சமூக ஊடகங்களிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

சமூக ஊடகங்களிலிருந்து...

பெரியாரைப் பார்த்துக் குரைக்கும் சூத்திர உடன் பிறப்புக்கள், தேவநேயப் பாவாணரிடம் பாடம் படிக்கட்டும். 

பெரியார் பெயரைக் கெடுப்பார்

தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பார்வையில் தந்தை பெரியார்.

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்க வழக் கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமை யன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். 

என்றைக்கு ஹிந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், ‘ அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டி தனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்’ என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன்.

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்ப கோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக் கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும்.

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் ஹிந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தோறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றி யுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வெ. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே

மொழிவர லாறு மொழிவது கேண்மின்

பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு

நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்

பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்

நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்

வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்

தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்

நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்

நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்

அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்

அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே

விடுதலை பெறவழி வேறில்லை யென்றே

கடவுள் இலையெனுங் காரங் கலந்து

மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்

மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே

அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்

வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை

குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து

பண்டம் விட்டுப் படிவம் பற்றித்

தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்

தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து

பெரியார் பெயரைக் கெடுப்பார்

தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

திராவிடமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

- செந்தமிழ்ச்செல்வி ஏப்ரல் 1979.

தொகுப்பு : கரு தமிழ்தாசன்.

- சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன் பகிர்வு

No comments:

Post a Comment