9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் 26-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் 26-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

சிறிஅரிகோட்டா நவ 21 9 செயற்கைக்கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-54’ ராக்கெட் 26-ஆம் தேதி விண்ணில் சீறிப்பாய்கிறது.  விக்ரம் வரிசையில் 'விக்ரம்-எஸ்' என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சிறிஅரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்படு கிறது. இந்த ராக்கெட்டை 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற புத்தொழில் நிறுவனம் ('ஸ்டார்ட்-அப்') வடிவ மைத்திருந்தது

இந்த நிலையில் இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக் கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடு களில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும். அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக் கோள்கள்-4, துருவா விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், ஐ.என்.எஸ். பூட்டான் சாட், பிக்ஸெல் நிறுவனத் தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகியவை 8 நானோ செயற்கைக் கோள்கள் ஆகும். சிறிஹரிகோட்டா வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப் படுகிறது. 

இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல் படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2ஆ-வது மற்றும் 4-ஆவது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-ஆவது திட்டப்பணியாகும். இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவ தற்கான 'கவுண்ட் டவுன்' என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள், 25-ஆம்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment