தமிழகத்தை மீட்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்!லால்குடி - மண்ணச்சநல்லூர் - துறையூர் தொகுதிகளில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை, மார்ச் 23 மத்திய - மாநில ஆட்சிகளால் நமது பிள்ளைகளின் கல்வி உரிமை சூறையாடப் பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் விண்ணை முட்டிவிட்டன. இந்தக் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (22.3.2021) லால்குடி தொகுதி அ.சவுந்திரபாண்டியன், மண் ணச்சநல்லூர் தொகுதி சீ.கதிரவன், துறையூர் தொகுதி செ.ஸ்டாலின் குமார் ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவ்விவரம் வருமாறு:
இலால்குடியில் பரப்புரை
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இலால்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் அ.சவுந்தர பாண்டியனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தே.வால்டேர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், பொதுக்குழு உறுப்பி னர் செய்பவரை நடராஜன், ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
இலால்குடியைப் பொறுத்தவரை வேட்பாளர் சவுந்தரபாண்டியன் அவர்களின் பொதுத் தொண்டை எல்லோரும் நன்கு அறிவார்கள். இந்தப் பகுதி எங்களது சொந்த பகுதியைப் போன்றது. கரோனாவைவிட கொடிய நோயான ஆர்.எஸ்.எஸ்., பாஜ.க. சித்தாந்தங்கள் இந்த மண் ணில் நுழையத் துடிக்கிறது.
வெப்பம் தணிந்து குளிர் வருமா என்று எதிர்பார்ப்பதைப் போல தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆட்சியில் இளை ஞர்கள், மாணவர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லி என்ன கட்டளை இடுகிறதோ அதை அப்படியே கேட்டு ஆடும் ஆட்சியாக தமிழக அரசு இருக்கிறது.
''ஆடுரா ராமா, ஆடுரா ராமா'' என்ற வித்தைகள் தான் நடக்கிறது. ''அம்மா ஆட்சி'' என்று சொல் பவர்கள் 'நீட்' தேர்விலிருந்து அவர் விலக்கு வாங்கியதைப் போல செய்திருக்க வேண்டாமா? இதற்கு பெயர்தான் அம்மா ஆட்சியா?
எனவே, தமிழகத்திற்கு விடியலை உண்டாக்க சவுந்தரபாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தில் மாவட்ட காங்கிரசு கட்சி தலைவர் திருச்சி கலை, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வைரமுடி, ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் துரைமாணிக்கம், சி.பி.எம். நிர்வாகி சந்திரன், ம.ம.க. நிர்வாகி சபியுல்லா, புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கந்தசாமி, வி.சி.க. நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பிச்சை மணி நன்றி கூறினார்.
மண்ணச்சநல்லூர் பரப்புரை
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீ.கதிரவனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தே.வால்டேர், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணைத் தலைவர் மு.அட்டலிங்கம், மண்டல செய லாளர் ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் அரங்கநாயகி, கு.பா.பெரியசாமி, மு.முத்துசாமி, முருகேசன், ஆசைத்தம்பி, சா.செயபால், கோ.பால சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில்,
அரங்கத்தில் பரப்புரைக் கூட்டம் நடந்தாலும், இவ்வளவு தாய்மார்கள் கூடியிருப்பதை பார்க்கும்போதே தெரிகிறது. வெற்றி நிச்சயம் என்று! காரணம் இந்த ஆட்சியில் அவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.
''ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தர போறாரு'' என்றால் தமிழகத்தை மட்டுமல்ல. அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வையும் மீட்கப் போகிறார். அ.தி.மு.க.வை டில்லி ரிமோட் கண்ட்ரோல் தான் இயக்குகிறது. மீண்டும் நாம் ஏமாந்து போனால் காலம் காலமாக நாம் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும். நீட் தேர்வு, காவிரி நீர்ப் பிரச்சினை, வேளாண் சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு என போராட்டங்கள் நடத்தியுள்ளோம். 'நீட்' தேர்வை கொண்டுவந்து டாக்டராக வருவதை தடுத்தார்கள். சரி செவிலியராகவாது படிக்க வைக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் 'நீட்' தேர்வை கொண்டு வந்து விட்டார்கள். 'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றால் நல்ல இளைஞர் த.கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திருச்சி கலை, தி.மு.க.நகர செயலாளர் சிவசண்முககுமார், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பு, காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் அருணாசலம், வி.சி.க. நிர்வாகி ஏகலைவன், ம.ம.க.மாவட்ட தலைவர் மாலிக், சமயபுரம் நகர தி.மு.க.செயலாளர் துணை.ராஜசேகரன், ஒன்றிய குழு தலைவர் சிறீதரன், துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துறையூரில் பரப்புரை
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செ.ஸ்டாலின் குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தே.வால்டேர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் இரா.த.வரதராசன், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், நகர இளைஞரணி தலைவர் ச.மகாமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தினேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில்,
துறையூர் தொகுதி வெற்றி நிச்சயிக்கப்பட்டது உங்களது ஆரவாரத்திலேயே தெரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் கொத்தடிமை ஆட்சியை அகற்ற அனைவரும் தயாராக இருக்கிறீர்கள். இன்றைக்குப் பெண்கள் படித்து வருகிறார்கள் என்று பெருமை கொள்வதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். ''அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாள்'' என்பது போல வாக்குறுதிகளை வீசிவருகிறது அ.தி.மு.க. மத்திய அரசு கேட்கும் முன்பே, மாநில அரசு காலில் விழுகிறது. 'நீட்' தேர்வு என்று கொண்டு வந்தவர்கள் எல்லா படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வந்து விட்டார்கள்.
நமது பிள்ளைகளின் கல்வி உரிமை சூறை யாடப்பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் விண்ணை முட்டிவிட்டது. இந்தக் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்க நல்ல இளைஞர் செயல்வீரர் ஸ்டாலின் குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித்தாருங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
தி.மு.க.மாவட்ட பொருளாளர் தர்ம.ராஜேந்திரன், நகர தி.மு.க. செயலாளர், முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உப்பிலியாபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கலைச்செல்வன், சி.பி.எம்.நிர்வாகி ஆனந்த், சி.பி.அய் கணேசன், ம.ம.க நிர்வாகி அப்துல்லா, வி.சி.க.குமார், ம.தி.மு.க.பிச்சைரத்தினம், இ.யூ.மு.லீக் ரகமத்துல்லா, லியாகத் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
மேற்கண்ட மூன்று பரப்புரைக் கூட்டங்களிலும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா.ப.சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment