புதைக்கப்பட்ட ‘பொதிகை’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

புதைக்கப்பட்ட ‘பொதிகை’

ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் தமிழர்களின் பண் பாட்டையும் சீர்குலைத்து வருகிறது. அதில் ஒன்று தான் தமிழ்நாட்டில் உள்ள ‘பொதிகை’ தொலைக்காட்சி பெயரை டி.டி தமிழ் என பெயர் மாற்றம் செய்திருப்பது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்ப டையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராட்டிராவில் சஹ யாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று அரசு தொலைக் காட்சிகளுக்கு பெயர்கள் வைக் கப்பட்டன. தமிழ் மக்களின் தனித்துவமான, உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில்இருந்த ‘பொதிகை’ தொலைக்காட்சியும் அகில இந்திய வானொலியும் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மாற்றப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். தமிழ் மொழியை மேம்படுத்துவது போன்றும், திருக்குறளை பெருமைப்படுத்துவது போன்றும் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் பேசினாலும் நடைமுறையில் தமிழை ஒழித்துக்கட்டும் வேலைதான் நடை பெறுகிறது. ‘பொதிகை’ தொலைக்காட்சியிலும் அகில இந்திய வானொ லியிலும் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டன. தமிழ்நாடு மண் சார்ந்த, தமிழ்நாடு மக்கள் சார்ந்த கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்காமல் ஹிந்தி அல்லது சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மக்களிடம் திணிக்கப் படுகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் இந்தியா முழுவதும் அரசு தொலைக்காட்சிகளும் வானொலியும் நடுநிலைமையில் இருந்து தடம் புரண்டன. காங்கிரஸ் ஆட்சியின் போது ஒன்றிய அரசின் செய்திகள் அதிகமாக இருந்தாலும் அங்கீகரிக் கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி களுக்கும் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் புகழ் பாடும் நிலையங்களாக பொதிகை தொலைக் காட்சியும் வானொலியும் மாற்றப்பட்டுள்ளன.
பிரசார்பாரதி அமைக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதியை மோடி அரசு காப்பாற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களிலும் தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்ட தோடு சென்னை தவிர்த்த இதர வானொலி நிலையங்களில் ஒலிபரப்புகள் நிறுத்தப் பட்டுள்ளன. நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி களை ஒலி, ஒளிபரப்பவேண்டிய வானொலியும் பொதிகை தொலைக்காட்சியும் ஆளும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டதால் நேயர்களின் நம்பிக்கையை இழந்ததுதான் மிச்சம். இப்போது ‘பொதிகை’ என்ற பெயரும் மாற்றப்பட்டு விட்டது.
நன்றி: ‘தீக்கதிர்’ தலையங்கம், 20.1.2024

No comments:

Post a Comment