சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, தமிழர் எழுச்சி, பெண்ணுரிமையின் தலைமையகம் பெரியார் திடலே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, தமிழர் எழுச்சி, பெண்ணுரிமையின் தலைமையகம் பெரியார் திடலே!

பெரியார் இந்தியாவுக்கு மட்டுமல்ல - உலகத் தலைவர் 

அந்த முயற்சியில் நமது ஆசிரியர் ஈடுபட்டுவருகிறார்!

அதற்கு ஆக்கப்பூர்வமான உதவியை தி.மு.க. ஆட்சி செய்யும்!!

சென்னை,செப்.17- தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார் - அதனை வெளிப்படுத்தும் பணியை நமது ஆசிரியர் செய்துகொண்டுள்ளார். அதற்கு நமது ஆட்சி ஆக்கப்பூர்வமாக உதவி செய்யும் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டுவிழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (17.9.2022) காலை நடைபெற்றது. பெரியார் உலகம் அடிக்கல் நாட்டிவைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப் புரை வருமாறு,

“பெரியார் உலகம்” அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று எழுச்சியோடு உரையாற்றி மகிழ்ந்திருக்கக்கூடிய மானமிகு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே!

திராவிடர் கழகத்தினுடைய துணைத்தலைவர் அன்பிற் குரிய கலி. பூங்குன்றன் அவர்களே!

நிகழ்ச்சியிலே பங்கேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நேரு அவர்களே, வேலு அவர்களே, 

முத்துசாமி அவர்களே, சேகர்பாபு அவர்களே,  

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களே, பெரியகருப்பன் அவர்களே, கணேசன் அவர்களே, ராமச்சந்திரன் அவர்களே, திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களே, மனோ தங்கராஜ் அவர்களே, செஞ்சி மஸ்தான் அவர்களே, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்களே, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். இராசா அவர்களே! சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி அவர்களே, பரந்தாமன் அவர்களே,  ஜோசப் சாமுவேல் அவர்களே! சென்னை மாநகரத்தின் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி பிரியா அவர்களே, துணை மேயர்  மகேஷ்குமார் அவர்களே,  

காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய என்னுடைய அன்பிற்கினிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே!

மார்க்சிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மதிப்பிற்குரிய 

திரு. பாலகிருஷ்ணன் அவர்களே!

எனக்கு முன்னால் நன்றியுரை ஆற்றியிருக்கக்கூடிய திராவிடக் கழகத்தினுடைய  பொதுச் செயலாளர் அருமை சகோதரர் திரு. அன்புராஜ் அவர்களே!

மற்றும் வருகை தந்திருக்கக்கூடிய பெரியோர்களே! தாய்மார்களே!

திராவிடர் கழகத்தினுடைய நிர்வாகிகளே, தோழமைக் கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே, தொலைக்காட்சி, பத்திரிகையுலக நண்பர்களே, அன்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

தாய்வீட்டுக்கு வந்துள்ளேன்

கோட்டையிலே சமூக நீதியினுடைய உறுதிமொழியை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு பத்து நிமிடம் உரையாற்றிவிட்டு உங்களிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற  நிலையில் உங்கள் அனுமதியோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன், என்று சொன்னால் நான் எனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்றுதான் பொருள். தாய் வீட்டுக்கு மகன் வருவது ஆச்சரியம் அல்ல. பெரியார் திடலுக்கு வருவதன் மூலமாக, உள்ளபடியே சொல்கிறேன், நாங்கள் புத்துணர்ச்சி பெறுகிறோம், உற்சாகம் அடைகிறோம், எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்கிறோம். 

செப்டம்பர் 17 ஆம் நாள் அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக, அந்த நாளில் மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள்  அல்ல, என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம். ஆக, இப்படி அடிக்கடி வரக்கூடியவர்கள் நாங்கள். அடிக்கடி வருவதால்  எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள், இந்த வீட்டைச் சார்ந்தவர்கள், அந்த முறையில்தான் வந்திருக்கிறோம். 

தலைமையகம் பெரியார் திடலே!

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல, இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

சமூகநீதியின் தலைமையகமாக -

சமத்துவத்தின் தலைமையகமாக -

பகுத்தறிவின் தலைமையகமாக -

தமிழின எழுச்சியின் தலைமையகமாக-

பெண்ணுரிமையின் தலைமையகமாக - 

இந்தப் பெரியார் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவினுடைய சமூகநீதிக்காகவும் தலைமையகமாகத்தான் இந்தப் பெரியார் திடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் தொடங்கி, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தப் பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே நிச்சயமாக இருக்க முடியாது. இத்தகைய வரலாற்றைப் படைத்துக் காட்டியிருக்கக்கூடிய மானமிகு ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்திக் காட்டவே “பெரியார் உலகம்” என்பதை அவர் தொடங்கியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது பெரியார் திடல். அய்யா ஆசிரியர் அவர்கள் உருவாக்கியிருப்பது  பெரியார் உலகம். அத்தகைய உலகச் சிறப்புமிக்க பெரியார் உலகத்தின் அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது, நான்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் கொள்கை வாழக்கூடிய காலமெல்லாம் என் பெயரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இப்போதே நான் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன், பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறேன். 

சமூகநீதி நாள் என்ற அறிவிப்புகள் யாருக்குப் பெருமை?

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் - இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!  

அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள்,  உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல - உலகத் தலைவர் பெரியார்

இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல - உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் நிச்சயமாக பெறுகிறார்கள், அதில் எந்த சந்தேகமும் கிடையாது.  பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி, அப்படி தொண்டாற்றுகிற ஆசிரியரைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால், அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், 10 வயதிலேயே பகுத்தறிவின் பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதனால்தான் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று அண்ணா அவர்கள் அப்போதே சொல்லியிருக்கிறார். அதனால்தான் 90 வயதைத் தொடும்போது கூட அவர் உற்சாகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரமணி என்றால் வெற்றி மணி!

'வீரமணி என்றால் வெற்றி மணி' என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். 'நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான்'. இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள். அத்தகைய திசைவழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாக செய்யும். 

இதுவே தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி! 

அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம்!

உறுதிமொழி எடுக்க நான் கோட்டைக்குச் செல்கிறேன்.

நன்றி! வணக்கம்! 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment