அரக்கோணம், நவ 23 தலையணை மற்றும் போர்வை சுத்தமாக இல்லாததால் விரைவு ரயிலை அரக்கோணத் தில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
சென்னை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 12 மணி அளவில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயிலின் 6 ஏ.சி. பெட்டிகளில் இருந்த பயணிகள் போர்வை மற்றும் தலையணை சுத்தப் படுத்தப்படாமல் அழுக்காக இருந்ததாககவும், அதை மாற்றித் தருமா றும் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அரக்கோணத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. ஆனாலும் பயணிகள் ரெயிலை நிறுத்தி போர்வை மற்றும் தலையணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வசதி இந்த ரயில் நிலையத்தில் இல்லை என்றும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
No comments:
Post a Comment