கவசம் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர்மூலம் மற்றவருக்குப் பரவ 90 விழுக்காடு வாய்ப்பு உண்டு; ஆனால் முகக் கவசம் அணிந்திருந்தால் அது வெறும் 1.5  விழுக்காடு வாய்ப்பாக குறைகிறது' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர் 87 விழுக்காட்டினர் முதல் டோஸ் மருந்தை போட்டுக் கொண்டனர்.

இரண்டாவது டோஸை அனைவரும் செலுத்திக் கொண்டார்களா என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களையும் பாதுகாத்தல் முதல் கடமையாகும்.

பீதியினால் மருந்து பதுக்கல், அவசரத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்தல் இவை மிகப் பெரிய சமூக விரோதச் செயல்கள். இவை எங்கே தலைதூக்கினாலும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

டில்லி துயரம்

தலைநகர் டில்லியை நினைத்தால் நெஞ்சு வெடிப்பதுபோல துயரத்தின் உச்சமாகிறது!

மக்கள் பதறுவதும், கதறுவதும், ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் நிலையில், மருத்துவர்களே கூட கதறி கண்ணீர் விட்டு - கடமையாற்றுபவர்கள்  கூறுவதைவிட சோகப்படலம் வேறு தேவையா?

தேவை ஆக்கப்பூர்வ உதவிகள்

என்றாலும் இந்த கால கட்டத்தில் ஆக்கப்பூர்வ உதவிகளே அவசரத் தேவைகள் - முரண்பட்ட நிலைப்பாடுகள், விமர்சனங்களை எதிர் கொள்ளு வதிலிருந்து தப்பிக்க, உண்மைகளை களப்பலியாக்கி விடக் கூடாது!

எதையும் தாங்கும் இதயம் என்றாலும் மக்களுக்கு தன்னம்பிக்கையும், நன்னம்பிக்கையும் ஊட்டி, அவர்கள் எந்த சோதனைகளையும் வென்றெடுக்கும் துணிச்சலை அளிப்போமாக!

அனைவரும் உணர்வீர் -  மறவாதீர்!

 கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

27-4-2021           

No comments:

Post a Comment