சென்னையில் மழைக்கு இருவர் உயிரிழப்பு வீட்டின் சாளரம் இடிந்து பெண் சாவு, மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஒட்டுநர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

சென்னையில் மழைக்கு இருவர் உயிரிழப்பு வீட்டின் சாளரம் இடிந்து பெண் சாவு, மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஒட்டுநர் பலி

சென்னை,நவ.2- சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று  (1.11.2022) பெய்த கன மழையின் காரணமாக  வீட்டின்  சாளரம் (சன்ஷேடு) இடிந்து விழுந்து காய்கறி வியாபாரம் செய்யும் பெண் பரிதாபமாக பலியானார். இதுபோல, மின்சாரம் பாய்ந்ததில் வியாசர் பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

 சென்னையில் மழைக்கு ஒரே நாளில் இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனி பகுதியை சேர்ந்தவர் கபாலி (50). இவரது மனைவி சாந்தி (45) இருவரும் காய்கறி வியாபாரிகள். இவர்களுக்கு மன வளர்ச்சி குன்றிய விதயா (22), மணிகண்டன் (20) என 2 குழந்தைகள். இவர்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். நேற்று காலை 8 மணி அளவில் சாந்தி தனது வீட்டு அடி பம்ப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னலின் மேல் பக்கவாட்டில் உள்ள சாளரத்தின் சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் நிகழ்வு இடத்திலேயே சாந்தி தலையில் பலத்த காயமடைந்து துடிதுடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ரத்தம் அதிகம் வெளியேறியதால் சாந்தி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த புளியந்தோப்பு காவல் துறையினர், நிகழ்வு இடத்திற்கு வந்த சாந்தியின் உடலை மீட்டு உடற்கூராய் வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீட்டின் உரிமை யாளரான மணவாளன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். 

வியாசர்பாடி பி.வி காலனி 25ஆவது தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (52), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும் கவுதம், கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆட்டோவை புளியந்தோப்பில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

பி.வி காலனி 18ஆவது தெருவில் இறப்பிற்கு ஒரு வீட்டில் பந்தல் போட்டு இருந்தது. அதை தாண்டி தேவேந்திரன் வரும்போது அதிகப்படியான மழை பெய்ததால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. பந்தல் போடப்பட்டிருந்த சாமியானா கம்பியை பிடித்துள்ளார். அதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டித்தனர்.

தகவலறிந்த எம்கேபி நகர் காவல்துறையினர், நிகழ்வு இடத்திற்கு வந்த பொது மக்கள் உதவியுடன் தேவேந்திரனை மீட்ட போது அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை உடற் கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, தேவேந்திரனின் மகன் கவுதம், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் சாமியானா பந்தல் அமைத்த மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மழைநீரில் மின்சாரம் கசிந்து தேவேந்திரன் உயிரிழந்தாரா அல்லது சாமியானா பந்தல் அமைத்த கம்பியில் மின்சாரம் கசிந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். 

No comments:

Post a Comment