மோடியை முன்னிறுத்த பா.ஜ.க.வே முன்வரவில்லை - தேர்தல் களத்தில் முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இது!
சட்டப்பேரவைத் தேர்தலில் 1971 இல் தி.மு.க. பெற்ற 184 என்ற சரித்திர சாதனையை முறி யடித்துப் புதிய சாதனையை - விடியலைத் தருவார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். இது கருத்துக் கணிப்பு அடிப்படையில் அல்ல - நாம் பார்த்த மக்கள் கணிப்பின் அடிப்படையில்
என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தோழர்களே, தோழர்களே, லட்சிய வீர இளை ஞர்களே!
இப்போதைய தமிழக சட்டமன்றத் தேர்தல் - அசாதாரணமான - புதிய வரலாற்றை - புதிய திருப் பத்தை தமிழ்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் புத்தெழுச்சியை ஏற்படுத்தப் போகும் தேர்தல்!
தந்தை பெரியார் என்ற தத்துவம் அக்களத்தில் போராடுவதற்கான பேராயுதம்!
சமர்க்களத்தில் வெற்றி வாகை சூடப் போவது சமதர்மமே!
குலதர்மமா? சமதர்மமா? எது வெற்றி பெற வேண்டும்? என்ற கேள்விக்கு, சமர்க்களத்தில் வெற்றி வாகை சூடப் போவது சமதர்மமே என்ற பதிலை தமிழ்நாட்டு வாக்காளர் தீர்ப்பாக வழங்க ஆயத்தமாகி அணிவகுத்து நிற்கின்றனர். மக்களின் விழிப்புணர்வும், அவர்கள் புதிய விடியலைத் தேடுகிறார்கள் - புதிய ஆட்சியை அமைக்க கோடையிலே கிடைக்கும் தருநிழலாக, உழைப்பின் உருவமாம் நம் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் அமைந்துள்ள தி.மு.க. கூட்டணி என்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து, வரலாறு காணாத வெற்றியை வாகை சூட வைக்க அணியமாகிவிட்டனர்!
இது திராவிட மண் - சமூகநீதி மண் - பெரியார் மண் என்பதற்கு முதல் கட்ட லட்சிய வெற்றி அச்சாரமாக அமைந்துவிட்டது!
‘‘வட மாநிலங்களில் பிரதமர் மோடிதான் வாக்குகளை வசீகரிக்கும் வசியம் படைத்தவர் என்ற நிலை - இந்த மண்ணில் தலைகீழாக இருக்கிறது என்பது உலகத்தை ‘அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள' எட்டாவது அதிசயமாகும்!''
மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய அஞ்சுகின்றனர்!
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் சுவர் எழுத்து களிலும் சரி, சொற்போர் தேர்தல் பிரச்சாரத்திலும் சரி, மிஸ்டு கால் கட்சியான பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் கூட மோடியை முன்னிறுத்தி, அவரால் நிறுத்தப்படும் வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்ய அஞ்சுகின்றனர்!
இதுவே திராவிட மண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றி; எத்தனை வேகமாக வடக்கே இருந்து டஜன் கணக்கில் மத்திய அமைச்சர்களும், பேச்சாளர்களும் தேர்தல் பரப்புரைக்கு வந்தாலும், விலை போகாத சரக்குடன் வெறுங்கையோடு திரும்புவதுதான் யதார்த்த நிலை!
வெற்றி வாகை சூடப்போவது தி.மு.க. கூட்டணியே!
தமிழ்நாட்டில் தமிழ் வேடம் போட்டு தற்காலிக வித்தையாக திருவள்ளுவரையும், அவ்வையாரையும் தேடி புகலிடம் பெற நினைத்தாலும், சீந்துவாரில்லை என்ற நிலையைக் கண்டு கொத்தடிமைகளை வைத்து ஊடுருவும் கனவும் பலிக்கப் போவதில்லை என்பதை கடந்த 10 நாள்களாக நம்முடைய சூறாவளி சுற்றுப் பயணப் பரப்புரையில் மக்கள் வரவேற்ற
முறை - ‘‘கிழக்கு வெளுத்துவிட்டது; விடியலுக்கு மக்களே தங்களை ஆவலோடு ஆயத்தப்படுத்திக் கொண் டுள்ளனர்'' என்பதை நேரில் பார்த்து, மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பின் வெற்றி வாகை சூடப்போவது - கூட்டணியின் தலைவர் ஆற்றல்மிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் அமையப் போவது தி.மு.க. கூட்டணியே என்பது நாளும் உறுதியாக வருகிறது!
‘தர்ம' யுத்தத்திற்குப் பதிலாக புதியதோர்
‘மர்ம யுத்தம்' - அ.தி.மு.க. கூட்டணியில்!
பாவம், முதலமைச்சர் எடப்பாடியார் தோல்வி பயத்தால் - ஜன்னியில் உளறும் நோயாளிபோல் பேசத் தொடங்கிவிட்டார்!
‘தர்ம யுத்தப் புகழ்' ஒ.பி.எஸ்., அடுத்த வியூகத்தை - சசிகலா அம்மையாருக்கு அழைப்புவிடத் தயாராகி, ஈ.பி.எஸ். அணியினரை மறுத்து, ‘தர்ம' யுத்தத்திற்குப் பதிலாக புதியதோர் ‘மர்ம யுத்தம்' - அ.தி.மு.க. கூட்டணியிலேயே தொடங்கிவிட்டது!
‘‘கட்சியையும், ஆட்சியையும் நடத்த பிரதமர் மோடி
மிகவும் உதவினார்'' என்ற ஈ.பி.எஸ்.சின் ஒப்புதல் வாக்குமூலம், இவர் ஜெ.வுக்கும் கூட துரோகமிழைத்தவர் என்பதை அரசியல் உலகிற்குப் பிரகடனப்படுத்துகிறார் என்பது ஒருபுறம்.
மறுபுறம் பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் மோடி முகங்காட்டி வாக்குச் சேகரிக்க அஞ்சி தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர்களின் முகங்காட்டி வாக்கு சேகரிக்கும் வேடிக்கை மனிதர்களாகி வீதியில் நிற்கின்றனர்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் என்பார் அதனை வேதனையுடன் வெளிப்படுத் திடவும் தயங்கவில்லை என்கிறார்கள்!
‘‘என்ன விநோதம் பாரு - எவ்வளவு ஜோக்கு பாரு!''
என்று இளைஞர்கள் சமூக வலைத் தளங்களில் இதுபற்றி சர வெடிகளைக் கொளுத்திப் போடு கிறார்கள்!
ரெக்கார்ட் பிரேக் செய்து - புதிய விடியலைத் தருவார்!
நம் தளபதி ஒரு சரித்திர சாதனையை 1971 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. பெற்ற 184 என்ற ரெக்கார்டையும் பிரேக் செய்து, புதிய விடியலைத் தருவார் என்பது உறுதி!
இது கருத்துக் கணிப்பு அடிப்படையில் அல்ல -நாம் பார்த்த மக்கள் கணிப்பின் அடிப்படையில்!
‘திராவிடம் வெல்லும்' - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
27.3.2021
No comments:
Post a Comment