எப்பொழுது மனிதனாகப் போகிறார்கள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

எப்பொழுது மனிதனாகப் போகிறார்கள்?

மகாராட்டிராவில் உள்ள யவத்மால் என்ற ஊரில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் அடங்கிய ஒரு நாடோடிக்குழு கூடாரம் போட்டுத் தங்கியிருக்கிறது.
அப்போது அங்கு வந்த ஹிந்து ரக்ஷா மஞ்ச்(ஹிந்து பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பினர் சிவனின் வாகனமான எருதுகளை வைத்து பிச்சை எடுத்து ஹிந்து மதத்தை இழிவுபடுத்துகிறீர்களா? என்று கேட்டு கூடாரத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
அவர்களின் கூடாரத்தைக் கிழித்து அவர்கள் சேகரித்த உணவு தானியங்களிலும் இதர உணவுப்பொருட்களிலும் மண்ணை அள்ளிப்போட்டு நீங்கள் எல்லாம் ஹிந்துவாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் எங்காவது மசூதிக்குப் போய் முஸ்லிமாக மாறிவிடுங்கள் என்று விரட்டி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்களே எடுத்த காணொலியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து “இனிமேல் காளையை வைத்து பிச்சை எடுக்க நினைப்பவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை! காளை சிவனின் வாகனம் – அதை இழிவு படுத்தினால் ஹிந்துக்கள் சும்மா இருக்க மாட்டர்கள்” என்று மிரட்டி பேசியுள்ளனர்.
இது தொடர்பாக நாடோடிக்குழுக்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க முன்வரவில்லை. அந்த அளவுக்கு அப்பாவிகள் – அச்சம் இன்னொரு பக்கம்.
இந்த நிலையில் காளைகளையும் இழந்து பொருட்கள் அனைத்தையும் இழந்த நிலையில் காயங்களோடு இருந்த – தாக்குதலுக்கு இலக்கான பூம்பூம் மாட்டுக்காரர்கள் வேறு ஊருக்குச் சென்று விட்டனர்.
இப்படியொரு நாடு – இப்படியொரு மதவெறி பிடித்த கொடூரக் கும்பல்! ஹிந்து மதத்தில் காளை மாடு மட்டுமா? எலியில் ஆரம்பித்து, நாய், பன்றி, சேவல், காகம் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு! இவை எல்லாம் கடவுள் அவ தாரங்களாகவும், வாகனங்களாகவும் வருணிக்கப்படுகின்றன – இந்தப் பாழாய்ப் போன ஹிந்து மதத்தில்!
பூமிகூட பூமாதேவி தான். இந்த ஹிந்துத்துவாவாதிகள் பூமியை மிதிக்கலாமா? நடக்கலாமா? தண்ணீர்கூட கங்காதேவிதான் – சிவனின் இரண்டாவது மனைவிதான் – தண்ணீரில் கால் கழுவலாமா?
சாணிகூட சாமியாகி விடுகிறதே! சாணியைத் தப்பித் தவறி மிதித்தால் காலைக் கழுவும் மனிதன், அதே சாணியைப் பிடித்து வைத்து, அதில் ஒரு அருகம் புல்லை சொருகினால் சாமியாம் – சாணி சாமியாகி விடுகிறது.
பசுவைக் கோமாதா என்று கூறி மதக் கலவரத்தை நடத்தி வரும் ஒரு கூட்டம், இப்பொழுது காளை மாட்டையும் கையில் எடுத்துக் கொண்டு விட்டதா?
“மக்களின் மூளையைப் பக்தியின் பெயரால் எப்படி எல்லாம் நாசப்படுத்தி விட்டார்கள். மனித சமூகத்துக்கு ஒருவன் தொண்டு செய்வதாக இருந்தால் முதலில் இந்தக் கடவுள் நம்பிக்கைமீது கை வைத்தாக வேண்டும்” என்று கூறிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இந்த நேரத்திலாவது ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து – மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து.
உருவத்தால் மனிதனாகத் திரிவோர் – எப்பொழுது தான் உண்மையான மனிதனாகப் போகிறார்கள் – என்பதுதான் முக்கிய கேள்வி.

No comments:

Post a Comment