தூக்கமா இல்லை துக்கமா? எது வேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

தூக்கமா இல்லை துக்கமா? எது வேண்டும்?

featured image

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடை வதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான் செய்கிறது.

அமெரிக்க மனநல சங்கத்தின் அறிக்கையின்படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிப்பட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்க மின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், குறித்து மருத்துவர் அருணாச்சலம் அளித்த விளக்கம் பின்வருமாறு..

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள் வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் அலைபேசிக்கு மீள் நிரப்பு மின்னூட்டம்(Recharge) செய்வது போன்று. தூக்கம் இல்லை யென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை வருகிறது. நான் 1994இல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணி புரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், இரவுப் பணி (நைட் ஷிப்ட்), அய்.டி நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின் மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது.

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின் கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும். எப்படி காலை, மாலை என்று இரு வேளையும் சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப் போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள்.
தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். உலகில் அதிகமான இறப்புகளுக்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே பெருமளவு காரணம் எனலாம். இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல் இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு இருக்கலாம்.

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் கூறுகிறார். சமீப காலத்தில் இப்படி நிறையப் பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்துக் கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார் படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment