"PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time" தந்தை பெரியார் குறித்த ஆங்கில புத்தகத்தின் ஆய்வு - காணொலிக்கூட்டம் - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 16, 2021

"PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time" தந்தை பெரியார் குறித்த ஆங்கில புத்தகத்தின் ஆய்வு - காணொலிக்கூட்டம் - 2

பார்ப்பனர்களை எதிர்ப்பது எதனால்?

கடந்த 20 ஆண்டுகளில் மீண்டும் தமிழ் சமூகம் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் ஈடு படுவதை நாம் காண முடிகிறது.இந்தச் சூழல் அறிவார்ந்த சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. மீண்டும் மீண்டும் பெரியார் கருத்துகள் வலியுறுத் தப்படவேண்டிய ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். அதனை ஒரு அகாடமி தரத்தோடு இந்த நூல் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். ஆதாரத்தோடு வழங்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக "பிராமணிய எதிர்ப்பு ஏன்?" என்னும் இந்த அத்தியாயத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு அந்தஅத்தியாயத்தை விளக்கினார். நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பதை இந்த நூல் வலி யுறுத்துகிறது. ஒரு நூலை வாசிப்பது என்பது நூலை வாசித்துவிட்டு, நூலகத்தில் வைப்பதற்காக அல்ல, மாறாக அது  சொல்லும் கருத்துகளை சமூகத்தோடு ஒப்பிட்டு,செய்ய வேண்டிய வேலைகள் பற்றி யோசிக்க வைப்பதே ஒரு நல்ல நூலாகும். இன்றைய காலகட்டத்தில் இந்த நூலிற்கு மிக அதிகமான வேலை இருக்கிறது. இந்த நூல் மிகச்சிறந்த ஆவணம். இந்த நூலின் ஆசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்" என்று உரையாற்றினார்.

பெரியாரைப் பேசாத பெண்களே இல்லை

அவரது உரை முடிந்தவுடன் "தந்தை பெரியா ருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது பெண்கள் தலைமை தாங்கி நடத்துவதும், பேசுவதும்தான். அந்த பெண்ணுரிமையின் எடுத்துக்காட்டாக, அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் சுபாஷினி செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி. இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள பெண்கள் எல்லாம் தந்தை பெரியாரின் கருத்துகளை மிக அருமையாக பேசுகிறார்கள். அது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மலேசியாவில் நிறையப் பெண்கள் பேசுகிறார்கள். பெரியாரைப் பேசாத பெண்களே இல்லை என்றுஇன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது. அதைப் போல மற்ற நாடுகளிலும் பெண்கள் பெரியாரைப் பேசு கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றிணைத்து, பெரியார் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டே இருப்பார் என்று தெரிவித்துக் கொள் கிறேன்" என்று மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு, திராவிட  மாணவர் கழக செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியாரை  உரையாற்ற அழைத்தார்.

.பிரின்சுஎன்னாரெசு பெரியார்

இன்றைய காலம் இளைய தலைமுறை நேர் மறையாகவோ, எதிர்மறையாகவோ பெரியாரைப் பேச வேண்டிய தேவை இருக்கும் காலம்.ஏதோ ஒரு வகையில் தந்தை பெரியாரை பேசிக்கொண்டே இருக்கும் தலைமுறைக்கு ,இன்னும் கொஞ்சம் ஆதாரத்தோடு பேசுங்கள் என்று வாய்ப்பினை வழங் கியிருக்கக்கூடிய ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்யும் வாய்ப்பினை பெரியார் பன்னாட்டு அமைப்பு வழங்கியிருக்கிறது. .நன்றி.நமது பெரும்பாலான் திரைப்படங்களில் முதலில் ஹீரோ காட்டப்படுவார். ஆனால் ஆக்சன் ஹீரோ நடிக்கும் படங்களில் முதலில் பிரச்சினையைக்  காட்டுவார்கள். கெடுதல் செய்யும் வில்லன்களைப் பற்றியெல்லாம் காட்டிவிட்டு,அவர்களை காலி செய்யும் ஆக்சன் ஹீரோவைக் காட்டுவார்கள். அப்படித் தந்தை பெரியாருக்கு முன் தமிழ் நாடு  இருந்த நிலைமை,நாம் போற்றிய விச யங்களின் உண்மைத்தன்மை, அன்றைய கால கட்டம் எவ்வளவு மோசமான காலகட்டம் என்பதை யெல்லாம் சோழர் காலம்,நாயக்கர் காலம் பற்றி யெல்லாம்  விரிவாகச் சொல்லிவிட்டு பின்பு வில்லனை அறிமுகப்படுத்துவது போல இராஜாஜி அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு தந்தை பெரியாரை ஒரு ஆக்சன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும்  புத்தகமாக இந்தப் புத்தகம் இருக்கிறது. பெரியார் யார்?, வரலாற்றில் அவரது தேவை என்னவாக இருந்தது, அதனைத் தந்தை பெரியார் எப்படி நிறைவு செய்தார், வரலாற்றைத் தாண்டியும், அவரது காலத்தைத் தாண்டியும் தந்தை பெரியார் எப்படி சிந்தித்தார், செயல்பட்டார்  என்பதனை விளக்குவதாக இந்தப் புத்தகம் இருக்கிறது.திரைப்படத்தில் இறுதிக் காட்சி போல, இந்திய நாடாளுமன்றத்தில் ,தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது எழுப்பிய முழுக்கமான 'தந்தை பெரியார் வாழ்க' என்னும் முழக்கத்தைக் காட்டுகிறார். தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஆனபிறகும் எதிர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதை  இந்த நூல் சொல்கிறது.

மக்கள் அரசாக இல்லாவிட்டால்

என்ன நடக்கும்?

மொத்தம் 20 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தன்மையோடு இருக்கிறது. தந்தை பெரியார் 'குடிஅரசு' பத்திரிக்கையை எப்படித் தன்னம்பிக்கையோடு ஆரம்பித்தார் என்னும் வரலாறு இருக்கிறது. 'குடிஅரசு' என்று சொல்கின்றபோது ஜனநாயகம் என்பதையெல் லாம் தாண்டி மக்கள் அரசாக இருக்க வேண்டும். அப்படி மக்கள் அரசாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்? புரட்சி நடக்கும். தந்தை பெரியார் 'குடிஅரசு' பத்திரிக்கைக்குப் பின் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் புரட்சி.புரட்சியின் விளை வாக பகுத்தறிவு ஏற்படும். பின்பு உண்மையான மக்கள் விடுதலை ஏற்படும். தந்தை பெரியார் தொடர்ந்து நடத்திய பத்திரிக்கைகள் 'பகுத்தறிவு' மற்றும் 'விடுதலை' ஆகும்.

நாம்,பெரியாரைப் பற்றித் தெரிந்தவர்களே கூட இந்தப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். நிறைய செய்திகளை, தரவு களோடு, தேதி உட்பட குறிப்பிட்டு எழுதியிருக் கிறார். பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்து, மேலோட்டமாக எதையும் சொல்லிவிடாமல், ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் இருக்கும் காரண,காரியங்களை விளக்கி, தலைப்பின் பொருளுக்கு ஏற்ப விளக்கியிருக்கிறார்.பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு மிக அருமையான புத்தகம். டாக்டர் சுபாசினி அவர்கள் குறிப்பிட்டதைப் போல  உயரிய ஆங்கில நடை, எளிமையாகப் பெரியாரை புரிந்து கொள்ள உதவும் மொழி என இந்தப்புத்தகம் இருக்கிறது எனக்குறிப்பிட்டு ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்தப் புத்தகத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பாபு ஜெயக்குமார் அவர்கள் ,தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை, தனக்கு சரி யெனப்பட்டதை சொல்வதற்கு எந்தவித தயக்கமும் காட்டாதவர். அதற்கான இழப்பை ஏற்றுக் கொள்ளும் துணிவு மிக்கவர் .அவருடைய இந்த முயற்சி நிச்சயம் 100 விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறது." என  உரையாற்றினார்.

திராவிடர் கழக மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் உரையைப் பாராட்டிய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பிரின்சின்  பணிகளைப் பாராட்டி, "இவர்  பெரியார் வழிக் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை, இவர் தாத்தா காலத்தில் இருந்து தந்தை பெரியாரோடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள்." என்று குறிப் பிட்டு அவரை இன்னும் உயர்வடைய சிறப்பாக வாழ்த்தினார்.

பாபு. ஜெயக்குமார்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பாபு ஜெயக்குமார் அவர்கள் தனது உரையில் "நன்றி அனைவருக்கும். சுபாசினி, பிரின்சு இருவரும் புத்தகம் பற்றி சொல்லி விட்டார்கள். புத்தகத்தைப் பற்றி நான் பேசப்போவதில்லை. நான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று பேச நினைக்கிறேன்.. அய்யா ஆசிரியர் இதனை எழுதச் சொன்னார். ஒப்புக் கொண்டேன் என்றாலும் இந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் தேவை என்று நானும் உணர்ந்தேன். நான் 30,35 வருடமாக சென்னையில் ஆங்கில பத்திரிகைத்துறையில் இருக்கிறேன்.இங்கிலீசு ஜார்னலிசம் என்பதே ஒரு வித்தியாசமான உலகம்.இது சரி, இது தப்பு என்று ஏற்கெனவே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இடஒதுக்கீடு, பெரியார், தி.மு.. இவைபற்றியெல்லாம் ஏற்கெனவே ஒரு கருத்தை வைத்துக்கொண்டு அதனையே எழுதுகிறார்கள். இங்கிலீசு ஜார்னலிசத்தில் இதற்கு எதிராக எழுதுவதற்கு யாரும் வருவதில்லை .தமிழ் பேப்பரில் இப்படித்தான் எழுதுவார்கள், ஆங்கிலப் பத்திரிக்கையில் இப்படித்தான் எழுது வார்கள் என்னும் கருத்து இருக்கிறது. இதற்கு எதிராகப்போனதுதான் என்னுடைய பணி. நிறைய இளைஞர்களுக்கு பெரியார் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

தொகுப்பு: வா.நேரு

(தொடரும்)

மாயையை உடைக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் புதிதாக தமிழ் தேசியம் என்ற ஒருகருத்து வந்திருக்கிறது. இதற்கு முன்னால் திராவிட இயக்கம்தான் தமிழ் தேசியத்தையே வளர்த்துவிட்டது. இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் திராவிட இயக்கம் தவறானது என்று சொல்ல முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, தமிழ் தேசியத்தைப் பற்றி முதலில் பேசியது பெரியார்தான் என்பது  தெரியாது. பெரியார் தமிழரே இல்லை என்று, அவர்கள் ஒரு மொழியில் பேசுகிறார்கள்.அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு இந்த நூல் உதவும் என்று கருதினேன். அவர்கள் சொன்னதுபோல, காலவரிசைப்படி பெரியாரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய வாசிப்பு பற்றியும் எனக்குத் தெரியும். பெரிய புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள். ஆனால் தனித்தனியாக, தலைப்புகள் என்றால் படிப்பார்கள். உதாரணமாக நாளை பெண்கள் தினம். நீங்கள் பெரியாரின் பெண்ணுரிமை குறித்து பேசவேண்டுமென்றால், பெரியாரின் பெண்ணியம் என்னும் ஒரு தலைப்பை மட்டும் இந்தப் புத்தகத்தில் படித்தால் போதும். சமூக நீதி,இட ஒதுக்கீடு பெரியாரின் கருத்து என்னவென்று நீங்கள் பேசவேண்டும், எழுத வேண்டும் என்றால் இந்தப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்தால் போதும். அதனால்தான், இந்த நூலில் இந்த 'ஸ்டைலை' நான் எடுத்துக்கொண்டேன்.மொத்தத்தில் தெரியப்படுத்துதல்தான் நோக்கம். ஆங்கில ஊடகங்களில், ஆங்கிலம் பேசும் மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும் என நினைத்தேன். ஏற்கெனவே இருக்கும் மாயையை உடைக்கவேண்டும் என நினைத்தேன்.அவர்கள் ஏற்படுத்திய மாயையிலிருந்து எதிர்கால சந்ததியாவது விடுபடவேண்டும் என் நினைத்தேன்.பெரியாரை எடுத்துக்கொண்டால், எல்லாவற்றிலும் அவர் 'tலீமீ னீணீஸீ ணீலீமீணீபீ ஷீயீ லீவீs tவீனீமீ'. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அறிவியல் எப்படி இருக்கிறது என்றால் மிஷிஸிளில் ராக்கெட் தயாரித்து அதனை திருப்பதிக்கு அனுப்புகிறார்கள். பெரியார் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

நூற்றாண்டைக் கடந்த அறிவியல் சிந்தனை

அவர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். முறையான படிப்பு அவருக்கு இல்லை என்றாலும் நூற்றாண்டைக் கடந்து அறிவியலைப் பற்றி சிந்தித்திருக்கிறார். அதனைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆங்கிலப்புத்தகமாக இருப்பதால் இது இண்டர் நேசனல் கம்யூனிட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தேன். எழுதினேன். இந்த நூலை இன்று இரண்டு பேர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.ஒருவர் டாக்டர் சுபாஷினி. தமிழுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்துகொண்டிருப்பவர். இன்னொருவர் பிரின்ஸ். இந்தப் புத்தகத்திற்காக தன்னுடைய பங்களிப்பாக நிறைய செய்திருக்கிறார். நன்றாக அச்சாகி வந்திருக்கிறது என்று சொன்னார்கள்.அதில் கூட பிரின்ஸின் பங்கு இருக்கிறது.அதைப்போல பதிப்பாளர் ஒளிவண்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. பெரியார் பன்னாட்டு மய்யத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இதனை கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றி" என்று குறிப்பிட்டார்.

கோ.ஒளிவண்ணன்

பாபு ஜெயக்குமார் அவர்களோடு தனக்கு பல்லாண்டுகளாக இருக்கும் தொடர்பு, முல்லைப் பெரியார் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் தனித்துவமாக வந்த அவரது கட்டுரை, அதைப் பாராட்டியது, மகிழ்ச்சி அடையாமல்  நீங்கள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் எழுதுவீர்களா என்று அவர் கேட்டது, எழுதுவேன், யாராவது தப்பாக எழுதினால் நான் எழுதுவேன் என்று சொன்னது,”இதுதான் நம்மிடம் இருக்கும் குறை,உங்களை மாதிரி 100 பேர் பாராட்டி விட்டார்கள், ஆனால் 10 பேர் இந்தக் கட்டுரை எழுதியதற்காக என்னைத் திட்டி,இந்தியன் எக்ஸ்பிரஸ் லெட்டர் டூ தி எடிட்டரில் எழுதியிருக்கிறார்கள், இப்படி என்னை நேரடியாகப் பாராட்டி பிரயோசனம் இல்லை, உங்களைப் போன்றவரகள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டருக்கு எழுத வேண்டும், அப்போதுதான் எங்களைப் போன்றவர்கள் அங்கு நிலைக்க முடியும்என்று சொன்னார் என்று குறிப்பிட்ட கோ.ஒளிவண்ணன் அப்போதிருந்து நல்ல கட்டுரைகளுக்கு, விடுதலை என்றாலும் கூட பாராட்டி எழுதுவதை வழக்கமாக்க் கொண்டேன் எனக்குறிப்பிட்டு பல நினைவுகளை ,இந்தப் புத்தகம் வெளிவருவதில் பிரின்ஸ் அவர்களின் பங்களிப்பிற்கும், பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் பங்களிப்பிற்கும் நன்றி கூறி ,தமிழ் தெரியாத, உலகம் முழுவதும் இருக்கும் நெஞ்சங்களுக்கு  இந்தப் புத்தகத்தை கொண்டு சேர்ப்போம், குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாக இந்தப் புத்தக அறிமுகக் கூட்டத்தை நடத்திய பெரியார் பன்னாட்டு மய்ய அமைப்பிற்கும் அதன் தலைவர் அண்ணன் சோம.இளங்கோவன் அவ்ரகளுக்கும் நன்றி எனக்கூறி உற்சாகமாக பதிப்பு அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

பெரியார் உலக வலம் வருவார்

நன்றி ஒளிவண்ணன் எனக்குறிப்பிட்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தங்களின் இரு கரங்களாகப் பணியாற்றும் தங்கள் இணையர் நளினி அவர்களுக்கும், தங்கள் நிறுவனத்திற்கும் நன்றி எனக்குறிப்பிட்டார்.இந்த நிகழ்வைப் பற்றிய கருத்துகளை மதுரை வா.நேரு,நியூயார்க் பாலா சாமி நாதன்,சிகாகோ சோம.வேலாயுதம்,மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.அய்யா சோம.வேலாயுதம் அவர்கள் தாங்கள் படிப்பது மட்டுமல்லாது,இந்தப் புத்தகத்தை பள்ளி,கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு  அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மும்பையில் வழங்கப்பட்ட  நரேந்திர தபோல்கர் விருதுபற்றியும், அந்த அமைப்பாளர்கள் தன்னோடு ஆசிரியருக்கு விருது வழங்குவது பற்றி பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியையும், விருதில் அளிக்கப்பட்ட ரூ 1 இலட்சம் ரூபாயை ஆசிரியர் அவர்கள் திருப்பி அந்த அமைப்புக்கே அளித்ததையும், அமெரிக்காவில் 2019இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் - மனித நேய விருதுவழங்கப்பட்டதையும் குறிப்பிட்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ,அமெரிக்காவில் நூறு இளம் குழந்தைகள் பெரியார் பற்றி,தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பேசியதை பாபு ஜெயக்குமார் அவ்ரகளிடம் பகிர்ந்து கொண்டார். கலந்து கொண்ட அனைவருக்கும்,ஒத்துழைப்பு அளித்த நியூசெர்சி பாலா,மற்றும் தங்களை வெளிக்காட்டாமல் ஒத்துழைப்பு அளிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பினைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களது உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முனைப்பால் இன்று பல பல்கலைக்கழகங்களில் தந்தை பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. அவையெல்லாம் விரைவில் வெளிவரும்.அப்போது இன்னும் வீச்சாக பெரியார் உலக வலம் வருவார் .அனைவருக்கும் நன்றி,நன்றி என்று கூறி நிகழ்வை மருத்துவர் சோம்.இளங்கோவன்  நிறைவு செய்து வைத்தார்.

தொகுப்பு: வா.நேரு

(தொடரும்)

No comments:

Post a Comment