தொலைவிட வாக்குப்பதிவு முறை: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

தொலைவிட வாக்குப்பதிவு முறை:

 தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, ஜன. 17- தொலைவிட வாக்குப்பதிவு முறை குறித்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில் இருந்தே தேர்தலில் வாக்களிக்க அனு மதிக்கும் ஒரு நடவடிக்கையாக, புலம்பெயர்ந்த வாக்காளர் களுக்காக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தின் (EVM) முன்மாதிரியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது .

இந்த தொலைவிட வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் டில்லியில் உள்ள Constitution Club of India--வில் நேற்று (16.1.2023) நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 7 தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநிலக் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மவுஹா மொய்த்ரா, பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் மற்றும் வழக்குரைஞர் வேல் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில், தொலைவிட வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்  என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

சந்தேகங்களை தீர்க்காமல் தொலைவிட வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட நிலையில், செய்முறை விளக்கம் ஒத்தி வைக்கபட்டு, கட்சிகளின் சந்தேகங்களை முன்வைக்க தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தினார். புலம் பெயர்ந்த வர்கள் யார் யார், எவ்வாறு அவர்கள் வகைப்படுத்தப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளனர் என்பவை உள்ளிட்ட சந்தேகங் களை முதலில் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். பின்னர் ரிமோட் வோட்டிங் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதாக எதிர்கட்சிகளின்  பிரதி நிதிகள் தெரிவித்தனர்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்  வில்சன் கூறியதாவது.. “தொலைவிட வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தொலைவிட வாக்குப்பதிவு இயந்திரம் செயல் முறை விளக்கம் நடைபெறவில்லை உரிய விளக்கங் களுடன் செயல்முறை விளக்கம் மீண்டும் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களை வழங்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த கால அவகாசம் பிப்ரவரி 28 வரி நீட்டிக்கப்பட்டுள்ளது.” என வில்சன் தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தி.மு.க சார்பில் சட்ட ஆணையத்தில் கடிதம் வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment