சுயமரியாதை சமதர்ம அரசியலை உயர்த்துவோம்! கலைஞர் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

சுயமரியாதை சமதர்ம அரசியலை உயர்த்துவோம்! கலைஞர் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் உறுதி

 

சென்னை, டிச.25 சுயமரியாதை  சமதர்ம அரசியலை எந் நாளும் உயர்த்திப் பிடிப்போம் என்று, ‘கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’ மற்றும் ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ என்ற இரு நூல்களை வெளியிட்டு உரையாற்றுகையில் குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக மாற்றம் தான் திராவிடம் என்றும் தெரிவித்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.12.2022) சென்னை, அண்ணாநூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை வருமாறு: 

தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் தேவையான மாபெரும் அறிவுக் கருவூலமான இரண்டு புத்தகங்களை இன்று நான்வெளியிட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நானும் உங்களோடு பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டு அதே நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப் பினை வழங்கிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான - நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் எழுதி, உலகப் புகழ்பெற்ற பதிப்பகமான பென்குயின் வெளியிட்டிருக்கக்கூடிய புத்தகம் தான் ‘Karunanidhi A Life’! இந்தியாவின் தலைசிறந்த பொரு ளாதார அறிஞர்களில் ஒருவரான, நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முனைவர் ஜெயரஞ்சன் அவர்கள் எழுதி, கயல்கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம்தான் ‘A Dravidian Journey’! 

இவை புத்தகங்கள் மட்டுமல்ல; அறிவுக் கருவூலங்கள்! 

இந்த இரண்டு புத்தகங்களின்தமிழ் மொழி பெயர்ப்பு இன்று இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. இவை இரண்டையும் புத்தகங்கள் என்றல்ல; ‘அறிவுக் கருவூ லங்கள்’ என்றுதான்நாம் சொல்ல வேண்டும்! இவை தமிழினத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய, திராவிட இயக்கத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய கொடைகள் மட்டு மல்ல,‘போர்வாட்கள்’ என்றுதான் நாம் சொல்ல வேண்டும்!  

ஏனென்றால், இதனை எழுதியிருக்கும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்களாக இருந்தாலும் சரி, ஜெய ரஞ்சன் அவர்களாக இருந்தாலும், அவர்களெல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல; தமிழினத்திற்கும்  அறிவியக்க மான திராவிட இயக்கத்திற்கும் கிடைத்துள்ள புதையல்கள் என்று சொன்னால்கூட அது மிகையாகாது. 

யார் அறிவாளி என்பதற்கு இந்திய அறிவுலக மேதை யான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “எவர் ஒருவரின் அறிவு, அவர் வாழும் சமுதாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்தான் உண்மையான அறி வாளி!” என்று சொல்லி இருக்கிறார். 

அந்த வகையில் பார்த்தால், தங்களது அறிவையும், ஆற்றலையும், சிந்தனைத் திறனையையும் இந்தச் சமு தாயத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள்தான்நம்முடைய பன்னீர்செல்வன் அவர்களும், ஜெயரஞ்சன் அவர்களும்! 

‘ஒரு பேனா போராளி’ ஏ.எஸ்.பன்னீர் செல்வன்! 

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் தலைவர் கலைஞருக் குப் பிடித்த மிக நெருக்கமான பத்திரிகையாளர். சில பத்திரிகையாளர்கள் முதலமைச்சராக இருக்கும்போது மட்டும் நெருக்கமாக இருப்பார்கள், நெருங்கி வருவார்கள். பன்னீர்செல்வன் அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. தலைவர் கலைஞர் அவர்களுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அவர் மீது விமர்சன அம்பு எப்போதெல்லாம் பாய்கிறதோ, அதற்குப்பதில் சொல்வதற்கு முன்வரும் ஒரு பேனா 'போராளிதான்' நம்முடைய ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்கள். 

நடுநிலையான பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதை மட்டுமே தங்களது பணி என்றும், அதனால் சிலரிடம் கிடைக்கும் அங்கீகாரம்தான் தங்களுக்கான வாழ்நாள் பாராட்டென்றும் நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் உண்டு, எந்த காலத்திலும் உண்டு. அப்படிப்பட்ட காலத்தில், நேர்மறையாகப் பார்த்து எழுதி, நடுநிலையாளர்கள் மனதில் திராவிட இயக்கம் குறித்த சரியான பார்வையை விதைக்க பன்னீர்செல்வன் அவர்களின் ஆங்கில எழுத்துகள் பயன்பட்டிருக்கின்றன, தொடர்ந்து பயன்பட இருக்கின்றன.

நமது பன்னீர்செல்வன் அவர்கள் ‘தி இந்து’, ‘அவுட்லுக்’ உள்ளிட்ட முன்னணி ஆங்கில இதழ்களில் பணியாற்றியவர். 'தி இந்து' ஆங்கில நாளிதழில் “ரீடர்ஸ் எடிட்டராக” ஒன்பது ஆண்டுகள் இருந்தவர். பனோஸ் தெற்காசியா அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும், உலகளாவிய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ராய்ட்டர்ஸ் பெல்லோஷிப்புக்குத் தேர்வானவர். 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கக்கூடியவர். தற்போது சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆய்வுப் பிரிவுத் தலைவராக இருக்கக்கூடியவர். இப்படி எங்கே, எத்தனைபொறுப்புகளில் இருந்தாலும் தன்னைத் திராவிட இயக்கத்தவன் என்று பெருமையோடு பெருமைப்படுத்திக் கொள்வதிலே அவருக்கு ஈடு அவர்தான். 

நம்முடைய பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களைப் பற்றி நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை, அறிமுகம் தேவையில்லை. செய்தித் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அந்த அளவுக்கு அவர் வெகுமக்களிடையே பிரபலமாகி விட்டவர். பொய்யையும், புனைசுருட்டையும், அவதூறுகளையும் சொல்லி திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி வந்தவர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் 'மடார் மடார்' என்று தலையில் கொட்டிப் பதில் சொன்னவர் அவர், உண்மைகளை உரக்கச் சொன்னவர் ஜெயரஞ்சன் அவர்கள்தான்.

பொருளாதாரம் என்றாலே, சில ஆங்கிலச் சொற்களை வைத்துக் கொண்டு சிலர் மிரட்டினார்கள். ஆனால், அவர்களது சொற்களையே உள்வாங்கி, அவர்கள் மீதே திருப்பி எறியக்கூடிய வித்தைக்காரர் நம்முடைய ஜெயரஞ்சன் அவர்கள். இதுபோன்ற விவாதங்கள் வரும் போது, நானே பலமுறை அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறேன், நன்றி சொல்லி இருக்கிறேன்.

தி.மு.க. மீதான தாக்குதலை தடுப்பவர் பேராசிரியர் ஜெயரஞ்சன்! 

சோஷியல் மீடியா வளர்ந்து வந்த இந்த நேரத்தில் தி.மு.க. மீதான பொய்யான தாக்குதலை தடுத்த மாபெரும் கேடயம்தான் நம்முடைய ஜெயரஞ்சன் அவர்கள். இந்த அளவு சிந்தனைகளும் அறிவுக் கூர்மையும் கொண்டவர் நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைத்துதான், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவினுடைய துணைத்தலைவராக அவரை அரசின் சார்பிலே நாம் நியமித்தோம்.

இன்று அரசு கொள்கைவகுப்பதில், ஆலோசனைகளை வழங்குபவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

தமிழினத்தின் மேன்மையை எந்தவகையில் எல்லாம் செயல்படுத்த முடியும் என்று வழகாட்டுபவராக - அப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கக்கூடியவராக நம் முடைய ஜெயரஞ்சன் விளங்கிக் கொண்டிருக்கிறார். 

இத்தகைய ஆற்றல் வாய்ந்த இருவர் தங்களது அறிவுப் பங்களிப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை "கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" என்ற தலைப்பில் சந்தியா நடராசன் அவர்கள் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். தலைவர் கலைஞருக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இளையபாரதியின் வ.உ.சி. நூலகம் இதனை அழகாக வெளியிட்டுள்ளது.

தலைவர் கலைஞரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையான நூல்களில் இந்த நூலும் நிச்சயமாக இடம்பிடித்திருக்கிறது. ஏனென்றால் இது விமர்சனப் பார்வையுடன் அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பொதுப்படையான அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் படிக்கத் தக்க வகையில் செம்மையாக எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நம்முடைய ‘இந்து’ ராம் அவர்கள் சொன்னதுபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நிலைப்பாடுகள் பற்றி விரிவாக தனது நேரடி அனுபவங்களின் மூலமாக நம்முடைய பன்னீர்செல்வன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.

நவீன தமிழகம் உருவகப்படுத்தினால் அதுதான் கலைஞர்!

‘எதையும் தங்கும இதயம் இங்கே உறங்குகிறது’ என்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகத்தைக் காட்டி, “எனக்கும இங்கேதான் உறங்க வேண்டும்” எனக் கலைஞர் அவர்கள் மிக உணர்ச்சிவயமாகச் சொல்லும் பகுதி இந்த நூலில் வருகிறது. அதைப் படிக்கும்போது தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, அவர் விரும்பிய இடத்தைப்பெற்றுத் தர நடத்திய போராட்டம் இன்றைக்கும் என்னுடைய கண்முன் வருகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் யார் என்பதை இந்த நூலின் ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார். நவீன தமிழ்நாட்டை உருவகப்படுத்தினால் அதுதான் கலைஞர் என்று சொல்கிறார். இதைவிட யாராலும் சரியாக சொல்ல முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் அறிய வேண்டுமா? கலைஞரைப் பற்றிப் படித்தால் மட்டுமேபோதும். தலைவர் கலைஞர் அவர்கள் பல்லாயிரக்கணக்கான தனிமனிதர்களோடு தனது தனிப்பட்ட உறவைப் பேணி வளர்த்து வந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் கலைஞரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது என்கிறார்.

நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தில் திருக்குவளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன் - நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும் சிற்பியாக எப்படி மாறினான் என்பதை முழுமையாகச் சொல்லும் முதன்மை நூல்தான் இந்த நூல். இடையிடையே கலைஞருக்கும் ஏ.ஏஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கும் உரையாடல்கள் பல வருகின்றன. இது மிக அருமையாக இருக்கிறது. கலைஞரைப் பற்றிய பிற நூல்களில் இருந்து இந்த நூல் வேறுபடுவதற்கும், மேம்பட்டதாக இருப்பதற்கும் இது ஒரு முக்கியக் காரணம்.

"ஒவ்வொருவருக்கும் 3 வாழ்க்கை உண்டு. ஒன்று பொது வாழ்க்கை, இரண்டாவது தனி வாழ்க்கை, மூன்றாவது ரகசிய வாழ்க்கை...’’ என்று கொலம்பியா எழுத்தாளர் மார்க்வேல் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மார்ட்டின் கூறியதை பன்னீர்செல்வன் தலைவர் கலைஞரிடத்திலே சொல்லியிருக்கிறார்.

அப்போது கலைஞர் அவர்கள், ‘பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நான்காவதாக ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதுதான் அவர் வாழ விரும்பிய வாழ்க்கை’ என சொல்லியிருக்கிறார். எவ்வளவு ஆழமான, அழகான கருத்து. ஒருவர் எழுதும் தன் வரலாறு நூலில் அந்த நான்காவது வாழ்க்கை பற்றிப் புலப்படும்” என்று கலைஞர் கூறுகிறார். அதற்கு, ‘உங்கள் நூலில் நீங்கள் வாழ விரும்பிய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி எது?’ என்று பன்னீர்செல்வன் கேட் கிறார். அப்போது கலைஞர் சொல்கிறார், ‘அதை நீயே கண்டுபிடித்துக்கொள்’ என்கிறார் கலைஞர். 

தான் இல்லாத பிறகும் நினைக்கப்பட வேண்டும்!

தலைவர் கலைஞர் அவர்கள் வாழ விரும்பிய வாழ்க்கை என்ன என்று நான் சிந்தித்தேன்... தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்கள் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது. அதற்கான உழைப்பைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார்.

இதைவைத்துப் பார்க்கும்போது கலைஞர் அவர்களது வாழ்க்கை நிகழ்காலத்தில் நிறைவாகவே இருக்கிறது. இந்நூலை எழுதியமைக்காக ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞரது வாழ்க்கை மூலமாக தமிழ்நாட்டைப் பார்க்கும் வகையில் பன்னீர்செல்வன் அவர்களின் நூல் அமைந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வழியாக திராவிட இயக்கத்தைப் பார்க்கக்கூடிய நூலாக ஜெயரஞ்சன் அவர்களுடைய நூலும் அமைந்திருக்கிறது. தான் இதுவரை எழுதிய சில கட்டுரைகளை மொழிபெயர்த்து ‘திராவிடமும், சமூக மாற்றமும்’ என்ற தலைப்பில் ஜெயரஞ்சன் அவர்கள் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். இதனைக் கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திராவிடமும்சமூகமாற்றமும என்பது இந்த புத்தகத்தின் தலைப்பு. திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே அது திராவிடத்தால் விளைந்ததுதான். அவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்துமே கிராமத்தை, கிராமப்புற மக்களைப் பற்றியதாகவே அமைந்துள்ளது. பல கிராமங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, இவை திராவிட இயக்கம் கொண்டு வந்த பல்வேறு சமூகநலத் திட்டங்களால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மிகச் சரியாக அவர் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியும், அதிகப்படியான பொதுவிநியோகக் கடைகளைத் திறந்தும் - தலைவர் கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்கள் சமூகமாற்றத்துக்கு வழிவகுத்ததை ஆதாரங்களுடன் ஜெயரஞ்சன் அவர்கள் இதிலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதையும் ஜெயரஞ்சன் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

‘’சமூகச் சீர்திருத்தத்தை முன்வைத்துப் போராடிய தந்தை பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகள் பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆண்டாலும் தீண்டாமை நீடிக்கவே செய்தது” என்று தனது நூலில் 77-ஆவது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 

அந்த ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாமப்படுபட்டுக் கொண்டிருக் கிறோம். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம்.

அதனால்தான், ஜாதியின் பேரால் தொடக் கூடாது - கண்ணில் படக்கூடாது - தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. 

திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்! 

கல்வியும் படிப்பும், வேலையும் பதவியும் - ஒடுக்கப் பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் லகானைக் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்! கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயக மயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான்சமூகம்ஜனநாயக மயமாக வேண்டும்.

நமது திராவிட மாடல் கொள்கையில் அதனைத்தான் சொல்லி இருக்கிறோம். கல்வியில், தொழிலில், உள்கட்ட மைப்பில், சிந்தனையில் மட்டுமல்ல, சமூகத்திலும்சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லி இருக்கிறோம். 

"கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பற்ற அரசியலுக்கும் இனி ஆற்றல் அற்றுப் போகும்” என்று 1991-ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி சொன்னதாக பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.

கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் - சுயமரியாதைக்கும் - மாநில சுயாட்சிக்கும் மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப்போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி!  ஆற்றல் அற்றுப் போய்விடவில்லை என்பதன் அடையாளம்தான் இத்தகைய புத்தகங்கள்.

சுயமரியாதை - சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உருவாக்கவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் போல, ஜெயரஞ்சன் போல ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை. இதுபோன்ற புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதிகம் தேவை. ஜெயரஞ்சன் அவர்கள் ஏற்புரையாற்றும்போது குறிப்பிட்டுச் சொன்னார், ‘நீங்கள் கட்டளையிடுங்கள் என்று’ கட்டளையிட வரவில்லை, உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறோம்.

அதே நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டு கோளாக, தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும் - ஆங்கிலப் புத்தகங்களை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும. அது தான் உங்களுக்கு இருக்கக் கூடிய பெரும் கடமை. எனவே, இந்த நூல் வெளியீட்டு விழா என்பது உங்களது அறிவுப் பணியினுடைய தொடக்கக் காலம்தான். உங்களது அறிவுப்பணியை நீங்கள் இருவரும் மேலும் இதே வீரியத்தோடு மேலும் தொடர வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாய்ப்பிற்கு நன்றிகூறி என் உரையை நிறைவு செய்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment