ஒரு யுக்தி ஆராய்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

ஒரு யுக்தி ஆராய்ச்சி

01.07.1944 - குடி அரசிலிருந்து.... 

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது எமது கருத்து. இந்தக் கருத்துக்கு உதாரணங்கள் அவைகளிலேயே இருக்கின்றன.

அவதாரம்

விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர்களின் எதிரிகளை அதாவது மனுதர்மத்திற்கு விரோதமாயும், ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும், தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும், அழிக்கவும் சதி செய்யவும் ஏற்பட்டவைகள். அது போலவே சிவன் அவதாரமான சுப்பிரமணியனும் மற்றவர்களும். அதுபோலவே ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவைகள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சூரர், அசுரர், அரக்கர், இராட்சதர் என்கின்றவர்களைக் கொல்ல அழிக்க வந்தவர்கள் என்றே சொல்லலாம்.

ஆரியர்களின் தனிக்கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற்கடவுள். அதாவது, முதலில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும், ஸ்கந்தம் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட புராணம் ஆகவும் இருக்க வேண்டும். இவை விஷ்ணுவுக்கும், இராமாயணத்துக்கும் முந்தியதாயும் இருக்க வேண்டும். இராமாயணம் சமீப காலத்தில் கந்தபுராணத்தைப் பார்த்து சற்று திருந்திய காலத்திருத்தத்தோடு எழுதியதென்றே சொல்லலாம். பாரதம்கூட இராமாயணத்திற்கு முந்தியதாகவே இருக்க வேண்டும்.

எப்படி ஆயுதங்களில் கல், கவண், ஈட்டி, (வேல்)வில், துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, விஷப்புகை ஆகியவை ஒன்றிற்குப் பின் ஒன்று வரிசைக்கிரமமோ அதுபோல்தான்.

முதலில் சிவன், கந்தபுராணம், பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள், பாரதம், இராமாயணம் ஆகியவை என்று சொல்ல வேண்டும். சுரர், அசுரர் என்பவை எல்லாம் ஆரியர் - ஆரியர் அல்லாதவர் என்பதற்கு முதலில் ஏற்படுத்திக் கொண்ட (இட்ட) பெயர்களாகவும் தேவர்கள், இராட்சதர்கள் என்பவை பின்னால் ஏற்படுத்திக் கொண்ட பெயர்களாகவும் தெரிகின்றன. சிவன் முதற்கடவுள் என்பதற்கும் கந்தபுராணம் முதல் புராணம் என்பதற்கும் உதாரணம் என்னவென்றால்,

சிவன் கற்பிதம்

சிவன் கற்பிதம் மிக்க பழமையான காட்டுமி ராண்டி காலத்தியதாக இருக்கிறது. அதாவது தலை - சடையாகவும், ஆடை - மிருகத்தின் தோலாகவும், அணி (நகை) - பாம்புகள், எலும்புகளாகவும், புஷ்பம் - கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரம் - மண்டை ஓடு, ஆகாரம் - தேன், தினைமாவு கொழுக்கட்டையாகவும், ஆயுதம் - 1வது மழு, 2வது சூலம், இடம் - மலை, விளையாடுவது - சுடலை, பூசிக்கொள்வது - சாம்பல், ரூபம் (சாயல்) - அகோரம், வாகனம் - மாடு, குணம் - வெளிப்படையான இம்சை, நடனம் - காட்டுமிராண்டி ஆட்டம், சங்கீதக்கருவி - உடுக்கை, பெண் ஜாதி இதுபோன்றே, கோர ரூபமுள்ள காளி, அவள் வாகனம் - சிங்கம்; பிள்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற்றொன்றுக்கு யானைத்தலை விகார ரூபம்.

இந்த மாதிரியாக காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும், காட்டுமிராண்டி காலத்திய எண்ணங்களின்படியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறபடியால் சிவன்தான் முதலாவதாக சித்திரிக்கப்பட்ட கடவுளாக இருக்க வேண்டும் என்பது விளங்கும்.

கந்த புராணம்

அதுபோலவே கந்த புராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப் பட்டிருக்கிருக்கிறது.

ஆயிரம் தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்) சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும், இந்திரியத்தை ஆற்றில் விட்டதால் ஏற்பட்டான் என்றும், அந்த... மிஞ்சின இந்திரியம்தான் என்றும், நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும் மற்றும் பலவித ஆபாசமானதும் அசம்பாவிதமானதும் சிறிதும் அறிவற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் பாத்திரங்கள் அக்கினிமுகன், சிங்கமுகன், ஆட்டுமுகன் முதலிய இயற்கைக்கு மாறுபட்டவைகள். யுத்த முறை இந்திரன் குயிலாக மாறினான். சூரன் சக்ரவாகப்புள் குருவியாக மாறினான். இந்திரன் மயிலாக வந்தான். தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான், வேலால் குத்துதல், சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டி காலத்திய கற்பனையேயாகும்.

இந்திரனுடைய நிலைமையும், இராமாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனைவிட காட்டுமிராண்டித் தன்மை கொண்டதாகவும் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment