புதுமைப் பெண் திட்டம்: கல்லூரிகளில் மாணவிகள் குவிகின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரிகளில் மாணவிகள் குவிகின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,நவ.23-  உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது என முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (22.11.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியபோது குறிப்பிட்டதாவது,

 "இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல் லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்களென் றால், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால், உங்கள் ராணி மேரிக் கல்லூரிதான். இது 104 ஆவது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள்! எத் தனை தலைமுறையினருக்குக் கல் வியை, - அறிவை, - ஆற்றலை, - வேலைவாய்ப்பை, -தன்னம்பிக்கையை - வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக் கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச் சியாக இருக்கிறது. எனவே தான், இந்த ராணி மேரி கல் லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது, பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண் குலத்திற்கு ஒளிவிளக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு திட்டம் தீட்டப்பட்டது

பழம்பெரும் பெருமை கொண்டி ருக்கக்கூடிய, இந்த பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப் பட்டது. மேனாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை, நான் எப்பொழுதும் அப்படி பேசுவதும் கிடையாது. ஆனால் அன்றைக்கு இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று க.பொன்முடி சொன்னது போல, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட் டோம், போரிட்டோம். அப்போது இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், மேனாள் மாணவிகள், பேராசிரியர்கள், மேனாள் பேராசிரி யர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டி ருந்தார்கள். அதனுடைய உச்சகட்டமாக, பட்டினிப் போராட் டம் நடந்தது.

பட்டினிப் போராட்டம்

இந்த வளாகத்திற்குள் உட்கார்ந்து மாணவிகளெல்லாம் ஒரு மிகப்பெரிய பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். 

அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. கோபாலபுரத்திலிருந்து தலைவர் கலைஞர் அவர்கள், எங்களது சட்டமன்ற கட்சியின் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு செய்தியைச் சொன்னார்கள், சட்டமன் றம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வருகிற வழியிலே, கலைஞர் சொல்கிறார், வீட்டிற்கு வருகிற வழியில், ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாணவிகளை யெல்லாம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வாருங்கள். உங்களுடைய போராட் டத்திற்கு "திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும்" என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று எங் களுக்கு உத்தரவு போட்டார்.

உத்தரவை ஏற்று...

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும், பொன்முடி அவர்களும், இன்னும் சிலரும் இங்கே வந்தோம்.  கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட் டிருந்த மாணவிகளையெல்லாம் நாங்கள் சந்தித்தோம்.

நாங்கள் ஆதரவு தருவோம், நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஆனால், அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென் றோம்.    இரவு 12 மணிக்கு வேளச்சேரியில் இருக்கிறேன், வேளச்சேரியில் தான் என்னுடைய வீடு. போலீஸ் வந்து விட்டது.  என்னையும், பொன்முடி போன்றவர் களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையில் அடைத் தார்கள். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம். இங்கேகூட கல்லூரி முதல்வர் அவர்கள் சிறையில் துன்பப் பட்டார்கள் என்று சொன்னார்கள், துன்பப்படவில்லை, மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். அதை துன்ப மாக நாங்கள் கருதவில்லை. உங்களுக்காக, மாணவி களுக்காக நாங்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண் டோம்.

துணை நின்றதற்காக

ஒருமாத காலம் இருந்தோம்.  இந்தக் கல்லூரிக்காக, போராடிய மாணவி களுக்குத் துணைநின்றதற்காக, அதை நினைத்துப் பார்க்கின்றபோது, இது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக என்னைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கிறது.  ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் மீண்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கலைஞர் மாளிகை

இத்தகைய புகழ்பெற்ற இந்த ராணிமேரி கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் மாளிகை கட்டப் பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்தப் பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம்.  

'அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?' என்று கேட்ட காலத்தில், சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்த கத்தைக் கொடுங்கள் என்று சொன்னவர் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போன்ற சீர்திருத்த வாதிகளால்தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழத் தொடங்கியது. அந்தக் காலத்தில் எட்டு வயது - பத்து வயது பெண் குழந்தைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணங்களை குற்றச் செயல்கள் என்று சட்டம் போட்டிருக்கிறோம். இந்த நிலையை நாம் சாதாரணமாக அடைந்து விடவில்லை. எத்தனையோ பேர் மதம், கலாச்சாரம் என்ற பெயரில் போட்ட முட்டுக்கட்டைகளைக் கடந்துதான் இதை அடைந்திருக்கிறோம். இந்த அரங்கில் இன்று நாம் காணும் இந்தக் காட்சி நூற்றாண்டு காலப் போராட் டத்தின் விளைவு தான் இங்கே உங்களை காணுகின்ற காட்சி. பட்டத்தை வாங்கியிருக்கக்கூடிய உங்களைப் பார்க்கிற காட்சி.

மிக மிகச் சிறப்பு

இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளான ஆறு பெண்கள் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பது தான் மிக மிகச் சிறப்பு.

எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் - உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. இந்தத் திட்டத்தினால் இந்த ஆண்டு, ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவியர்கள் இதனால் பயன் பெற்றிருக் கிறார்கள் என்பதை பார்க்கிறபோது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு முதலாமாண்டு சேர்ந்த மாணவியரும் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளனர்.

தங்கி படிப்பதற்காக....

'புதுமைப் பெண்' திட்டத்தின் காரணமாக, இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டிருக்கிறது என்கிற தகவலும் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருக்கிறது, அது மகிழ்ச்சியை தருகிறது. அப்படி தங்களது கல்லூரிக் கனவை நனவாக்கிக் கொள்ள வரக் கூடிய மாணவிகள், இந்தக் கல்லூரியிலேயே தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித்தர வேண் டும் என்பது இந்தக் கல்லூரி நிர்வா கத்தின் கோரிக்கையாக இருப்பதாக நான் அறிந்தேன். எனவே, மாணவி யர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித் தரப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும் புகிறேன்.

நாமும் கல்லூரியில் படித் திருக்கிறோம் - ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்தத் தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த் தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள்.கடற்கரைச் சாலையில் இருந்து அறிவுச்சாலைக்குள் பயணிக்கப் போகக்கூடிய உங்களுக்கும், உங்களை இந்தக் கோலத்தில் கண்டு பெருமிதத்தில் திளைத்திருக்கும் உங்கள் பெற்றோர் களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள்" என்று அவர் பேசினார்.


No comments:

Post a Comment