மதுரை, அக்.24 பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரிந்து கொள்ளாமல், அவர்களை கட்டாயப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்தவருக்கு மதுரை கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர். இந்த தண்டனையை ரத்து செய் யக்கோரி பாலமுருகன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், கீழமை நீதிமன் றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தனர். மேலும் பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரிந்து கொள்ளாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தக் கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப் படுவதாகவும், பின்விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் கொடூர மன நிலைக்கு ஆளாகுவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
எனவே கல்வி முறையில் நுண்ணறிவு அளவுகோலை காட்டிலும், உணர்வுபூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கருத்து கூறிய நீதிபதிகள், “இதே நிலை நீடித்தால் இளைஞர் எவ்வளவு தான் திறமையானவராகவோ, வெற்றியாளராகவோ இருந்தாலும் அவரால் உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ள முடியாது” என்றும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment