தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக இருப்பதன் பின்னணி என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக இருப்பதன் பின்னணி என்ன?

-  சேலம் தரணிதரன்

2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள ஆறு சதவிகிதம் என்ற அளவுகோலைத் தாண்டிச் சென்றது. கடந்த 34 மாதங்களாகவே பணவீக்கம் இந்தியாவில் ஏறுமுகத்தில் உள்ளது. சில்லறைப் பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 7.79 சதவிகிதத்தை எட்டியுள் ளது.  உணவுப் பணவீக்கமானது குஜராத், ஆந்திரப் பிரதேசம், மேற்குவங்கம், அசாம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டது.

ஆனால் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின்  (National Sample Survey Organisation)  புள்ளிவிவரத்தின்படி, தமிழ் நாடு, கேரளம் போன்ற தென்மாநிலங்கள் பண வீக்கத்தை 5 சதவீதத்திற்குக் கீழாக, கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களின் பணவீக்கம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் உணவு பணவீக்கம் 4.1 சதவிகிதமாக உள்ளது. இது குஜராத்தை விட 8 சதவிகிதம் குறைவானது. காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களில் இன்னும் அதிக வேறுபாட்டைக் காண முடிகிறது. அது குஜராத்தில் 28 % ஆகவும் தமிழ்நாட்டில் 2.7% ஆகவும் உள்ளது. அதாவது குஜராத்தில் மே மாதம் ஒருவர் காய்கறி வாங்க ஆகும் செலவு ரூ. 1000 என்றால் அதே அளவு காய்கறி வாங்க இப்போது ரூ. 1280 செலவிட வேண்டி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இத் தொகை ரூ. 27 மட்டுமே அதிகரித்துள்ளது.

 மாநிலங்களிடையே நிலவும் இந்த ஏற்றத்தாழ்வைப் புரிந்து கொள்ள, பண வீக்கம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நுகர்வோர் விலை குறியீட்டு எண் (Consumer Price Index)  என்ற குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நுகர்வோரால் வாங்கப்படும் தேர்ந்தெடுக் கப்பட்ட பொருள்கள் மற்றும் சேவை களின் விலையில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் உணவு, எரிபொருள், உறைவிடம் மற்றும் மருத்துவம், போக்கு வரத்து ஆகியவை இந்தத் தேர்ந்தெடுக்கப் பட்ட பட்டியலின் கீழ் வருகின்றன.

உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்களுக்கு இப்பட்டியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அதாவது 45.8%. உறைவிடம் மற்றும் போக்குவரத்து ஒவ்வொன்றுக்கும் 10% அளவு. கல்வி மற்றும் மருத்துவத்திற்கு 5%.

இந்தக் கணக்கீட்டில் உணவு மட்டுமே அதிக முக்கியத்துவம் பெறுவதால் உணவுப் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றம் மொத்தப் பணவீக்கத்தில் கடுமை யான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உணவு மிகவும் அடிப்படையான அத்தியா வசியப் பொருளாகும். ஒரு ஏழைக் குடும்பத்தின் வருவாயில் கணிசமான பகுதி, அக்குடும்பத்தின் உணவுக்காக மட்டுமே செலவழிக்கப் படுகிறது

இந்த இடத்தில்தான் தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும்போது அதன் முக்கியமான தேர்தல் பிரச்சாரங்களில் ஒன்று, ”ரூபாய்க்கு மூன்று படி அரிசி” என்பது. 1960களில் இருந்த அளவுக்கு மீறிய உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு ரூபாய்க்கு ஒரு படி அரிசியை மக்களுக்கு வழங்கியது. பொது விநியோகத் திட்டத்தை முதன்முதலாகத் தொடங்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 1972ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தலையீடு இல்லாமல் உணவு தானியங்களை விநியோகம் செய்வதற் காக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைத் தொடங்கினார். இது போன்ற பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாக, தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வர்கள் சதவிகிதம் 4.89 % ஆக இருக்கிறது. தேசிய சராசரியோ 21 %ஆக இருக்கிறது.

தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்திற்கு என, சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவு தொகையை (ரூ. 9,500 கோடி) தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்திற்காகச் செலவிடு கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசின் கீழ் இத்தொகை 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டோடு ஒப்பிடும்போது குஜராத் செலவிடும் தொகை வெறும் 1500 கோடி மட்டுமே. அதுமட்டுமன்று; இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் (Universal Public Distribution System)  என்பதை நடைமுறைப்படுத்தி யுள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இத்திட்டத்தின்கீழ் இரண்டு கோடி பேருக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருட் களைப் பெறும் உரிமை பெற்றுள்ளனர். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டமே (Targeted PDS)  பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது இதில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமே உணவுப் பொருட் களைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவை யாகும். அனைவருக்குமான பொது விநி யோகத் திட்டம் உணவுப் பொருள் பதுக்கப்படுவதைத் தடுக்கிறது; வியா பாரிகள் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதைத் தடுக்கிறது; உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப் பாட்டில் வைக்கிறது. 2006ஆம் ஆண்டு திமுக அரசு ஒரு கிலோ அரிசியை, இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்தது. 2008-இல் அது ஒரு ரூபாயாக ஆனது. அதை அடுத்து ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு 2011ஆம் ஆண்டு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விலையில்லா அரிசியை அறிவித்தது.

தமிழ்நாட்டின் இல்லங்களில் சமைக்கத் தேவைப்படும் பொருட்களில் 70% பொருள்கள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன. எனவே சந்தையில் இந்தப் பொருட்களின் விலை அதிகரித்தாலும் அரசே அந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்கிறது. பொருட்களின் மொத்த கொள்முதல் விலை உயர்வடைந்தாலும், அது நுகர் வோர் வாங்கும் விலையைப் பெருமளவு பாதிப்பதில்லை. இதன் காரணமாகவே தமிழ்நாடு குறைவான உணவுப் பணவீக் கத்தைக் கொண்டுள்ளது. பிற மாநிலங் களின் உணவுப் பணவீக்கமோ இரட்டை இலக்கத்தில் இருக்கின்றது.

கல்வி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் நடைமுறையில் உள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளும் (Targeted Interventions)  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன. சாலைக் கட்டமைப்புடன் கூடிய பொதுப் போக்குவரத்து, மக்கள் ஒவ்வொருவரது பயன்பாட்டிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வாங்குவதைக் கட்டுப் படுத்தி உள்ளது. பேருந்து கட்டணங்களும் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப் படுகின்றன. ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் எரிபொருள் உயர்வு, பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் அதே அளவு பணவீக்கத்தைக் கொண்டு வருவதில்லை. தமிழ்நாட்டு மாணவர் களுக்காக அவர்களுடைய பெற்றோர் களால் செய்யப்படும் சராசரி செலவு மாதத்திற்கு ரூபாய் 2800 மட்டுமே. இதுவே இந்திய சராசரியில் ரூ.6916 ஆக உள்ளது.

தேவையற்ற விலையுயர்வு என்பது மறைமுக வரியைப் போன்றது. அது ஏழைகளின் வருவாயைப் பாதிக்கிறது. பணக்கொள்கையின் மீது மாநிலங் களுக்குக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தால், பொது விநியோகத் திட்டம் போன்ற நலத் திட்டங்களின் வாயிலாகவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அத்தியா வசியப் பொருட்களின் விலையுயர்வைக் கட்டுப்படுத்த முடிகிறது.

தமிழாக்கம்: வெற்றிச்செல்வன்

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29.09.2022


No comments:

Post a Comment