தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக் கூடியவை மூன்று! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக் கூடியவை மூன்று! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை,நவ.19- அரசு, தொழில திபர்கள், தொழிலாளர் ஆகிய முத் தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பெரிதும் உயரும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று (18.11.2022) நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப் போர் கூட்டமைப்பினுடைய நூற் றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது,

1920-ஆம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

திராவிட இயக்கத்தின் தாய் அமைப் பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன் முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920-ஆம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உரு வானது.

இத்தகைய நீதிக்கட்சியைத் தொடங் கிய வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள்தான், 1909-ஆம் ஆண்டு சென்னையில் வர்த்தகப் பிரமுகர்களை அழைத்துப் பேசி முதன்முதலாகத் தென்னிந்திய வர்த்தகக் கழகத்தை உரு வாக்கியவர் என்பதை உங்கள் அனைவருக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

 இதனை இங்கே நினைவூட்டக் காரணம் - சமூகநீதி வரலாற்றில் மட்டு மல்ல, சென்னை மாகாணத்தில் தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம் என்பதால்தான்.

இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் - சமூகவியல் மட்டுமல்ல, பொருளாதாரமும் - தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அந்த வகையில் நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினைப் பாராட் டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.

இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம்!

தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற் சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ் நாடு கேட்டுப் போராடியது.

தூத்துக்குடியில் இருந்த ஹார்வி ஆலையில் தொழிற்சங்கத்தை 1905-ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் உருவாக் கினார். அந்த மாவீரர் சிதம்பரனாருக்கு இன்று, நினைவு நாள். அத்தகைய முக்கியமான நாளில் நீங்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதும் மிகமிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது.

தூத்துக்குடி துறைமுகம் தூத்துக்குடி ஹார்வி ஆலை சென்னை பக்கிங்காம் கர்நாடிக் ஆலை - ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தது.

இதன் காரணமாக, தொழிலாளர் ஒற்றுமை மட்டுமல்ல - தொழிலாள ருக்கான சலுகைகள் - சட்டங்கள் ஆகி யவை உருவானது. இன்னொரு பக்கத் தில், தொழில் அதிபர்களும் தொழி லாளர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், தங்களது தொழில்களை வளர்க்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். அப்படி உருவானதுதான் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு!

தொழில் முதலீட்டாளர்கள் ஒருங் கிணைந்து, தங்கள் தொழில்கள் சிறந்து விளங்கவும், தொழிலாளர்களுடன் ஒரு சுமுகமான சூழ்நிலையில் கொண்டு செல்லவும் ணிதிஷிமி அமைப்பு உருவாகியது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் 15 பெரிய தொழில்துறை சங் கங்கள் கொண்ட 730 நிறுவன உறுப் பினர்களைக் கொண்டு இந்தக் கூட்ட மைப்பு முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண் டுள்ள இந்த தென்னிந்திய வேலை யளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. 

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன் னெடுப்புகளை எடுத்து வருவதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.

தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழிலதிபர்களை - தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி இத்துறையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் மூலமாக பல திட்டங்கள் - கல்வி, திருமணம், இறப்பு இழப்பீட்டுத் தொகை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், ஓய்வு இல்ல வசதி ஆகியவை வழங்கப்பட்டு வரு கிறது.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஓய்வு இல்லப் புனரமைப்பிற்காக நமது அரசால் தற்போது ஏழரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனர மைப்புப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்த வாரியத்தின் உறுப்பினராக இணைந்து, EFSI  தங்கள் பங்களிப்பை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் அமைதி யான, இணக்கமான சூழ்நிலைக்கு இது இன்றியமையாத ஒன்று!

தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை

இந்தக் கூட்டமைப்பு அனைத்து முக்கியத் தொழிற்சங்கங்களுடன் சிறந்த உறவை பேணிப் பாதுகாத்து வருகிறது. மேலும், தொழில்துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில், தொழிற் சங்கத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காக உங்கள் அனை வருக்கும் எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.

தொழில்துறையினருக்கும், தொழி லாளர்களுக்கும் இடையே சமரச முறையின் வாயிலாக சுமுகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறையானது நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

“தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை” (Ease of Doing Business)  என்பதை செயல்படுத்தி வருகிறோம். இது குறித்த தகவல்களைத் தொழி லாளர் துறையின் வலை தளத்தில் தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது தொகுத்து வழங்கி வருகிறது.

தொழிலாளர் நலன் - திறன் மேம் பாட்டுத் துறையின் குறிக்கோள்களுக்கு வேலையளிப்போர் கூட்டமைப்பும் இணைந்து பணியாற்றுவது இன்றி யமையாதது.

குழந்தைகள் காப்பகம் அமைத்து பராமரிக்க முடியாத தொழிற்சாலைகள் அதிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் பொது குழந்தைகள் காப்பகம் அமைத்துக் கொள்ள மகப்பேறு நல சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, வேலை யளிப்போர் பங்களிப்புடன் தொழி லாளர் நலத் துறையினால் வெற்றிகர மாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்கள் மன அமைதி யுடன் பணியாற்றவும், தங்கள் குறை களுக்கு உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டும், தொழிலாளர்களின் குறைதீர்க்கும் இணையதள வசதி தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறையினால் ஏற்படுத்தப்பட்டு, மேம் படுத்தப்பட்ட முறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது, வேலை யளிப்போர் தாக்கல் செய்யக்கூடிய ஆண்டறிக்கைகள் மற்றும் ஒருங் கிணைந்த பதிவேடுகள் ஆகியவற்றை எளிய முறையில் சமர்ப்பிக்கும் வகை யில், மேற்படி ஒவ்வொரு சட்டங்களின் கீழான நடைமுறையினை எளிமைப் படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மற் றும் வேலை யளிப்போருக்குத் தொழி லாளர் துறை யானது பல நன்மைகளைப் பயக்கும் வகையில் ஒரு பாலமாக செயல் பட்டு வருகிறது. 

இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாட்டுத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத் துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர்கள் - தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப் பிட்டார்.

No comments:

Post a Comment