திருப்பத்தூர் முப்பெரும் விழா வெற்றிகரமாக நடந்தது. அதில் அனைத்து திராவிட உறவுகளைக் கண்டு களித்து மகிழ்ந்தோம். திருச்சியிலிருந்து மகிழ்ஊர்தியில் பயணம் செய்தது மிக இனிமை. வழியெல்லாம் மலைகளும், மலைசார்ந்த வயல் வெளிகளும் பழங்கால தமிழ் நாட்டில் புலவர்கள் இயற்றிய இயற்கைப் பாடல்களை நினைவூட்டின. எங்கு பார்த்தாலும் குளங்களிலும், ஏரிகளிலும் நீர் வளம் நிரம்பி இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்தப் பொலிவு, நீர்நிலைகளைத் தூர்வாரி பண்படுத்தியதின் விளைவுதான் என்று உணருகிறேன். இந்த மாற்றத்தை தமிழ்நாட்டுக்கு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! திருப்பத்தூர் திராவிடர் கழக குடும்பம் கே.சி. எழிலரசன், அவர் இணையர் அகிலா மற்றும் அனைத்து குடும்பத்தினரின் விருந்தோம்பலும், அன்பும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டன. விழா சொற்பொழிவுகள் பெரியார் அய்யா மற்றும் கருப்பு வீரத்தமிழர்களின் தன்னலமற்ற உழைப்பை, எங்களுக்கு கல்லூரி பாடங்களாக வழங்கின. கவிஞர் கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். இந்த இனிய பயணம் முடிந்து பிரியா விடை பெற்று அமெரிக்கா திரும்புகிறோம்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- டாக்டர் சரோஜா இளங்கோவன்
அமெரிக்கா
No comments:
Post a Comment